ஆனால் சில நாட்களில் புத்தி பேதலித்த நிலையில் தெருவில் சுற்றினாள் என யாரோ அவளை இவன் மருத்துவ மனையில் கொண்டு வந்து சேர்த்திருந்தனர். அப்படி அவள் சேர்க்க பட்ட நேரம் இவன் அங்கு இல்லை. இவன் சென்று சேர்ந்தபோது அவளை சேர்த்தவர் யாரும் இல்லை.
அதன்பின்புதான் துவி இவன் மருத்துவமனைக்கான கடன்களை அடைத்திருக்கிறாள் என்ற விபரம் தெரிந்தது ஜேசனுக்கு. மீதி பணம் பற்றி தெரியவில்லை.
அப்படியானால் இங்கு வந்து இப்படி தங்க வேண்டுமென திட்டமிட்டு அதற்காக முன்கூட்டியே துவி மருத்துவமனைக்கு பணம் கட்டினாளா என்ற ஒரு கேள்வி எழுகிறது. அப்படியானாள் அவள் நடிப்பது உறுதியாகிறது.
ஒருவேளை தான நோக்கிலும் ஜேசன் மருத்துவ மனைக்கு உதவி இருக்கலாம் அவள்.
அல்லது துவிக்கு கூட ஜேசன் மேல் காதல் இருக்கலாம், அதன் வெளிப்பாடக இதை கொள்ளலாம்.
இதை எல்லாம் யோசித்து பார்த்தால், ஜெஷுரன் சொல்வது போல் துவி நடிக்கிறாள் என்பதுதான் இன்னும் அழுத்தமாக தோன்றுகிறது.
ஆனால் எது எப்படியோ இது நிரல்யாவுக்கு தேவையான முக்கிய தகவலை தரவே இல்லையே.
ஜெஷுரன் தவறு செய்யவில்லை எனில் ஆரணி எதையோ தவறாக புரிந்திருக்கிறாள். இதில், இந்த விஷயத்தில் எதை எப்படி தவறாக புரிந்து கொள்ள முடியும்???
யோசித்தபடி படுத்திருந்த நிரல்யா அவளை அறியாமல் தூக்கத்திற்குள் மாட்டிக் கொண்டாள்.
இருண்ட அறை, கரிய உருவம். தனியாக இருக்கும் இவள் முன் ஆக்டோ சூட் அணிந்து வருகின்றது. ‘ஜாஷ்’ என்றபடி இவள் அதன் முகத்தை பார்க்க, அந்த உருவமோ சிஸ் என்றபடி முகத்தை மறைத்திருக்கும் தலை கவசத்தை கழற்ற அது ஜெஷுரன்.
மீண்டும் இருண்ட அறை, மீண்டும் கரிய உருவம், தனியாக இருக்கும் ஒரு பெண் முன் ஆக்டோ சூட் அணிந்து செல்கின்றது. ‘அகன்’ என்றபடி அந்த பெண் அதன் முகத்தை பார்க்க, அந்த உருவமோ வெறிச் சிரிப்புடன் தன் முக கவசத்தை கழற்ற அருண் என யாரோ அலறும் சத்தம். வீல்ல்ல்ல்ல்ல்ல்ல்!!!!!!
எழுந்து அமர்ந்த நிரல்யாவிற்கு மனம் சமனபட சில நிமிடங்கள் தேவைபட்டன. கனவு.
உடல் தூங்கும். மனம் கூட சில நேரம் மயங்கும்...உள்ளிருக்கும் ஆவி எனும் உள்மனம் எப்பொழுதும் விழித்திருக்கும்.
இவள் ஜாஷை நினைத்து கொண்டு இருந்ததால் அங்கு வந்த ஜெஷுரனை ஜாஷ் என தவறாக புரிந்து கொண்டிருக்கிறாள்.
