“ தேங்க்ஸ்டீ.. லைஃப்ல இப்படி ஒரு நாள் வரும்னு நான் நினைச்சதே இல்லை. எனக்கு நிறைய ப்ரண்ட்ஸ் இருக்காங்கத்தான். அவங்களுடைய அப்பா அம்மாவோடு நான் பழகி இருக்கேன் தான் .. ஆனா இன்னைக்கு அப்பாக்கிட்ட பேசினப்போ வந்த சந்தோஷத்தை இதற்கு முன்னாடி நான் அனுபவிச்சதே இல்லை..”
“..”
“ அவர் எந்த அளவுக்கு நம்ம நட்புக்கும் மதிப்பு கொடுக்குறார்ன்னு உணர முடியுது.. நீ ரொம்ப லக்கி..தேங்க்ஸ் டீ டார்லிங்” ஆழ்ந்த குரலில் கனிவுடன் கூறினான் புகழ்.
“ எனக்கு எதுக்குடா தேங்க்ஸ் சொல்ற? உனக்காக நாந்தான் அப்பாக்கிட்ட தேங்க்ஸ் சொல்லனும்.. அன்னைக்கு சுப்ரஜா அம்மாவை பார்தப்போ எனக்கு ஒரு சந்தோஷம் கிடைச்சதே ..அதை உனக்கே என்னால் திருப்பி கொடுத்திட முடியும்ன்னு நான் நினைச்சதே இல்லை.. ஆனா இன்னைக்கு அது நடந்தது.. அதற்கு முழு காரணம் அப்பாத்தான்.. க்ரேட்..”
“ ஹ்ம்ம் .. நான் இன்னொரு விஷயமும் கண்டுபிடிச்சேன்..”
“என்னடா?”
“தமிழைப் பற்றி !”
“??”
“ஏதோ ஒரு வகையில் தமிழ்க்கிட்ட நீ உன் அப்பாவின் சாயலை உணருற.. ரைட்டா?” அவளின் விழி நோக்கி நேராய் கேட்டான் புகழ். இதுவரை யாழினி அதை உணர்ந்ததில்லை. தமிழின்பால் அவள் மனம் மயங்குவது அவள் அறிந்ததுதான்.. ஆனால் அதற்கு அவள் தந்தையின் சாயலும் ஒரு காரணம் என்பதை அவள் எப்படி உணராமல் போனாள் ? அதைவிட தன்னைவிட தன் எண்ணங்களை நன்கு உணர்ந்துள்ள நண்பனை என்னவென சொல்வது ?
“ எ… எனக்கு தெரியல புகழ்..இதுவரைக்கும் அப்படி யோசிக்கலன்னு நினைக்கிறேன்”
“ அப்படி நினைக்கலன்னா, அது எனக்கு சந்தோஷம் தான்..”
“??” புரியாமல் அவனைப் பார்த்தாள் யாழினி. அவள் விழிகளில் கேள்விகளும் லேசாய் கோபமும் எட்டி பார்த்தன. தன் இரு கைகளால் அவளின் கன்னங்களை ஏந்தி கொண்டான் புகழ்.
“ புரிஞ்சுக்கோ யாழும்மா.. நம்ம குணாதிசயத்திற்கு எதிரானவங்களை பார்க்கும்போது சில நேரம் அவங்களை பிடிக்காமல் போயிரும். சில நேரம் பிடிக்கவும் ஆரம்பிக்கலாம். ஆனால் இது நிரந்தர உணர்வில்லை. எதிர்திசைகள் ஈர்க்கும்ன்னு சொல்லுறது அறிவியலுக்குத்தான் ..! வாழ்க்கைக்கு இல்லை! உனக்கு நிறைய பொறுமையும் சகிப்புத்தன்மையும் இருக்கனும். அப்படி இருந்தால் ஒருவேளை நீங்க சந்தோஷமாய் வாழ வாய்ப்புகள் இருக்கு.. ஆனா இது எந்த அளவு சாத்தியம்ன்னு தெரியல”
“..”
“கொஞ்சம் யோசிச்சு பார்.. இதுவரைக்கும் தமிழுடன் நீ சந்தோஷமாய் பேசி இருக்கியா? எப்போதுமே புரிதல் இல்லாமல் தானே போகுது உங்கள் உறவு.. உன்னால சந்தோஷமாய் இருக்க முடியல.. அதை பார்த்துக்கிட்டு என்னால் சகிச்சுகிட்டு இருக்கவும் முடியல.. சோ இதை இத்தோடு விட்டுடு”.
“ புகழ்.. திஸ் இஸ் டூ ஏர்லி.. நானே என் மனசுல என்ன இருக்குன்னு ஒரு முடிவுக்கு வரல.. அதுக்கு முன்னாடி ஏன் முட்டுக்கட்டையா இருக்குற?”
“ முட்டுக்கட்டையா நானா?”
“ ஆமா, பின்ன என்ன? அப்படியே எனக்கு தமிழ் மேல ஈடுபாடு இருந்தாலும், ஒரு நண்பனாக நீ இதை எப்படி சரியான வழிக்கு கொண்டுவரனும்ன் தானே யோசிக்கனும்?”
“..”
“ அதை விட்டுட்டு என் எண்ணத்தை மாத்திக்க சொல்லுறியா நீ ? என் ஆசையை புதைக்க சொல்லுறியா? நீ சொல்லுறது என் மனசை உடைக்கிற மாதிரி இருக்குதுன்னு உனக்கு புரியுதா இல்லையா புகழ்?” படபடப்பாக பேசினாள் யாழினி. அவள் தோள்களை பற்றி தீர்க்கமாய் பார்த்தான் புகழ்.
“ யாழினி ஒரு விஷயம் சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ.. வெவ்வேறு உறவுகளுக்கு வெவ்வேறு ஸ்தானங்கள் இருக்கு.. இப்போமட்டும் இல்ல எப்போ வேணும்னாலும் நான் உன் மனசை உடைக்கலாம்..உடைஞ்சு போற மாதிரி நான் ஏதும் சொல்லிடலாம்… ஆனா நீ என்னை மன்னிச்சிருவ.. உன்னால் அதை தாங்கிக்க முடியும்.. ஆனால் தமிழ் உன் மனசை உடைஞ்சா நீ ஒரேடியா உடைஞ்சு போயிருவ..ஏன்னா நீ தமிழ்க்கு கொடுக்கனும்னு நினைக்கிற உறவின் ஸ்தானம் அப்படி ! காதலென்பது லைஃப்ல பெரிய விஷயம்.. சில நேரம் காதலை விட நட்பு தான் பெருசுன்னு சொல்லுவாங்க.. ஆனா அது தப்பான கருத்து..எல்லா உறவுமே சமமானது இல்லை.. சமையலுக்கு உப்பு அவசியமா சக்கரை அவசியமான்னு எப்படி முடிவெடுக்க முடியும்? அது சமைக்கிற உணவை பொறுத்தது! அதே மாதிரி தான் உறவுகளும்..! தமிழுக்கு நீ கொடுக்குற உறவு ரொம்ப ஆழமானது.. அதனாலத்தான் நீ நிறைய யோசிக்கனும்னு சொல்லுறேன்..எதுவும் தப்பாகிட கூடாது..அது மட்டும்தான் என் கவலை..” என்றான் புகழ். அவனை பார்த்து மென்னகை புரிந்தாள் யாழினி..