“என்ன சதி?... என்னாச்சு?... பேசினியா?... என்ன சொன்னாங்க ஜெய் அண்ணா?...”
தைஜூ சதியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க, சதியோ அமைதியாக இருந்தாள்…
தங்கையின் அமைதி இஷானுக்கு எதையோ உரைக்க,
“என்னாச்சுடா சதி?... என்ன சொன்னான் அவன்?..” எனக் கேட்டான்…
“சொல்லுடி… உன் அண்ணன் கேட்குறார்ல… சொல்லு….”
தைஜூவும் விடாமல் கேட்க,
“அவர் எதுவும் சொல்லலை… ரொம்ப வலிக்குதுன்னு நினைக்குறேன்… தூங்கிட்டார்…..” என்றாள் சதி, இருவரையும் பார்த்து….
“என்னது தூங்கிட்டானா?...” என இஷான் ஆச்சரியமாய் கேட்க, தைஜூவோ யோசனையில் ஆழ்ந்தாள்…
“ஆமாண்ணா….” என்றவளும் அப்படியே தொய்ந்து போய் சேரில் அமர, இஷான் அவளருகில் அமர்ந்தான்…
“டேய்… என்னடா?... இதுக்கெல்லாமா அப்செட் ஆகுறது?...” என தங்கையின் தலையை பாசத்துடன் வருடிக்கொண்டே அவன் கேட்க
“அட போடா லூசு அண்ணா… அவர் தூங்கி சரியாகட்டும்னு நானே வேண்டிட்டிருக்கேன்… நீ வேற… அப்செட் அது இதுன்னு உளறாத… அவர் நல்லா ரெஸ்ட் எடுத்தா தான் சீக்கிரம் குணமாவார்… அப்பதான் நானும் அவரை உண்டு இல்லைன்னு பண்ண முடியும்… அப்படி அவர் சீக்கிரம் குணமாகும்போது அவர்கிட்ட அடுத்து என்ன பேச, அவரை எப்படி மாத்தன்னு யோசிச்சிட்டிருக்கேன்… நீ என்னடான்னா சைக்கிள் கேப்புல சென்டிமெண்டலா பேசி ஸ்கோர் பண்ண பார்க்குற?... டேய்…. அண்ணா… நீ பொழைச்சிப்படா….” என சிரிப்புடன் முடித்தவளின் தலையில் செல்லமாக அடித்தான் இஷான்…
“வாலு… வாலு… அடங்குறியா நீ… பிசாசே….” என தங்கையை செல்லமாக திட்டிக்கொண்டிருந்தவன்,
“என்னடா எதுக்கு என் பொண்ணை திட்டுற?...” என்றபடி வந்த தந்தையைக் கண்டதும் சட்டென எழுந்து கொண்டான் இஷான்…
“அப்பா…. நீங்க….” என அவன் இழுத்துக்கொண்டிருக்க,
“இஷான்… ஜெய் எப்படிப்பா இருக்குறான்?... பயப்படும்படி எதுவும் இல்லையே…” என பதறியபடி கேட்ட பிரசுதியிடம், ஜெய்யின் தற்போதைய நிலையை அவனும் தெரியப்படுத்த அவர் சற்றே ஆசுவாசமடைந்தார்…
“ஆமாம்மா… உங்களுக்கு யாரு தகவல் சொன்னா?...”
“என் அண்ணன் தான் சொன்னார்… வேற யாரு சொல்லுவா?...” என்ற பிரசுதி சோமநாதன் வந்ததும் அவரிடம் சென்றார்…
“அண்ணா… ஜெய் எப்படி இருக்குறான்?... டாக்டர் என்ன சொன்னார்?... ஜெய் எந்த ரூம்ல இருக்குறான்… சொல்லுங்கண்ணா….”