அதே போல் ஆரணி அங்கு ஜெஷுரனை மட்டும் எதிர்பார்த்து அவன் வீடு சென்றிருக்கிறாள், வந்தவனை ஜெஷுரன் என புரிந்து கொண்டிருக்கிறாள் ஆனால் உண்மையில் வந்தது கல்ப்ரிட். அருணாக இருக்க வாய்ப்பு. இப்படியா இவள் உள்மனம் யோசிப்பதன் வெளிப்பாடா இந்த கனவு??
கடவுளே வழி காட்டுகிறாரா?
லாஜிக்கலி இது ரொம்பவும் சரியாக படுகின்றது. ஒரே ஒரு விஷயத்தை தவிர. வந்தவன் முகமூடி அணிந்திருந்தால் ஆரணிக்கு துளி அளவாவது சந்தேகம் வந்திருக்குமே!!
ஆரணியை அழைத்தாள்.
“என்ன நிரு அண்ணி இந்த நேரம்??”
என ஆரம்பித்த ஆரணியிடம் தலை வாலின்றி நிரல்யா கேட்டது இதை தான்
“ஜெஷுரன் வீட்டுக்கு போனியே அப்ப அவர் மாஸ்க் போட்டுருந்தாரா”
:ஞே” என ஆரணி விழித்தது நிரல்யாவுக்கு தொலைபேசியில் கூட தெரிந்தது.
“அப்படியெல்லாம் இல்ல நிரு...இப்ப எதுக்கு இதெல்லாம்..”
ஆரணிக்கு இந்த விஷயத்தை குடைய வேண்டாமே என்று இருந்தது.
“மாடியில நான் பார்த்த எந்த ரூமிலும் லைட் எரியல...நான் ஒவ்வொரு ரூமா லைட் போட்டு பார்த்துட்டே....அதுக்குதான் ரூமுக்குள்ள போனேன்....அந்த குறிப்பிட்ட ரூம் ஸ்விட்ச் ஐ கண்டு பிடிக்க முன்னாடி..அவன்.......இருட்டும் அவனோட வக்ரமான பேச்சும்.....அதுதான் ரொம்ப நாளா கண்ண மூடினா ஞாபகம் வரும்.....ப்ளீஸ் நிரு இப்ப எனக்கு அதே ஞாபகமா இருக்குன்னு இல்ல....பட் இப்பவும் அத நினைக்க.....வேண்டாமே...ப்ளீஸ்”
ஆரணியின் குரல் கை கூப்பி கெஞ்சியது. நிரல்யா அடுத்து எதுவும் இதை பற்றி கேட்கவும் இல்லை, பேசவும் இல்லை. பதில்தான் கிடைத்துவிட்டதே!! ஆரணிக்கு பிடித்தவிதமாக பேசி விட்டு இணைப்பை துண்டித்தாள்.
ஆக அகனை எதிர் பார்த்து சென்றவள், இருட்டில் தான் அகன் என்று சொன்னவனை, அகன்தான் என்று நம்பி வெறுக்கிறாள். ஆனால் வந்தவன் கல்ப்ரிட்...அவன் பெயர் அருணாக இருக்கலாம்.
இதில் துவியின் பங்கும் பெரிதாக இருக்கிறது. அங்கு இருந்தது அகன் என்று சொல்லி ஆரணியை எதற்காக ஏமாற்றி கூட்டி போனாள் துவி? அதுவும் தன் அண்ணன் விரும்புவளை....தன் அண்ணனை விரும்புவளை?? ஏதோ இருக்கிறது...அந்த ரகசியம் துவியாவது அல்லது அந்த கொடூரனாவது வாய் திறந்தால் தான் வெளி வரும்.
ஆனால் இப்பொழுது முக்கியமான விஷயம், அன்று அங்கு இருந்தது ஜெஷுரனல்ல என ஆரணியை எப்படி நம்ப வைப்பது? அழுத்தமான ஆதாரம் வேண்டும்.
