என்ன தவம் செய்து விட்டேன் – 10 - புவனேஸ்வரி கலைச்செல்வி
என்னவனே
இன்று நீ பிறந்த நாளா?
அல்ல உன் நினைவில்
மங்கை நான் பிறந்தநாளா?
ஏன் இப்படி உற்சாகத்தில் திளைக்கிறேன்
கண்ணாடி முன் நின்று தன்னை அலங்காரப்படுத்தி கொண்டே மனதில் சிலிர்த்து கொண்டாள் சாஹித்யா.
" ஹேய் வாலு! " என்று உற்சாகமாய் அழைத்து கொண்டு அறையில் நுழைந்த அருள்மொழிவர்மன் ஆச்சர்யத்தில் விழிகளை விரித்தான்.
" வாடா "
"என்னை கொஞ்சம் கிள்ளு சத்யா "
"ஓ யெஸ் " ௭ன்றபடி வேகமாய் கிள்ளி அவனை அலற வைத்தாள் அவள்.
" ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....சரியான குரங்குடீ நீ "
"குரங்கில் கூட சரி தப்புன்னு இருக்காடா "
" அது இருக்கட்டும்.,என்ன இது கோலம், மாரியம்மன் கோவிலில் கூழ் ஊத்த போறியா " என்றான், மஞ்சள் நிற புடவையை அணிந்திருந்தவளை பார்த்து.
"என்னடா, நல்லா இல்லையா? மாற்றிடவா? " புதிய சத்யாவை பார்ப்பது போல இருந்தது அவனுக்கு.
"என்ன மேடம், புது டெரஸ் ஜாலி மூட், அழகா இருக்கியான்னு கேள்வி வேற? நீ சரி இல்லையே! "நண்பனின் ஆராயும் பார்வையில் திணறினாள் சத்யா.
"ச்சீ போடா அப்படில்லாம் ஒன்றுமில்லை "
"என்ன லவ் ஆ " என்று அவளை கூர்ந்து நோக்கினான் அருள். மருந்திற்கும் அவன் கண்களில் கோபமில்லை.! உண்மையை தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே இருந்தது. தனக்காகவே வாழும் இவனிடம் எப்படி உண்மையை மறைக்க முடியும்? சட்டென உண்மையை சொல்லியே விட்டிருந்தாள் அவள்.
" தெரியல அரூ.! என்னால முடிவெடுக்க முடியல.. ஆன எனக்கு சந்தோஷை ரொம்பவும் பிடிச்சிருக்கு டா " என்றவளின் முகத்தில் நாணம் குடியேறியது.இமைக்கும்முன் அவளை தூக்கி தட்டாமாலை சுற்றினான் அருள்.
" ஹேய் கீழே இறக்கிவிடு பயம்மா இருக்கு " என்றவள் அலற அவள் போட்ட சத்தத்தில் மொத்த குடும்பமும் அறையில் நுழைந்தனர்.
" டேய் என்னடா நடக்குது? " என்றார் ரவிராஜ்.
" அப்பா இந்த கள்ளி என்ன வேலை பண்ணி இருக்கா தெரியுமா? சுமிம்மா இந்த நல்ல செய்தியை முதலில் உங்க கிட்ட தான் சொல்லனும் "
" டேய் அருள்,பிளிஸ் வேணாம் டா .. அய்யோ இவன் பேச்சை யாரும் நம்பாதிங்க " என்றவள் மீண்டும் முகம் சிவந்தாள். இதையெல்லாம் கவனித்து கொண்டிருந்த அர்ஜுன் தூரத்தில் இருந்தபடியே காற்றில் இதயத்தை வரைந்து காதலா என்றார். ஆமென அருள் கண்ணசைக்க
"யாரிடமும் சொல்லாதே " என செய்கை காட்டினார் அவர்.ஏனென்று காரணம் புரியாத போதிலும் நிலைமையை அழகாய் சமாளித்தான் அவன். அவன் சொன்ன செய்தியை கேட்டு சத்யாவும் ஆச்சர்யப்பட்டாள். காரணம் அவள் அந்த செய்தி அருளுக்கு தெரியாமல் வைத்திருந்தாள். அதென்ன செய்தி இதோ அருளே சொல்லட்டுமே.,
" முதலில் என்ன விஷயம் சொல்லு அருள்? " -சுஜாதா
" சொல்றேன் சொல்றேன்.. நம்ம சத்யா லூசு ஆசைப்பட்டதுபோல, நாம எல்லாருமே ஆசைப்பட்டதுபோல சத்யாவுக்கு லண்டன் டீரீனிட்டி மியூசிக் காலெஜ்ல சீட் கிடைச்சிருச்சு!!!!! " என்று குதூகலமானான் அருள்..
"அருள் உனக்கு எப்படிடா இந்த விஷயம் தெரிஞ்சது? " என்று கிசுகிசுத்தாள் சத்யா..
அவளை விநோதமாய் பார்த்து சிரித்தான் அவன்.
" மக்கு நானும் அப்பப்போ உன் இமெயில்ஸ் பார்ப்பேன்ல.. ஆமா நான்கு நாளாகியும் இத பத்தி நீ ஏதும் சொல்லலியே ஏன்? "
" ஜஸ்ட் லைக் தெட்.. உன்னை விட்டுட்டு போகனும்ன்னு தோணல. "
அவன் பதில் உரைப்பதற்குள் பெற்றோர் நால்வரும் அவளை வாழ்த்தி முத்தமிட்டனர்.
