“ஊர்ல அந்த பூங்காவனத்தார்ல இருந்து அவங்க குடும்பத்துல யாருமே இல்லையேமா…..அங்க யார பார்க்கப் போற? உனக்கு நவமணி வீட்டம்மாவ எப்படி தெரியும்….?” என அந்த பெண்ணிடம் பேசத் துவங்கினார்.
ஒரு பெருமூச்சுடன் அதிபன் காரை கிளப்பினான். நிச்சயமாய் இது அவனுக்கு பிடிக்கவில்லை…
“இவ்ளவு நேரம் இருந்த சைலன்ஸுக்கு இது எவ்வளவோ ப்ரவாயில்லடா அதி….. அம்மாவும் அப்பாவும் இப்போ ரிலாக்ஸா ஆயுடுவாங்கடா……” அபயன் தன் அண்ணன் மனம் உணர்ந்து பேசினான்.
அதே நேரம் அந்த அவளும் பொற்பரனின் திட்டத்திற்கு மறுத்தாள்…..” நோ நோ… நான் வீட்டுக்கு போறேன்….அங்க யாரும் இருக்க மாட்டாங்கன்னு தெரியும்….முதல்ல போய் வீட்டை க்ளீன் செய்து செட் பண்ணிட்டு கனி ஆன்டிய வர சொல்லத்தான் நான் முதல்ல வந்தேன்….” பின் தயக்கமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு“ஆன்டி இனிமே இங்கேதான் இருக்கப் போறாங்க….” இவர்களெல்லாம் என்ன சொல்லுவார்களோ என்ற தவிப்புடன் அவள் விழிப்பது அருகிலிருந்த பொற்பரனுக்கு தெரிகிறது.
அந்த நவமணி அதாவது பொற்பரனின் சித்தப்பா மகன் தன் குடும்பத்துக்கு பகையாளி குடும்பத்துப் பெண்ணை காதலித்து, தன் அப்பாவையும் பங்காளிகளையும் பகைத்துக் கொண்டு கல்யாணம் செய்து மனைவியோடு ஊரைவிட்டுப் போனவர். அதன் பின் அவர் பற்றி எந்த தகவலும் கிடையாது. இப்பொழுதுதான் இப்படி ஒரு பெண் வந்து இந்தமாதிரி தகவல் சொல்கிறது. அவள் சொல்லும் வகையிலேயே அனைவருக்கும் புரிகிறது அந்த நவமணி உயிருடன் இல்லை….இந்த கனி ஆன்டி என்ற கனிமொழி தனிமரம் என.
அதற்கு மேல் அதை குடைய விரும்பவில்லை பொற்பரன் இந்த சூழலில்.
“அதனாலென்னமா….இது அவங்க ஊரு…அவங்க பாட்டன் முப்பாட்டன் பூமி…..இங்க வந்து தங்க யார்ட்ட கேட்கனும்….ஆனா இப்போ அங்க தனியா போய் நீ என்ன பண்ணுவ…? என் பையனுக்கு கல்யாணம் பேசிமுடிக்க போறோம்….நீயும் வா, எங்க ஊர் பழக்க வழக்கத்தெல்லாம் பாரு….உனக்கும் நல்லா இருக்கும்….முடிஞ்சு வந்து உனக்கு என்ன உதவி வேணுமோ அதை நானே முன்ன நின்னு செய்து தாரேன்….நவமணி வீட்டுக்காரிக்காக நீ இவ்ளவு பண்றன்னா…..நீ அவட்ட தாயா பிள்ளையா பழகியிருக்கனும்…..அவங்களுக்கு மகள்ன்னா எனக்கும் அப்படித்தான….பாரு எனக்கு மூனும் பையங்க….பொம்பிளபிள்ள கிடையாது…..மகளா நீயும் வா….” இதற்குள் அதிபன் காரை செலுத்த தொடங்கி சில நிமிடங்கள் ஆகி இருந்தது.
இனி கதை எங்கெல்லாமோ போகும் ஆனால் அந்த வெள்ளகோழி உடன் வருவதை மட்டும் தடுக்க முடியாது என அவனுக்கு தெளிவாகவே புரிந்திருந்தது..