இதை ஆரணியை நம்ப வைக்க இருப்பது இரண்டு வழிகள்.
ஒன்று துவி நடந்ததை சொல்ல வேண்டும். இத்தனையாய் நாடகமாடி தன் அண்ணனை விரும்புவளை அடுத்தவனிடம் பலி இட்டிருக்கும் துவி இப்பொழுது மட்டும் மனம் மாறி உண்மை சொல்லுவாளாமா?
ஆனால் இப்பொழுது நிரல்யாவை அருணிடமிருந்து காப்பாற்ற விரும்புவதுபோல் நடந்து கொள்கிறாளே? ஏன்? அதிலும் ஏதாவது சதி?
துவி மனம் திருந்தி.... இப்பொழுது இருக்கும் நிலையிலிருந்து உண்மையை சொன்னால் கூட நம்ப முடியுமா? பைத்தியத்தின் உளறலாக கூட தோன்றலாம்.
அடுத்தது அந்த இடத்தில் அன்று இருந்தது அந்த கல்ப்ரிட் @ அருண் என வேறு ஆதாரம் எதையாவது காண்பிக்க வேண்டும். இதற்கு ஏறத்தாழ சாத்தியமே இல்லை.
என்ன செய்யலாம்??
நாள் விடிந்திருந்தது.
காலை தாமதமாக எழுந்தவள் முடிவு செய்து கொண்டாள். ‘இன்று நோ அட்வென்சர். இப்போதைக்கு ஜெஷுரன் விஷயத்த ஹேண்டில் செய்யட்டும். இன்னைக்கே ஆரணிட்ட இப்ப வரைக்கும் நடந்துகிட்டு இருக்கிற ஜெஷுரன் சம்பந்தமா இவளோட அட்வென்சர்ஸெல்லாம் சொல்லி, அவ சம்மதத்தோட ரக்க்ஷத்ட்ட ஆரணி, அருண் விஷயம் சொல்லனும். இப்படி ரக்க்ஷத்துக்கு தெரியாம வேலை செய்றது ரொம்பவும் கில்டியா இருக்குது அதோட இன்னைக்கு.நாள் முழுக்க ரக்க்ஷத்தோடதான், நேத்து ஈவ்னிங் கொஞ்ச நேரம் பார்த்தது. மிஸ் யூ டா”
அப்படி எல்லாவற்றையும் அவளே முடிவு செய்தால் போதுமா??
ஆட்ட நாயகன் ஆல்மைட்டி ஆட்டத்தை மாற்றினார்.
நிரல்யா குளித்துமுடித்து குளியலறைவிட்டு வெளி வருவதற்குள் இரு முறை அழைத்து ஓய்ந்திருந்தது தொலைபேசி. முடியை உலர்த்த துவங்கவும் அடுத்த அழைப்பு. சென்று எடுத்தாள்.
ஜெஷுரன்.
“நிரல்யா..... ஒரு எமெர்ஜென்சி.... எனக்கு உங்கள தவிர யாரையும் கூப்பிட முடியாத சூழ்நில....துவி விஷயம்....ரொம்பவும் அசிங்கமும்...அவமானமுமான நிலமை....லேடீஃஸ் யாருடைய ஹெல்ப்பாவது வேணும்...வேற யார்ட்டயும்.....இத...சொல்ல முடியல....நீங்கன்னா....புரிஞ்சுப்பீங்கன்னு.........உடனே ஹோட்டல் சீரா ரெசிடென்சி வரமுடியுமா.....ரூம் நம்பர் 12, ஃபர்ஸ்ட் ஃப்லோர்...கீழ இருக்கிற பார்டி ஹால்க்கு ஜஸ்ட் மேல...முடிஞ்ச வர எதையும் யார்ட்டயும் விசாரிக்காம வாங்க...நீங்க வர்றது யார்க்கும் தெரிய வேண்டாம்.....அவசரம்....ப்ளீஸ்...”