தங்கையிடம் போன் செய்து, “ஜெய்க்கு அடிப்பட்டுடுச்சும்மா… சதியும் இஷானும் தான் ஹாஸ்பிட்டல்ல இப்போ அவங்கூட இருக்குறாங்க… உனக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னே தெரியலைம்மா… உன் பொ….” என சொல்ல இருந்தவரை, சொல்லவிடாமல் தடுத்தார் பிரசுதி…
“எப்போ அண்ணா… எப்படி நடந்துச்சு?... இப்போ ஜெய்க்கு ஒன்னும் இல்லையே…” என மாறி மாறி பதற்றத்தோடு வினவிய பிரசுதியிடம், இப்போது பரவாயில்லை என்றும், மருத்துவமனை முகவரியையும் அவர் கூற, உடனேயே கணவரிடமும் அதனை தெரியப்படுத்திவிட்டு தட்சேஷ்வரோடு வந்தார் பிரசுதி, ஜெய்யைப் பார்க்க…
இரவு முழுவதும் அவனுடன் இருந்து அவனை பார்த்துக்கொள்வதாய் சோமநாதன் கூறியபோது, “அதெல்லாம் நீ ஒன்னும் இங்க இருக்க வேண்டாம்… இஷான் கூட இருந்து பார்த்துப்பான்… நீ நம்ம வீட்டுக்கு வா… அங்க இரு… இஷான் வேலைக்கு கிளம்ப வீட்டுக்கு வரும்போது நீ ஹாஸ்பிட்டல் போய் ஜெய் பக்கத்தில இரு… அப்புறம் உன் தங்கச்சி சமைச்சு இஷான் கிட்ட கொடுத்து விடுவா… அதை இஷான் கொண்டுவந்ததும், நீ கிளம்பு… அவன் அதுக்குப்பிறகு ஜெய்யை சாப்பிடவச்சிட்டு தன்னோட வேலையை பார்க்க போவான்…” என தட்சேஷ்வரும் சொல்லிவிட,
“ஆமாண்ணா அவர் சொல்லுறது தான் சரி… மதியம் நான் போய் ஜெய்யை சாப்பிட வச்சு பார்த்துக்கறேன்…” என பிரசுதியும் கூற,
“அப்போ நான் கிளம்பி போனதும் ஜெய்யை யார் பார்த்துப்பா?...” என்ற இஷானின் கேள்விக்கு,
“நான் பார்த்துக்குறேன் இஷான்… நான் வீட்டுல சும்மா தான இருக்குறேன்… பகல் முழுக்க நான் அங்க அவனுக்கு துணையா இருக்குறேன்… நீ நைட் வரும்போது நான் கிளம்பி வீட்டுக்கு வந்துடுறேன்…. சரியா?...” என பிரம்மரிஷியும் அழுத்தமாய் உரைத்துவிட, அதன் பின் அதனை யாரும் மறுக்கவில்லை…
சதியின் நல்ல நேரமோ என்னவோ, சோமநாதன், தட்சேஷ்வரிடம், ஜெய்யை காப்பாற்றியது சதி தான் என்ற உண்மையை சொல்லவில்லை… மாறாக அவர் பேச்சுவாக்கில் சொல்லியிருந்தால் கூட நிலைமை வேறு மாதிரி ஆகியிருக்கும்… நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை…
யார் ஜெய்யை காயப்படுத்தியிருக்கக்கூடும் என்ற யோசனையிலேயே தட்சேஷ்வரும், ஜெய் எப்போது குணமாகி வருவான் என்ற சிந்தனையிலுமே சோமநாதனும் இருக்க, நாளும் அப்படியே சென்றது….
