அவன் குரலில் இருந்த கெஞ்சலும் வலியும் உடனடியாக கிளம்பிச்செல்ல வைத்தது நிரல்யாவை. வேடனை நோக்கி பறந்தது வெள்ளைபுறா.
நேற்று ‘நீ’ வா’ போ’ என ஒருமையில் பேசியவன் இன்று மரியாதை பன்மையில் பேசுவது ஏன்? ‘வெளியே வராதே’ என படித்து படித்து சொன்னவன் மறுநாளே வரச்சொல்வதன் உள்நோக்கம் என்ன என்ற கேள்வியே கேட்காமல் உடன் சென்றது அவளது மனது. பெண்கள் உணர்ச்சி பூர்வமானவர்கள். உதவி கேட்பவர்களுக்கு உதவ உணர்ச்சியின் அடிப்படையில் முடிவுகள் எடுப்பார்கள் என்ற ஜாஷின் தத்துவம் உண்மைதானோ?
இவள் வீட்டிலிருந்து வெகு தொலைவில் மலை பாதையில் இருந்தது இவள் செல்ல வேண்டிய இடம்.
அந்த சீரா ரெசிடெண்சி,
பிறர் பார்வைக்கு உறுத்தா வண்ணம் சாதாரண வாகனம் போல், இவளுக்காக வந்திருந்த செக்யூரிட்டி வாகனம் சற்று தள்ளி வெளியே நின்றது அவளின் வார்த்தை படி.
தன் முகத்தை ஓரளவு மறைக்கும் வண்ணம் தன் கருநீல துப்பட்டாவில் முக்காடிட்டபடி உள்ளே சென்றாள். இவளை யாராவது கண்டு கொண்டார்களெனில் மீண்டும் துவியோடு ரகசியமாக வெளியேற முடியாது. ஏதோ அசிங்கமான நிலை என்று ஜெஷுரன் சொன்னானே!
தரை தளம் கண்ணியமாக இருந்தது.
பத்திரிக்கையாளர் பலர் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர். பதட்டமானது நிரல்யாவிற்கு. இவர்கள் பார்வையில் படாமல் துவியுடன் எப்படி வெளியேற?
படியேறி தங்கும் அறைகள் பகுதிக்கு வந்தாள்.
இப்படி இடத்தில் இந்த துவி என்ன செய்கிறாள்? யோசித்தபடியே முதல் தளத்தை அடைந்து அந்த குறிப்பிட்ட அறை கதவை தட்ட முதலில் கதவு திறக்கவில்லை. தன் மொபைலை தேடினாள், அப்பொழுதுதான் அதை அவசரத்தில் மறந்துவிட்டு வந்திருந்தது புரிந்தது.
அண்ணா நான்தான்...கதவை திறங்க...இவள் சொன்ன நொடி கதவு திறக்கபட சட்டென உள்ளிளுத்தான் ஜெஷுரன். அவளை யாரவது துப்பாக்கியால் துளைத்துவிட்டால் ..என்ற பயம் அவனுக்கு.
“என்ன நிரல்யா இப்படி செய்துட்ட....இங்க போய் வந்து நிக்க....?”
பதட்டமும், பரபரப்புமாக அவன் கேட்ட நொடி, தான் ஏதோ சதியில் மாட்டி இருப்பது புரிந்துவிட்டது தேடிச்சென்று கண்ணியில் கால்வைத்தவளுக்கு.
“நீங்கதாண்ணா...வர...சொன்னீங்க..?” என இவளும் “அந்த அருண் நாய்......அவன் வேலையா இருக்கும்.....உனக்கு ரொம்பவும் ஆபத்தேடா... “ என அவனும் ஒரே நேரத்தில் விளக்க நடந்தது புரிந்துவிட்டது இருவருக்கும்.
இப்பொழுது என்ன செய்ய? என இருவரும் நினைக்க நேரமே இல்லாமல் வெளியே வேகவேகமாக ஓடும் காலடி சத்தங்கள்,
“பகல்ல கூட ரெய்டு....”
இங்க கூட ரெய்டு வருவாங்களா?
ஏன்? தப்பு நடக்காத இடம்னு உலகத்தில ஏதாவது இருக்கா என்ன?
“போலீஃஸ்....”
“ஓடுறா மச்சி...மாட்டுனா அசிங்கமா போயிடும்”
“இவங்களுக்கு காசு வேணும்...அதுக்கு இப்படி ஒரு சீன்....”
பலரும் பலவற்றை பேசிகொண்டு ஓட இப்பொழுது இவர்கள் மாட்டினால் நிலமை என்னவாகும் என நிரல்யாவிற்கு புரிந்தது.
‘ஜெஷுரனோடு ரகசியமாக இவள் இந்த இடத்தில், இந்த சூழலில் இருந்ததாக, பத்திரிக்கையில் வந்தால்....அருகில் வரும் தேர்தல் நேரம்....பத்திரிக்கைகள் இதை சிறிய தகவலாகக்கூட விடப்போவதில்லை’
காவல் துறை இவள் மீது கை வைக்காவிட்டாலும், பத்திரிக்கை பந்தி பரிமாறமல் விடப்போவதில்லை.
பரிதவித்துபோனாள் நிரல்யா. இந்த பெயரையா இவள் அப்பாவிற்கு சம்பதித்து கொடுக்கபோகிறாள்????
ரக்க்ஷத்- அவனுக்கு இந்த செய்தி எப்படியாக இருக்கும்? ஜெஷுரனுடன் ஓர் அறையில் இருப்பதை பத்தி இவள் அவனிடம் குறிப்பிட்ட கதை என்ன? இப்பொழுது அதே ஜெஷுரனோடு ரகசியமாக இப்படி ஒரு விடுதி அறையில் இவள் நிற்பதென்ன???