“பாட்டன் முப்பாட்டன்னா என்னது?” அதிபன் யூகித்தது போலவே அதே கோணத்தில் அந்த வெள்ளைக்கோழி கேள்விகளை ஆரம்பிக்க ஒரு பக்கம் எரிச்சலாகவும் மறுபக்கம் சரி இனி வருத்தும் அமைதி காருக்குள் இருக்காதென ஒரு நிம்மதியும் அவனுக்குள் பரவுகிறது.
அடுத்து சில நிமிடங்களில் அவனைத் தவிர அத்தனை பேரும் அந்த வெள்ளைக் கோழியிடம் ஒருவித சகஜநிலைக்கு வந்திருந்தனர்.
இப்பொழுது கார் தூத்துக்குடியில் பெண்வீட்டின் முன் சென்று நிற்கிறது. இந்தக் காரை தொடர்ந்து வரிசையாய் இவர்கள் உறவினரின் வாகனங்கள்.
அபயன், பொற்பரன், யவ்வன் என இவர்கள் முதலில் இறங்க…. இறங்கிய யவ்வன் தன் முன் உயர்ந்து நின்ற அந்த வீட்டை நிமிர்ந்து முழுப் பார்வை பார்க்கிறான். அவன் கை இயல்பாய் தன் முன் முடியை கோதிக் கொள்கிறது. அப்பொழுது அவனைப் பார்த்த அதிபனுக்கு அவன் நெர்வஸாக இருக்கிறான் என புரிகிறதுதானே.
காரிலிருந்து இறங்கி நேராக யவ்வனிடம் சென்றவன் “தேங்க்ஸ் யவி….” என்றபடி அவனது இரு கைகளையும் பிடித்துக் கொண்டான். சற்று உதடு துடிக்க இவன் கண்களைப் பார்க்கும் அதிபனை பார்க்க இன்னுமாய் தாக்குகிறது யவ்வனுக்குள்.
ஒருவிதமான உணர்ச்சிப் பிடிக்குள்தான் இருந்திருந்தான் அதுவரையுமே யவ்வன். இப்பொழுதோ இன்னுமாய்….
“நீ பண்ற இந்த உதவிக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலைடா….ஆனா நான் உன்னை எந்தவகையில கஷ்டபடுத்திட்டேன்னாலும் என்னை தயவு செய்து மன்னிச்சுடுடா….”
“ப்ச் அதி….என்ன நீ….? எனக்கு நீ லைஃப்ல செட்லாகனும்ன்றதை தவிர உன்மேல எந்த வருத்தமும் கிடையாது…..உனக்கு டைம் கொடுக்றதைப் பத்தி எனக்கு எந்த அப்ஜெக்க்ஷனும் இல்லை….ஆனா நீ பெர்மெனென்ட்டா இப்படி இருக்க நானும் அலவ் பண்ண மாதிரி ஆகிடுமேன்னுதான் எனக்கு வருத்தமே….” இப்பொழுது சின்னதாக விரக்தியாய் சிரித்துக் கொண்டான் அதிபன் பின் பேச்சை மாற்றும் விதமாக
“போடா இதெல்லாம் விட்டுட்டு உனக்காக காத்துட்டு இருக்ற பொண்ணப் போய் பாரு….இன்னைக்கு அளவுக்கு இவ்ளவு அஃபீஷியலா சைட் அடிக்க என்னைக்குமே பெர்மிஷன் கிடையாது பார்த்துக்கோ…எஞ்ஜாய் யுவர் டே…”
இந்த வார்த்தைகளில், அதுவரை இருந்த அத்தனை அழுத்தத்தையும் தாண்டி பாவாடை தாவணியில் அன்று அந்த நிலவினி துள்ளலாய் நடந்து வந்த காட்சி ஞாபகம் வருகிறது யவ்வனுக்கு. அத்தனையும் மீறி ஒரு ரசனை பரவுகிறதுதான் மனதில்…இதழிலோ விரிகிறது சிறு புன்னகை…. .