(Reading time: 22 - 43 minutes)

ஷானுக்கும் ஜெய்க்கும் கொடுத்த கேஸ் விஷயமாக ஜெய் ஊட்டிக்கு செல்ல அனுமதி வேண்டுமென சோமநாதனிடம் கேட்க, அவரோ சந்தோஷத்துடன் சரி என்றார்…

பின் திட்டமிட்டப்படி, தைஜூ, இஷான், ஜெய், சதி, பிரம்மரிஷி ஆகிய ஐவரும் ஒரு காரிலும், தட்சேஷ்வர், பிரசுதி, காதம்பரி, சிதம்பரம், சோமநாதன் ஆகிய ஐவரும் மற்றொரு காரிலும் ஊட்டிக்கு கிளம்பினர்…

பனிமூட்டம் சூழ, பச்சை பசேல் என்று தெரிந்த காட்சியை வியந்து கொண்டே வந்தாள் சதி…

ஜெய் காரை ஓட்ட, அவனின் பக்கத்தில் இஷானும், மற்ற மூவரும் பின் சீட்டிலும் அமர்ந்து கொண்டனர்…

ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்த சதி ஒவ்வொன்றாக பார்த்து ரசித்து வியப்பதையும், அவளின் அழகான முகபாவனையையும் கண்டு கொண்டே வந்தான் ஜெய் யாருக்கும் தெரியாமல்…

அவனுக்கு முன் இருந்த கண்ணாடியில் அவள் தெரியும்படி பார்த்துக்கொண்டவன், நொடிக்கொரு தரம் அவளை பார்ப்பதும், அவள் செயல்களை ரசிப்பதுமாய் காரை ஓட்டிக்கொண்டிருந்தான்…

“தைஜூ…. அங்க பாரேன்… அந்த மலை எவ்வளவு அழகா இருக்குல்ல?...” என சிரித்து வியந்து வந்தவளை பார்க்க பார்க்க தெவிட்டவே இல்லை அவனுக்கு…

அவர்கள் ஊட்டியை வந்தடையும்போது சிறு தூரல்களும் விழ ஆரம்பிக்க, ஜன்னலின் வழி கைநீட்டி சாரலுடன் விளையாடிவள், தைஜூவின் மேல் அந்த நீரைப்பிடித்து தெளிக்க, பதிலுக்கு தைஜூ மிரட்ட, சதி புன்னகைத்து மீண்டும் தூரல்களுடன் தன் கைவிரலை மோதவிட்டு சிறுபிள்ளையாய் அவள் நடந்துகொள்ள, ஜெய்யின் பார்வை அவளிடமே இருந்தது…

தன் மனம் முழுவதும் நிறைந்து இருப்பவளை ரசித்துக்கொண்டே இருந்தவனுக்கு, அவளின் இந்த சின்னஞ்சிறு விளையாட்டுகள் மிகவும் பிடித்திருந்தது…

அந்த பெரிய கெஸ்ட் ஹவுசிற்குள் நுழைந்தது தட்சேஷ்வரின் கார்… இரண்டு வேலையாட்கள் வந்து வேகமாக பையை எடுத்துக்கொள்ள, பெரியவர்களும் அவர்களுடன் பேசிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தனர்…

அடுத்த ஐந்து நிமிடத்தில் ஜெய்யின் காரும் அந்த இடத்தை அடைந்துவிட, பிரம்மரிஷியிடமிருந்து பையை வாங்கிக்கொண்ட இஷான், தன்னுடையதையும் எடுத்துக்கொண்டு, தைஜூவைப்பார்க்க, அவளும் அவனை பின் தொடர்ந்தாள்…

ஜெய் தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டிருந்த போது, சதி தன் பையை தூக்க முடியாமல் நின்று கொண்டு இஷான் என கூப்பிட்டாள்…

உள்ளே சென்ற இஷானுக்கு அவள் குரல் கேட்கவில்லை… மேலும் பிரம்மரிஷியை பத்திரமாக அறையில் விட்டுவிட்டு, தைஜூவிற்கு உதவிக்கொண்டிருந்தான் அவன்….

“என்ன செய்யுறான் இவன்?... கூப்பிட கூப்பிட காதுல கேட்காம அப்படி என்ன வேலையை செஞ்சிட்டிருக்குறான்?...” என வெளியே கேட்கும்படியே சொன்னாள் சதி….

“டேய்… அண்ணா…. இஷான்…. எருமைமாடு…..” என சிணுங்கிக்கொண்டே தரையை ஓங்கி உதைத்தவள் அப்போது தான் தன் பின்னாடி கைகட்டி நின்றுகொண்டிருந்த ஜெய்யைப் பார்த்தாள்…

பார்த்ததும், சட்டென தன் நாக்கினை கடித்துக்கொண்டவள், மெல்ல சிரித்துக்கொண்டாள்…

அவன் எந்த முகபாவனையையும் காட்டாது, மெதுவாக தன் பொருட்களை எடுத்துக்கொண்டு அவளருகில் வர,

“லவரை பார்த்ததும், தங்கச்சியை அம்போன்னு விட்டுட்டு போயிட்டான் அந்த இடியட்… உள்ளே போய் நீங்களாச்சும் அந்த தடிமாடை வர சொல்லுங்க…” என சதி ஜெய்யிடம் கூற, அவன் சட்டென தன் கையை நீட்ட, அவள் விழித்தாள்….

“ம்…” என்ற ஒற்றை சொல்லில் அவன் அவளைப் பார்க்க, அவள் தன்னை மறந்தவளாய் நின்றிருந்தாள்…

அவளின் விரிந்த கண்களை பார்த்துக்கொண்டே அவன் தன் கரத்தை அவளை நோக்கி உயர்த்த, அதற்குமேலும் தாமதிக்காது தன் கரத்தினை ஜெய்யின் கரம் அருகே அவள் கொண்டு செல்ல,

அவன் பட்டென குனிந்து அவள் பையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான், உதட்டில் தோன்றிய குறுநகையுடன்…

“உங்களை………” என இரண்டு கைகளையும் இறுக்கி, அவனை முறைத்தவள், பல்லைக்கடித்துக்கொண்டே அவனை பின் தொடர்ந்தாள் தன்னையும் அறியாமல் சிரித்துக்கொண்டே…

தைஜூவும், சதியும் ஒரு அறையில் தங்க, இஷானும், ஜெய்யும் ஒரு அறையில் தங்கினர்… ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறைகள் இருந்த போதும் அவர்கள் சேர்ந்தே இருந்து கொள்கிறோம் என கூற, பெரியவர்களும் அதனை மறுக்கவில்லை…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.