“ஆமா கல்யாணத்துக்கு பிறகு கூட என் வைஃப்… நான் பார்க்றேன்னு எல்லோரும் இருக்றப்ப நடுவீட்ல நிறுத்தி பார்க்க முடியாது……” சொல்லியபடி வந்து தோள்தட்டிய அபயனை போடா என்று ஒரு அடி வைத்த யவ்வன், அவனோடு சேர்ந்து வந்தவர்களை வரவேற்கும் ஜெயநாதன் அன்கோவிற்கு கரம் குவித்து ஒரு வணக்கத்தை செலுத்திவிட்டு அப்பாவின் கண்ணசைவை படித்து அதன்படி நிலவினியின் வீட்டு வாசலை நோக்கி நடக்க தொடங்கினான்.
தம்பிகளும் அப்பாவும் மற்ற உறவினர்களுடன் பெண் வீட்டை நோக்கி செல்வதைப் பார்த்த அதிபன் தன் அம்மாவைத் தேடி மீண்டும் தன் காருக்கு வந்தான். கூட அந்த வெள்ளகோழி வேற இருந்துச்சே….
“இல்ல ஆன்டி சாரி கட்டிடுவேன்….இல்ல இல்ல….நானே செய்துப்பேன்….ஓடி வந்தேன்ல அப்ப அதான்….மத்தபடி எனக்கு சாரி நல்லாவே கட்ட வரும்…..நீங்க கிளம்புங்க…” சற்றே மழலை சாயலில் கெஞ்சிக் கொண்டிருந்தாள் அவள்.
“என்னமோ ஏன் இவ்ளவு கூச்சம்….? நான் கட்டிவிட்டா கடைசிவரை கலையாம நிக்கும்….அங்க உள்ள கூட்டம் அதிகமா இருக்கும்…அங்க வச்சு சரி செய்துக்க கூட வழி இருக்காது….அதான் சொன்னேன்…”
உள்ளே நடக்கும் உரையாடல் அவள் கட்டியும் சுற்றியுமாய் வைத்திருந்த புடவையை ஒழுங்காய் கட்டும் காட்சி போய் கொண்டிருக்கிறது என புரியவைக்க….பார்வையை உள்பக்கம் செலுத்தாமல் காருக்கு முதுகு காட்டி நின்று கொண்டான்….
“இல்ல ஆன்டி…நானே…ப்ளீஸ் ஆன்டி…” திரும்பி போய்விடலாமா என்றிருக்கிறது அவனுக்கு ஆனாலும் அவளோடு அவன் அம்மா நிற்கிறாரே…எப்படிவிட்டுவிட்டு போவதாம்…..?
“அப்ப….சரிமா….நீயா பார்த்து கட்டிக்கோ…. இந்தா வர்றப்ப இதையும் போட்டுக்கோ….எங்க வீட்டு விழால பொண்ணுங்க எல்லோரும் நகை போட்டுப்பாங்க….” போச்சு…..இவன் என்ன பயந்தானோ அதே தான்….அம்மா நகை போச்சு…..
அதற்கு முந்திய நிமிடம் எதற்கு அந்த இடத்தைவிட்டு விலகிப் போகவேண்டும் என எண்ணினானோ அந்த காரணம் எல்லாம் மறந்து போக…. “அம்மா…கண்டவங்களையும் நம்பிகிட்டு…..அதுல நகைய வேற கழற்றி குடுத்துக்கிட்டு…..”என கத்தலாக அதட்டலாக சொன்னபடி அவன் கதவைத் திறக்க….
மறுபுறம் இருந்த அவனது அம்மாவிற்கு முதுகை காட்டி இவன் கதவை திறந்த புறமாக நோக்கி உடல்குறுக்கி குனிந்து நின்று தன் புடவை முந்திக்கு பின் வைத்துக் கொண்டிருந்தாள் அவள்… காருக்கு அருகில் தரையில் நின்றவன் பார்வைக்கு நேராக கிடைக்கிறது மில்லிமீட்டர் கணக்கில் மேடிட்டிருந்த அவளது வெண்ணை வயிறு….
ஹூம்…மூச்சைட்டக்க ஒரு அதிர்ச்சியோடு துள்ளி பின் வாங்கியவள் முகத்தில் இவனைக் கண்டதும், இவன் அவளைக் கண்டதை கண்டதும் அவமானமும் வேதனையுமான பாவம். சட்டென இவனுக்கு முதுகு காட்டி அப்புறமாக திரும்பிக் கொண்டாள்.
அதோடு அவசர அவசரமாக கையிட்டு முதுகை முழுவதுமாக மறைக்கும் படி புடவையை இன்னுமாய் மேலே இழுத்தும்விட்டாள்.
இவன் கைபட்ட கதவின் கண்ணாடி முழுவதையும் மறைத்து டவல் தொங்கவிட்டிருப்பதை அப்போதுதான் பார்த்தவன் உள்ளிருப்போருக்கு முதுகு காட்டி அவசரமாக திரும்பி நின்று கொண்டான்.
“சாரி…..ஆனா அம்மா……” அவனை முடிக்கவிடவில்லை மரகதம்…
“அதி நீ முதல்ல கிளம்பு…..” சீறினார் அவனது அம்மா….. “வீட்டுக்கு வந்தவங்களை நீ இப்படித்தான் நடத்துவியா….?”
.” சாரி மா….” அதற்கு மேல் என்ன சொல்லவென புரியாமல் தள்ளிச் சென்று நின்றான் அவன். இப்பொழுது அம்மாவுடன் அந்த வெள்ளைக் கோழியும் இறங்கி பெண் வீட்டிற்குள் செல்வது கண்ணில் படுகிறது.
ஒல்லியாய் உயரமாய்….பாந்தமாக கட்டிய அந்த லாவண்டர் நிற புடவையில்…அவளது அடிவயிற்றை தொட்டு ஆடிக் கொண்டிருந்தது அவனது அம்மாவின் நீள செயின்.
ப்ச்…இவன் அம்மா நிம்மதிக்காக எவ்ளவு நகைய வேணாலும் தொலைக்கலாம்……மனதை சமாதானபடுத்திக் கொண்டு, இவனும் இப்போது பெண் வீட்டிற்குள் நுழைந்தான்.
அந்த பெரிய வரவேற்பறை முழுவதும் இவர்கள் வீட்டு ஆட்களும், பெண் வீட்டு ஆட்களும் என நிரம்பி இருக்க….வாசல் அருகிலேயே நின்று கொண்டான் அதிபன்.
அதே நேரம் அந்த வெள்ளைக் கோழியோடு உள்ளே சென்ற மரகதத்தை ஒவ்வொருவராய் பிடித்துக் கொள்ள, ஒரு சூழலில் அவரை கூட்டிச் சென்று ஹாலின் நடுநாயகமாக வீற்றிருந்த அப்பாவின் அருகில் உட்கார வைத்தனர். அம்மா மட்டும் அப்பாவுடன் இருப்பதை கவனித்த அதிபனின் கண்கள் அதுவாக அந்த வெள்ளைக் கோழியை தேடியது. அவள் இவனுக்கு பக்கவாட்டில் சற்று தொலைவில் தான் நின்று கொண்டிருந்தாள். அவன் அம்மா கவனிக்காத நேரம் பார்த்து மெல்ல வீட்டை விட்டு அரவமின்றி வெளியேறினாள் அவள்.
‘திருடி…..இருடி வரேன்…..’ அவளை பின் தொடர்ந்தான் இவன்.