கவலையோடு கேட்ட தங்கையிடம், அவன் தற்போது நன்றாக இருக்கிறான் என்ற தகவலை சோமநாதன் சொன்னதும், பிரசுதி ஜெய்யை பார்க்க விரும்புவதாக சொல்ல,
சோமநாதன் தங்கையையும், நண்பனையும் அழைத்துக்கொண்டு ஜெய் இருக்கும் அறைக்குள் செல்ல, அங்கே அவன் கண் மூடி படுத்திருந்தான்…
“தூங்குறான் போலம்மா…” என்ற தகப்பனின் குரல் கேட்டதும் பட்டென்று விழித்தான் ஜெய்…
“ஜெய்……” என்றபடி அவனருகில் அமர்ந்த பிரசுதியைப் பார்த்ததும்,
“நான் நல்லா இருக்குறேன்… எனக்கெதுவுமில்லை….” என அவன் எழுந்துகொண்டே சொல்ல முற்பட, அவனை எழ விடாமல் தடுத்த பிரசுதியின் கண்கள் கலங்கி போயிற்று…
சற்று நேர நலம்விசாரிப்பிற்குப் பிறகு,
“சரிப்பா… நீ படுத்து ரெஸ்ட் எடு… நாங்க வெளியே இருக்குறோம்…” என பிரசுதி நகர்ந்ததும், பிரசுதிக்கு பின்னாடி நின்றிருந்த தட்சேஷ்வரைப் பார்த்தான் ஜெய்…
மரியாதை நிமித்தமாய் அவன் எழுந்து கொள்ள முனைய, கையமர்த்தி தடுத்த தட்சேஷ்வர்,
“உடம்பைப் பார்த்துக்கோ…” என சொல்ல, அவனும் சரி என தலையாட்டினான்…
வெளியே வந்த தட்சேஷ்வர், நண்பனிடம், “யாருடா இப்படி பண்ணினது?... எவனுக்குடா இவ்வளவு தைரியம் வந்துச்சு?...” என கோபமாய் கேட்க,
“தெரியலைடா ஈஸ்வர்… ஜெய் வாய்திறந்து சொன்னா தான் தெரியும்…” என்றார் சோமநாதன்…
“சரி… நீ கவலைப்படாத… அவன் சீக்கிரம் குணமாகிடுவான்… நீ மனசைப் போட்டு வறுத்திக்காத…”
“எப்படிடா முடியும்… நெஞ்சுல பட்ட ஆயுதம் கழுத்துல பட்டிருந்தா இந்நேரம் என்ன ஆகியிருக்கும்?... நினைச்சுப்பார்க்க கூட முடியலைடா…” என்றவரின் உடல் லேசாக திடுக்கிட்டது…
“அப்படி எல்லாம் எதுவும் நடக்காது… கவலைப்படாம அவனை பார்த்துக்க ஆள் ஏற்பாடு பண்ணலாம்…”
“எதுக்குடா வேற ஆள் எல்லாம்?... நானே பக்கத்துல இருந்து பார்த்துப்பேன்…”
“அதுசரி… கமிஷனர் சார் ஆஸ்பத்திரியே கதின்னு கிடந்தா கமிஷனர் சார் வேலையெல்லாம் யார் பார்ப்பா?... உன் தங்கச்சி வந்து இருந்து பார்த்துப்பா… இஷானும் இருக்குறான்ல… அவனும் கூட மாட ஒத்தாசையா இருப்பான்… நீ பேசாம உன் வேலையைப் பாரு… அது போதும்…” என்று சொன்ன தட்சேஷ்வரை அணைத்துக்கொண்டார் சோமநாதன் எதுவும் பேசாமல்…
நண்பனின் முதுகை தட்டி கொடுத்தவர், “நீ எதுவும் சாப்பிட்டிருக்கமாட்ட… சரி… வா சோமு… முதல்ல எதாவது சாப்பிடலாம்…” என சோமநாதனின் கரம் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றார்….
அதன் பின், இஷானிடம், “இஷான்… நான் போய் டாக்டரை பார்த்துட்டு வந்துடுறேன்… ஜெய்க்கு என்ன சாப்பாடு கொடுக்கலாம் என்ன ஏதுன்னு கேட்டுட்டு வந்துடுறேன்…” என சொல்லிக்கொண்டே சதியைத்தாண்டி சென்றவர், சட்டென நின்று, “சதி… என்ன இது?... நீ காலையில போட்டிருந்தது இந்த துப்பட்டா இல்லையே…” என அவள் அணிந்திருந்த துப்பட்டாவை தொட்டுபார்த்து பிரசுதி கேட்க, அவளுக்கு பகீரென்றது…