அப்பாவும், ரக்க்ஷத்தும் இவளை நிச்சயமாக நம்புவார்கள். ஆனால் அவமானம், வேதனை....அது தலைமுறையை கூட வருத்துமே!
“நான் போறேண்ணா....நீங்க இங்கயே இருங்க...கண்கள் கட்ட...வாசலை நோக்கி இவள் நகர சட்டென குறுக்கே வந்து நிறுத்தினான் ஜெஷுரன்.
“அருண் ஆட்கள் பக்கத்திலயே கூட இருக்கலாம்....சூட் பண்ணாங்கன்னா...இல்ல கிட்நாப் செய்துட்டாங்கன்னா...தனியா போகாதே!” ஜெஷுரனும் பயங்கரமாக தவிப்பது நிரல்யாவிற்கு புரிந்தது.
ஒருவரும் சிந்திக்க நேரம் தராமல் சத்தமெழுப்பி தான் தட்டபடுவதை அறிவித்தது கதவு. மென் தட்டல். வந்திருப்பது நிச்சயம் காவல் துறை பிரதிநிதி இல்லை.
இருவரும் முதலில் உருவியது பிஸ்டலைத்தான். கதவை திறந்தால் அதன் பின் மறையும் விதமாக அவளை கதவிற்கு அருகில் நிறுத்திவிட்டு கதவை திறந்தான் ஜெஷுரன்.
எதிரில் நின்றது ரக்க்ஷத்.
“ரக்க்ஷு.....” ஜெஷுரன் ஆச்சர்யபட்டானாகில்,
இடம் பொருள் ஏவல் எல்லாம் மறந்து “ரக்க்ஷத்” என்ற கூவலுடன் ஓடிச் சென்று தன்னவனை கட்டி அணைத்து மன்னவன் மார்பில் மாலையானாள் மங்கை.
அவளது அத்தனை பரிதவிப்பிற்கும் முற்றுபுள்ளியிடும் முத்திரை மோதிரம் அவனது ப்ரசன்னம்.
மென்மையாய் அவளோடு அறைக்குள் நகர்ந்து, உள்ளே வந்து கதவை அடைத்து, அந்த கதவின் மீது சாய்ந்தான் ரட்சிக்க வந்தவன்.
“லயூ...இப்ப...இப்படி ஃபோட்டா வந்தா கூட நல்லாஇருக்காது” என்றான். முகத்தில் இருந்தது வெறும் குறும்பு மட்டுமே.
யார் இவன் உனக்கு? ஏன் வந்தாய் இங்கு? என்ன செய்கிறாய்? ஏன் மறைத்தாய்? எந்த கேள்வியும் கேளாமல்......
விழி விரிய அவன் முகம் பார்த்தாள். இவளை அவன் சந்தேக படாவிட்டாலும், குறைந்தபட்சம் கோபமாவது படவேண்டுமே! ம்கூம்!
“எம் ஹெச்...இப்படி அப்பட்டமா சைட் அடிக்கிறத அப்புறமா வச்சுகிடலாம்..... உனக்கு பதிலா உன் அண்ணன் வெட்கபட்டு வெளிய ஓடிற போறான்” ரக்க்ஷத் சொன்ன பிறகுதான் ஜெஷுரன் அங்கு நிற்பதை உணர்ந்தவளாய் விலகினாள்.
“நம்ம ஆமி ஃஸ்கூல் 4த் க்ரேட் ஸ்டுடெண்ட்ஃஸ் கீழ பார்ட்டி ஹால்ல இருக்காங்க, நாம . சாஹித்யா குட்டி பெர்த் டே செலிப்ரேட் செய்ய வந்திருக்கோம்.” சொல்லிய ரக்க்ஷத்தின் கைகளில் இருந்த இரு கிஃப்ட் பார்சல்களை அவள் அப்பொழுதுதான் கவனித்தாள்.
அந்த குழந்தை சாஹித்யா தன் பிறந்த நாளை பெரிதாக கொண்டாட ஆசை என ரக்க்ஷத்திடம் ஒரு முறை சொல்லியது நிரல்யாவிற்கு தெரியும். ஆனால் இவள் ஞாபகம் சரியானால் சாஹித்யா பிறந்த நாளுக்கு இன்னும் சில தினங்கள் இருக்க வேண்டும்.
இவன் என்ன செய்கிறான்? ஏதோ திட்டம்.
“லைஃப் த்ரெட்டனிங் சிச்சுவேஷன் இல்ல, இது வேற ப்ரச்சனை...சிரிச்சுகிட்டே இயல்பா வரனும்.” நடந்து கொள்ள வேண்டிய முறையை கடைசியாய் வந்தவன் விளக்கினான்.
தன் கையிலிருந்த பரிசு பெட்டிகளை அண்ணனும் தங்கையுமாக மாறி இருந்தவர் கைகளில் ஆளுக்கொன்றாக கொடுத்தான் ரக்க்ஷத்.
“பெர்த் டேக்கு வர்றவங்க இப்படித்தான் வெறும் கையோட வருவீங்களா” என்ற கிண்டல் வேறு. அவன் நடுவில் வர இருபுறமுமாய் இணைந்து நிரல்யாவும் ஜெஷுரனும் கையில் அந்த பார்சல்களுடன் அறையிலிருந்து வெளிபட்டனர். தரைதளம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள். புகை பட ஒளிவெள்ளம்.
காவல்துறையினர் ஒருபுறம். ரெய்டு நடக்கிறதா? அல்லது இந்த திடீர் விழாவில் அது தற்காலிகமாக நின்றுவிட்டதா தெரியவில்லை.