" சாரி டா அம்மு "
" நீ ஏன் சாரி சொல்ற ? என்மேல்தான் தப்பு .. ஆனா ஒன்னு புரிஞ்சுக்க அருள்"
" சொல்லு "
" உனக்கு கெட்டபெயர் வருகிற மாதிரி நான் எப்போதுமே நடந்துக்க மாட்டேன் " என்றாள் ..
" ம்ம்ம்ம்ம் , நானும் நீ அப்படி பண்ணுவன்னு சொல்ல வரல டா .. உனக்கொரு குட் நியுஸ் சொல்லட்டுமா ?"
" ம்ம்ம்ம் "
" நானும் உன்கூட லண்டன் வரேன் " என்றான் அவன் .. விழிகள் விரிய சந்தோஷமாய் அவனை பார்த்தாள் சாஹித்யா
" என்னடா சொல்லுற ? "
" உன் இமெயில் பார்த்ததுமே நானும் முடிவு பண்ணிட்டேன் படிக்கலாம்ன்னு "
" ஆனா , கம்பனி ? "
" வானதி , வளர்மதி இருக்காங்களே ? அப்பா கிட்டயும் பேசிட்டேன் ..தாராளமா போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டாரே "
" இதெல்லாம் எப்போடா பண்ணின ? ஒரு வார்த்தை கூட சொல்லலியே " என்று துள்ளி குத்தித்தாள் அவள் . " ஒரு சின்ன சர்ப்ரைஸ் தரலாம்னு நினைச்சேன் .. ஆனா மேடம்தாம் காதல் வலையில் விழுந்து எனக்கு பெரிய சர்ப்ரைஸ் தந்துட்டிங்க " என்றான் அவன். அவனது கேலியில் லேசாய் முகம் சிவந்தாள் சாஹித்யா ..
" அடடே இங்க பாருடா, குரங்குக்குட்டி வெட்கபட்டு இப்போதான் பார்க்கிறேன் " என்றான் ..
" டேய் அடி வாங்க போற நீ "
" அஹா ஹா .. அப்படியே தப்பிச்சுடலாம்னு நினைக்காதே .. முதலில் சந்தோஷை பத்தி சொல்லு " என்றான் அருள் . விழிகள் மின்ன, அவனை சந்தித்த தினத்தை நினைவு கூர்ந்தாள் சாஹித்யா . இது தனது தோழியின் வாழ்க்கை என்பதால், முகத்தில் விளயாட்டுத்தனும் காட்டினாலும் ஆராயும் யோசனையுடனேயே அவளது பேச்சை உள்வாங்கினான் அருள் ..
"வணக்கம் வணக்கம் வணக்கம்
என் அப்பாவுக்கு வணக்கம்
வணக்கம் வணக்கம் வணக்கம்
என் அம்மாவுக்கும் வணக்கம்
அண்ணனுக்கு முதல் வணக்கம்
எனக்கது அர்த்தமுள்ள குரு வணக்கம்..... அண்ணனுக்கு வணக்கம் " என்று பாடியதையே மீண்டும் மீண்டும் பாடினான் சந்தோஷ். அவனது குறும்பில் சிரிப்பு வந்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் முகத்தை கடினமாக்கினான் சுபாஷ். உணவு தட்டில் கோலம் போட்டபடி சாப்பிடாமல் அமர்ந்திருந்தான் சந்தோஷ் . அடிக்கடி சுபாஷின் முகத்தை அவன் பார்க்க, சுபாஷோ இந்த உலகில் அதிமுக்கியமான வேலை தோசை உண்பதுதான் என்பது போல, நிமிர்ந்தே பார்க்காமல் இருந்தான். அங்கு நடக்கும் நாடகத்தை பார்த்து தனக்குள்ளேயே சிரித்து கொண்டார் ரகுராமன் ..
" ஜானும்மா "
" என்னங்க ?"
" இன்னொரு தோசை கொண்டு வாம்மா " என்றவர் தன் மருமகளின் பக்கம் திரும்பினார் ..
" ஏம்மா சைந்தவி "
" சொல்லுங்க மாமா ?"
" என்ன இன்னைக்கு நம்ம வீட்டில் யாரவது மௌன விருதம் இருக்கிறாங்களா ?"
" அதெப்படி மாமா, நம்ம வீட்டில் பக்தி மான் மூணு பேரு தான் , நீங்க நான் அத்தை .. நம்ம மூணு பெரும் அப்படி இல்லை .. என் கணவருக்கு உழைப்பும் பெற்றவர்களும்தான் கடவுள் , சந்தோஷ் வாயை மூடாத விளயாட்டு பிள்ளை .. அதுனால அப்படி ஒரு விரதம் எடுக்குறதுக்கு வாய்ப்பே இல்லை " என்று அனைவரையும் பற்றியும் பிட்டுப்பிட்டு வைத்தாள் சைந்தவி ..