நாட்கள் நகர நகர, ஜெய்யின் உடல்நிலையிலும் முன்னேற்றம் அதிகரித்தது…
மதியம் பிரசுதி சென்று சாப்பாடு கொடுக்கும்போது, அமைதியாக அதை வாங்கி உண்பவன், ஒருநாள், “எதுக்கு இதெல்லாம்… நான் சரியாகிட்டேன்… உங்களுக்கு ஏன் சிரமம்?... இன்னும் ரெண்டு மூணு நாள்ள டிஸ்சார்ஜ் செய்திடலாம்னு டாக்டர் சொல்லிட்டார்…” என கூற,
“அதெல்லாம் எனக்கு தெரியும்… நீ பேசாம இதை சாப்பிடு…” என்றபடி அவனிடம் அந்த சூப்பை கொடுத்து குடிக்க சொன்னார் பிரசுதி…
“இல்ல… நான் எதுக்கு சொல்லுறேன்னா, நாலு நாளா இப்படி தினமும் ஹாஸ்பிட்டல் வீடுன்னு உங்களுக்கு நிறைய அலைச்சல் அதும் என்னால… எனக்கு அது ஒரு மாதிரி இருக்கு… அதான் சொல்லுறேன்… இன்னும் ரெண்டு நாள் தான… நான் மேனேஜ் செய்துப்பேன்… நீங்க இப்படி கஷ்டப்பட வேண்டாம்….”
“இப்போ உன் இடத்துல இஷான் இருந்திருந்தா நான் என்ன செய்திருப்பேனோ அதை தான் செய்யுறேன்… இதுக்கும் மேல வேறென்ன சொல்லுறதுன்னு எனக்கு தெரியலைப்பா…” என கவலையோடு சொன்னவரிடத்தில், அதற்கு மேலும் மறுத்து ஜெய் பேசவில்லை…
“என்னை மன்னிச்சிடுங்க…” என மனமாற மன்னிப்புக் கேட்டவனின் தலையை பாசத்துடன் வருடிவிட்டு, “ஒரு மன்னிப்பும் நீ அத்தைகிட்ட கேட்க வேண்டிய அவசியமில்லை… பேசாம படுத்து தூங்கு… அது போதும்…” என சிரித்தபடி வெளியேறினார் பிரசுதி…
அதிகாலையில் வழக்கம் போல பார்க் செல்லும் சதி இப்போது அங்கே செல்லாமல், நேரே மருத்துவமனைக்கு சென்றாள்… தைஜூவும் உடன் வருவாள்… ஆனாலும் சதி வரும் வேளையில் பெரும்பாலும் ஜெய் தூங்குவது போல் காட்டிக்கொள்வான்…
அதன் பின் பிரசுதி காலை உணவை தயார் செய்து இஷானிடம் கொடுத்துவிடும்போதெல்லாம், அவனிடமிருந்து அதை பிடுங்கிக்கொண்டு போவாள் சதி… அவள் சாப்பாடை கொடுக்கும் தருவாயில், அவளிடம் ஒருவார்த்தை கூட மருந்துக்கும் பேசமாட்டான் ஜெய்… முடிந்தவரை அவளை பார்ப்பதையே தவிர்த்தான்…
மாலைவேளையில் சதி காலேஜ் முடிந்து மருத்துவமனை சென்று அவனைப் பார்த்துவிட்டே வீடு திரும்புவாள்… அப்போதும் அவன் தூங்குவது போல் காட்டிக்கொள்ள, அவளுக்கு என்ன செய்ய என்றே புரியாமல் போனது…
தான் வரும்போதெல்லாம் தூக்கத்தின் பின் ஒளிந்து கொள்பவனின் மீது கோபம் வரவில்லை அவளுக்கு… ஏனோ அவன் உடல்நிலைப் பற்றிய கவலை தான் அதிகமாகிக்கொண்டே போனது…
“ரொம்ப முடியலையோ அவருக்கு… ம்ம்… வலிக்கு நிறைய மருந்து கொடுக்குறாங்க போல… அதான் பாவம் அசந்து தூங்குறார்…” என தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொள்பவள் அவன் குணமாகி வரும் நாளுக்காக காத்திருந்தாள்… அவனுமே அதற்காகத்தானே காத்திருக்கிறான் என்பதை பாவம் அவள்தான் அறியவில்லை…
டிஸ்சார்ஜ் செய்த பின், பிரசுதி தன் வீட்டிற்கு வரும்படி அழைக்க, ஜெய் பிடிவாதமாய் மறுத்துவிட்டான்… சோமநாதனும், இனி தான் பார்த்துக்கொள்வதாய் கூறி தங்கையை சமாதானம் செய்ய, அவரும் முகத்தைத்தூக்கி வைத்துக்கொண்டார்…