" நீ ஆசைப்பட்டது நடந்துருச்சு.. " என்று சிலாகித்தனர்.
அருளை லேசாய் முறைத்தாள் சாஹித்யா .. " அம்மா பசிக்குதம்மா " என்று அவள் முகம் சுருக்கவும் , சுஜாதா , சுமித்ரா இருவருமே சமயலறைக்கு சென்றுவிட்டனர் . அர்ஜுனனும் இப்போதைக்கு எதுவும் பேசவேண்டாம் என்றெண்ணி ரவிராஜை அழைத்துக்கொண்டு கீழ்தளத்திற்கு சென்றார் . மொட்டை மாடிக்கு அவனை தரதரவென இழுத்து கொண்டு போனாள் சத்யா ..
" ஹே லூசு , என்னடி ஆச்சு ?"
" இப்போ இந்த காலேஜ் விஷயத்தை யாரு உன்னை சொல்ல சொன்னது ? எனக்கு அங்க படிக்க பிடிக்கல .. நான் போக மாட்டேன் " என்று முகத்தை திருப்பி கொண்டு நின்றாள் அவள் .. அருளின் அகக்கண்ணில் சிறு வயது சத்யா தான் தெரிந்தாள் ..! அவளது பொருள் எதையாவதை எடுத்து வைத்துகொண்டு அவளை கோபப்படுத்தி அருள் ரசிக்கும்போதேல்லாம் இப்படித்தான் கை கட்டி முகத்தை திருப்பி கொண்டு நிற்பாள் அவள் . இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னும் மாறாமல் அப்படியே இருந்தாள் சத்யா ..
" என்ன லுக்கு விடுற நீ "
" ஹா ஹா , இன்னும் நீ மாறவே இல்லை சத்யா .. எப்போ டீ நீ திருந்த போற ?"
" திருந்துற அளவுக்கு நான் என்னடா தப்பு பண்ணிட்டேன் "
" ம்ம்ம்கும்ம்ம் இது ஒன்னு கேட்டு வெச்சிடு எப்போ பார்த்தாலும் .. சரி உனக்கு ஏன் அங்க போக பிடிக்கல ? London, Trinity Collegeல படிக்கிறது உன் கனவு தானே சதூ இப்போ என்னாச்சு ?"
" தெரியல அருள் . அப்போ நான் சின்ன பொண்ணு, ஏதோ ஆர்வகோளாரில் அங்க படிக்கணும்னு ஆசைபட்டேன் .. ஏ ஆர் ரஹ்மான் சார் படிச்ச காலேஜ்ல நாமளும் படிக்கணும்னு ஒரு ஆர்வம் . ஆனா அங்க போனா , உன்னைவிட்டு தூரம் போவேன்னு கஷ்டமா இருக்குடா.. நான் தனியா அங்க போயி என்ன பண்ண போறேன் ?"
" நீ ரொம்ப தப்பா திங்க் பண்ணுற சதூ .. எனக்கிது கொஞ்சம் கூட பிடிக்கல " என்றான் அருள் பட்டென . அவனை எதிர்த்து பேசாமல் அவன் என்ன சொல்ல போகிறான் என கேள்வியாய் பார்த்தாள் அவள் ..
" நட்பா இருந்தாலும் சரி , எந்த உறவா இருந்தாலுமே சரி அது நம்மளை முன்னேற்றி கொண்டு போகணுமே தவிர பின்வாக காரணமா இருக்கவே கூடாது. நீ சொல்லுறது உனக்கே அதிகப்படியா தெரியலையா ? படிக்கத்தானே வெளிநாட்டுக்கு போகப்போற நீ ? எத்தனை பேருக்கு இந்த மாதிரி வாய்ப்புகள் கிடைக்கும் ? உன்னுடைய எண்ணம் தான் என்ன ? கடைசிவரை என் கையை புடிச்சுகிட்டே எல்லாத்துக்கும் என்னை சார்ந்து இருக்க போறியா ? நீ இப்படி இருந்தா கண்டிப்பா சந்தோஷுக்கே என்னை பிடிக்காமல் தான் போகும் . அண்ட் அதற்கு காரணம் அவர் இல்லை நீதான் .. !"
" இவ்வளவு நாளா நான் அப்படிதானே இருந்தேன் அருள் ? அப்போ எல்லாம் நீ இப்படியா பேசின ? "
" இல்லைதான் .. உன் முகம் பார்த்து எனக்கு அப்படி சொல்ல மனசு வரலைதான் .. ஆனா நீ உன் எதிர்காலத்தை எனக்காக நீ விட்டு தருவது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா ? ஒரு பத்து வருஷம் கழிச்சு என் நண்பனுக்காக நான் எனக்கு கிடைச்ச வாய்ப்பையே தியாகம் பண்ணிட்டேன்னு சொல்லுவதற்கு உனக்கு பெருமையா இருக்கலாம் ... ஆனா, என் தோழியின் முன்னேற்றத்துக்கு நான் தடையா இருந்தேன்னு சொல்லிகிரதுல எனக்கென்ன பெருமை இருக்கு ?" என்றான் அருள் .. அவன் பேச்சில் இருந்த உண்மை அவளைச் சுட்டது . அமைதியாய் ஊஞ்சலில் அமர்ந்தாள் சாஹித்யா .. வழக்கம்போல அவள் முகம் வாடவும் தணிந்து விட்டான் அருள் .. ஆனால், அவள் இந்த முறை செல்லம் கொஞ்சவில்லை !