" அப்பறம் ஏனம்மா நம்ம வீட்டு சூர்யாவும் கார்த்தியும் இன்னைக்கு ரொம்ப பம்முறாங்களே என்னவாம்? "
"ஹா ஹா .. அதுவா மாமா, எப்பவும் நம்ம கார்த்தி (சந்தோஷ்) பிறந்தநாளுக்கு நம்ம சூர்யா தானே முதலில் வாழ்த்து சொல்லுவார்.. இந்த முறை லேட் ஆகிடுச்சாம் " என்றவள் கணவனின் சூடான பார்வையைத் தவிர்த்தப்படி அத்தை தந்த சூடான பாலை அருந்தினாள்.
" அடடே இது ரொம்ப தப்பாச்சே , ஆமா இதில் குற்றவாளி யாராம்?"
" பிறந்தநாள் பேபி மேலதான் தப்பாம் "
" ஆக அண்ணனும் தம்பியும் இன்றைக்கு பேசிக்க மாட்டாங்க அப்படி தானே? நல்லதா போச்சு! வீடாச்சும் அமைதியா இருக்கும் " என்றவரின் கைகளில் இருந்த காபியை சட்டென பிடுங்கினான் சுபாஷ்.
"டேய் சந்தோஷ், நீ அவர் தட்டில் இருக்குற தோசையை எடுடா! போதும் பெரிய மனுஷர் சாப்பிட்டது.." என்றான் சுபாஷ்.
"அதானே அண்ணா! ஏதோ சின்ன பசங்க முறுக்கிக்கிட்டு நின்னா, சமாதானம் பண்ணி விடுவோம்ன்னு இல்லாமல் முறுகலா தோசை சாப்பிட்டுகிட்டு வேடிக்கை பார்க்கிறார் " என்றான் சந்தோஷ் பரிமுதல் செய்த தோசையை சாப்பிட்டுக்கொண்டே!
" அவர் கிடக்கிறார்..நீ வாடா என் செல்ல தம்பி! நம்மல யாராலும் பிரிக்க முடியாதுன்னு இவங்களுக்கு தெரியல. ஹேப்பி பெர்த்டே டா தம்பி " என்றபடி தனயனை தழுவி நின்றான் சுபாஷ்.
"தேக்ங்ஸ் அண்ணா " என்றவாறே தந்தையை பார்த்து பெருமையாய் சிரித்தான் சந்தோஷ் ..
" பார்த்திங்களா அப்பா, என் அண்ணாவையும் என்னையும் எப்பவும் பிரிக்கவே முடியாது .. " என்றான் அவன் ..
" ஆமா அப்பா , இந்த சகுனி வேலையை எல்லாம் எங்ககிட்ட வெச்சிக்க கூடாது சொல்லிட்டேன் " என்று சுபாஷும் இணைந்து கொண்டான் .. மனதிற்குள் இருவரையும் ரசித்து கொண்டவர், வெளியில் ஏதோ தூசி தட்டிவிடுவது போல முகபாவனை செய்தார் ..
" அட போங்கடா டேய்! நீங்க ரெண்டு பேரும் இப்படி ஒட்டி உறவாடத்தான் நானும் என் மருமகளும் மினி நாடகம் போட்டோம் " என்றார்.
சைந்தவியும் ஆமாமென தலையை உருட்டவும்
" நல்ல மாமனார் , நல்ல மருமகள் " என்று சிலாகித்து கொண்டனர் இருவரும் ..
" ஆமாடா , நல்ல மருமகள்தான் .. என் மருமகளுக்கு என்ன குறைச்சல் ? உனக்குன்னு ஒருத்தி வருவாயில்ல , அப்போ பார்த்துக்குறேன் . அதுக்கு பிறகு தெரியும் நீ அண்ணாவின் தம்பியா , இல்ல மனைவியின் கணவனா ?" என்று கேலி செய்தார் ரகுராமன் . நேற்றிரவு சாஹித்யாவிடம் பேசியதையும் , தன் மனதில் காதல் இருப்பதையும் சுபாஷிடம் சொல்லி இருந்தான் சந்தோஷ் . அதன் விளைவாய் , இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உண்மையை அம்பலப்படுத்தினான் சுபாஷ் ..
" அதெல்லாம் என் தம்பி சொக்க தங்கம் மாதிரி ஒரு பெண்ணை பார்த்துட்டான் " என்றான் அவன் பட்டென ..