தன் வீட்டிற்கு வந்ததும், இரண்டு நாள் தகப்பனின் அறிவுரைப்படி ஓய்வு எடுத்துக்கொண்டவன், மூன்றாவது நாள், போலீஸ் உடையை அணிந்து கொண்டு வேலைக்கு கிளம்ப, சோமநாதன் அதிர்ச்சியுற்றார்…
“என்ன ஜெய் இது?... இன்னும் சரியாகூட காயம் ஆறலை.. அதுக்குள்ள நீ இப்போ வேலைக்கு வரணுமா?...”
“இதுநாள் வரை நான் வராம இருந்ததே உங்களுக்காகத்தான்ப்பா… இனியும் அது முடியாது… எனக்கு நிஜமாவே எதுவுமில்லப்பா… நான் நல்லா இருக்குறேன்… டாக்டர் கூட வேலைக்குப் போகலாம்னு சொல்லிட்டாரேப்பா… இன்னும் என்ன?...”
“அவர் சொல்லுவார்… அதுக்காக நீ உடனே கிளம்பிடுவியா?... ஒன்னும் வேண்டாம்… பேசாம ரெஸ்ட் எடு…” என்ற தகப்பனை பேசியே சமாளித்துவிட்டான் ஜெய்…
“அப்பா அந்த குமார் கேஸ் வேற பெண்டிங்கில் இருக்கு… அவனை ஜெயிலுக்கு ஷிஃப்ட் பண்ணலை இன்னும்…”
“ஆமா ஜெய்… அவனை ஷிஃப்ட் பண்ணனும்னு நீ சொன்ன நாள் அவனுக்கு மறுபடியும் உடம்புல காயம் ஏற்பட்டிருக்கு… அதான் இந்த ஒருவாரமா அவன் ஹாஸ்பிட்டலிலேயே இருக்கவேண்டியதா போச்சு…”
“ம்ம்… இஷான் சொன்னான்ப்பா…”
“ஹ்ம்ம்… ரெண்டு பேரும் மாத்தி மாத்தி அடிச்சி அவனை சாகடிச்சிடாதீங்கப்பா… இஷானை கூப்பிட்டு நான் சத்தம் போட்டேன்… வர வர அவனும் உன்னை மாதிரியே கோபக்காரனா மாறிட்டு வரான்…”
“நானும் அவனை திட்டினேன்… ஏண்டா அடிச்சேன்னு…”
“உனக்கு அடிபட்டது அந்த குமாராலதான ஜெய்?...”
சந்தேகத்தோடு கேள்வி கேட்டால் கூட சமாளிக்கலாம்… உறுதியாக அவன் தான என்று கேட்டால் என்ன சொல்லுவான் ஜெய்?...
“போலீஸ்காரனா இருந்தா இதெல்லாம் சகஜம் தானப்பா… உங்களுக்கு தெரியாததா?...”
“தெரிஞ்சதனால தான்ப்பா கேட்குறேன்… இதுவரை ஒருத்தன் கூட உன் மேல கைவச்சதில்லை… நீயும் வைக்கவிட்டதில்லை… அப்படி இருக்கும்போது எப்படி இந்த அளவு உனக்கு காயம் ஏற்பட நீ அனுமதிச்சேன்னு தான் எனக்குப் புரியலை…”
“சண்டையில சில நேரங்கள்ள அடிபடுறது சாதாரண விஷயம் தானப்பா… இதைப்போய் பெரிசா எடுத்துக்கிட்டா நான் வேற என்ன சொல்ல முடியும்?...”
தெளிவாக மழுப்பும் மகனை அவர் ஆச்சரியத்தோடு பார்த்தார்…
பின், “சரிப்பா… நீ கிளம்பு… மிச்சத்த அங்க பேசிக்கலாம்…” என அவர் சொன்னதுமே அவனுக்கு புரிந்து போனது…
மகனாய் அவன் இங்கே தன் தகப்பனிடத்தில் மழுப்பலாம்… ஆனால் ஒரு ஐபிஎஸ் ஆபிசராய் அவனுக்கும் மேலதிகாரியான கமிஷனரிடம் அவனால் மழுப்ப முடியாதல்லவா?... உண்மையை சொல்லித்தானே ஆகவேண்டும்… வீட்டில் அவனால் மறைக்க இயலும்… அலுவலகத்தில் மறைத்திட இயலாதே… அதற்காகத்தான் அங்கே மிச்சத்த பேசிக்கலாம் என்று அவரும் சொன்னார் என தெளிவாகவே புரிந்து தான் இருந்தது ஜெய்க்கு…
எனினும் தைரியமாய், “சரிப்பா….” என்றவன், அவரிடமிருந்து விடைபெற்று, அலுவலகத்தை அடைந்த போது, அங்கே அவனுக்காக இஷான் காத்திருந்தான்…
“என்ன மச்சான்… எதுக்கு இங்க வெயிட் பண்ண சொன்ன?...”
“காரணமாத்தான்… வா… ஹாஸ்பிட்டல் போகலாம்…”
“என்னடா செய்யுது?.. உடம்புக்கு முடியலையா என்ன?... அப்புறம் எதுக்குடா நீ வேலைக்கு வந்த இன்னைக்கு?.. வீட்டுல இருந்து ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான…” என பொரிந்து தள்ளின இஷானிடம்,
“நாம பார்க்கப்போறது குமாரை…” என்றான் ஜெய்…
“அவனையா?... அவனை எதுக்குடா இப்போ பார்க்கப் போறோம்?...”
“தெரிஞ்சிக்கணும்னா எங்கூட வா… இல்ல… இங்கேயே இரு…” என்றவன், தனது செல்போனை எடுத்து, எண்களை அழுத்தினான்…
“கந்தசாமி அண்ணா…. எங்க இருக்கீங்க?...”
“சார்… இப்போ ஸ்டேஷனில் தான் இருக்குறேன்…”
“குட்… ஹாஸ்பிட்டல் நிலவரம் என்ன?...”
“சார்… நீங்க சொன்னபடியே நைட் குமாருக்கு காவலா இருந்த நானும் முத்துவும், நேத்து அவனை தீவிரமா கண்காணிச்சதுல அவன் இன்னும் இரண்டு நாள்ள தப்பிச்சு போறதா பிளான் பண்ணியிருக்கான்னு தெரியுது…”
“அது நான் எதிர்ப்பார்த்தது தான்…”
“அப்போ நாலைஞ்சு ஆட்களை கூடுதலா பாதுகாப்புக்கு அங்க போட்டுடவா சார்?...”
“அதுக்கெல்லாம் அவசியமில்லண்ணா… நீங்க இரண்டு பேரும் இன்னைக்கும் அங்க போக வேண்டாம்…”
அவன் சொன்னதை கேட்டவருக்கு அதிர்ச்சியாயிருந்தது…