அதே நேரத்தில் அங்கே சஞ்சாவின் வீட்டில் அவனது அறைக்கு செல்வதற்கு ஆயத்தமானாள் அஹல்யா. உள்ளத்தின் ஓரத்தில் குடிக்கொண்டிருந்த அந்த உறுத்தல் இன்னமும் மறைந்த பாடில்லை.
'வேண்டாம் இதெல்லாம் எனக்கு வேண்டாம். எனக்கு இதற்கெல்லாம் தகுதி இல்லை...' புறப்பட ஆரம்பித்த அழுகையை அடக்கிக்கொண்டாள். கொஞ்ச நாளாகவே சஞ்சாவின் புன்னகையை அவனது அன்பை தேடி அவள் மனம் அலைபாய்ந்தது நிஜம். ஆனால் இப்படி திடீரென ஒரு திருமணத்தை கனவிலும் எதிர்ப்பார்க்க வில்லை அவள். அவர்களது அறைக்குள் அவள் நுழைந்து அவள் கதவை சாத்திய நொடி அவளை பாய்ந்து அணைத்திருந்தான் சஞ்சா.
அவள் திடுக்கிட்டு தடுமாறி 'வேண்டாம் சஞ்சா ப்ளீஸ் விடு... எனக்கு பிடிக்கலை...' தனது பலத்தை கூட்டி அவனை தள்ளிவிட்டு வேகமாக சில அடிகள் பின்னால் நகர்ந்து புரள புரள இருந்த புடவை முந்தானையை அவளே மிதித்து பின்னால் இருந்த மேஜை மீது விழுந்து அதன் மேல் இருந்த பால் சோம்பு கீழே விழுந்து உருண்டு ஓட, பழங்கள் சிதறி ஓட அதற்குள் அவன் வந்து அவளை தாங்கி தனது தோள் மீது சாய்த்து கொள்ள, அதில் அப்படியே முகம் புதைத்தாள் அஹல்யா.
'அம்மாடி...ஆரம்பமே அதிரடியா இருக்கே...' சிரித்தான் சஞ்சா 'ஒண்ணுமில்லை... ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்...'
'எனக்கு இதெல்லாம் வேண்டாம் சஞ்சா' சில நொடிகள் கழித்து அவனை விட்டு விலகியபடியே சொன்னாள் அஹல்யா.
'எது வேண்டாம்???"
'எதுவுமே வேண்டாம். எனக்கு இதுக்கெல்லாம் தகுதி இல்லை. நான் தூங்க போறேன்'
'எங்கே??? நீ கீழே படுத்திட்டு நான் கட்டில்லே படுத்திட்டா? உன் மனசு மாறுற வரைக்கும் நான் வெயிட் பண்ணனுமா????. இந்த கதை ரொம்ப போர்டி. நானே இதே கதையிலே ரெண்டு படம் நடிச்சிட்டேன். தேவை இல்லாம நீயே உன்னை ரொம்ப குழப்பிக்காதே....'என்றபடி கட்டிலில் சென்று படுத்துக்கொண்டான் சஞ்சா.
ஏற்கனவே நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சு தான் வெச்சிருந்தோம். நடுவிலே ஏதோ சில தப்புகள் நடந்து போச்சு... அதை மறந்திடலாம். 'நீ என் பக்கத்திலே வா அல்வா துண்டு உனக்கு சில விஷயங்கள் எக்ஸ்ப்ளைன் பண்றேன் '
'வேண்டாம்... சஞ்சா... எனக்கு பழசு எதுவுமே மனசிலே இல்லை.... எந்த ஆசையும் இல்லை... மரக்கட்டை மாதிரி... உனக்கு நான் வேண்டாம்.... ப்ளீஸ் சஞ்சா நான் தூங்கணும் ...... ' கட்டிலின் இன்னொரு ஓரத்தில் அவனுக்கு முதுகு காட்டிப்படுத்துக்கொண்டாள் அஹல்யா.
'ஹேய்... மரக்கட்டை.... உனக்கு ஒரு சாலெஞ். காலையிலே வரைக்கும் நீ என் பக்கம் திரும்பி பார்க்க கூடாது. அப்படி பார்த்தேனா அதுக்கு அப்புறம் நான் சொல்றதை தான் நீ கேட்கணும் சம்மதமா? என்றான் சஞ்சா.
'நான் கண்ணை கூட திறக்கமாட்டேன்... குட் நைட்...'
அதே நேரத்தில் அங்கே ரிஷி குழந்தையை தூங்க வைத்திருக்க யூ ட்யூப்பை புரட்டிக்கொண்டிருந்தவள் கொஞ்சம் திகைத்து போனாள் அவள் கண்ணில் பட்டது அந்த வீடியோ.
'ஆக்டர் ரிஷி பிரேக்கிங் டெளன் அட் தி ஹாஸ்பிடல்..' என்று பெயரிடப்பட்ட அந்த வீடியோ.. அருந்ததி மருத்துவ மனையில் இருந்த போது அவளை பார்க்க ரிஷி வந்த சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்க வேண்டும் அது. யாரோ பதிவேற்றி இருக்கிறார்கள் அதை. ஓட விட்டாள் அந்த காட்சியை.
குழந்தையை கட்டிலில் படுக்க வைத்து விட்டு நிமிர்ந்தவனின் பார்வையும் மடிக்கணினியிலேயே பதிய, இமைக்க மறந்தான் அவன்.
கார் வந்து நிற்கிறது. கீழே இறங்குகிறான் சஞ்சா. அவன் பின்னால் ரிஷி. நடையிலேயே கொஞ்சம் தடுமாற்றம். கேமரா அவன் முகத்தை நெருங்க அவன் முகத்தில் பரவிக்கிடந்த அளவில்லாத வருத்தமும் சோகமும் நன்றாக தெரிகிறது..
சில அடிகள் எடுத்து வைக்க கட்டுப்படுத்த முடியாமல் உடைகிறான் அவன். பெருகும் கண்ணீரை துடைத்துக்கொள்ள முயல்கிறான் ரிஷி. சஞ்சா அவனிடம் ஏதோ சொல்ல சுதாரித்து நடக்கிறான். அந்த காட்சியை பார்க்க பார்க்க இங்கே அருந்ததியின் கண்ணில் நேரேற்றம்
'அருந்ததி.... நீ என் உயிர்டி. என் உயிர் என்னை விட்டு போயிடுமோங்கிற பயத்திலே கட்டினேன் தாலியை. வேறே என்ன சொல்ல??..' அன்று அவனை கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்த போது அவன் உதிர்த்த வார்த்தைகள் இப்போது அவள் செவிகளில் எதிரொலிக்கிறது. அவன் அன்று சொன்னது உண்மை என இந்த கண்ணீர் சாட்சி கூறுவதைப்போல் தோன்றுகிறது. அவளுக்கு.
அவனெதிரில் ஒரு மைக் 'சார்.... அருந்ததி கடைசியா உங்களை தான் பார்க்க வந்ததா சொல்றாங்களே உண்மையா.? உங்க மேலே இருந்த கோபத்தில தான் வேகமா கார் ஓட்டிட்டு போனாங்களாமே? இன்னும் அதிகமாக உடைகிறான் அவன். அப்படியே நிறுத்திவிட்டாள் அந்த காட்சியை. அதற்கு மேல் அதை பார்க்கும் சக்தி இல்லை அவளுக்கு.