குட்டிக் கதைகள் – 61. யானையின் நண்பர்கள்
ஒரு காட்டில் தனியாக ஒரு யானை இருந்தது. தனியாக இருந்து போர் அடித்ததால், தனக்கான நண்பர்களைத் தேடி காட்டில் அலைந்தது.
ஒரு குரங்கைக் கண்டு, "குரங்கே, நீ என் நண்பனாக இருப்பாயா?" என்று கேட்டது.
குரங்கோ, "உன் உருவம் பெரிதாக இருக்கிறது. என்னைப் போல உன்னால் மரங்களில் ஊஞ்சலாட முடியாது. அதனால் நான் உன் நண்பனாக இருக்க முடியாது.” என்றது.
அடுத்து, யானை ஒரு முயலைக் கண்டு அது தன்னுடைய நண்பனாக இருக்க முடியுமா என்று கேட்டது.
"நீ என் வீட்டுக்குள் பொருந்துவதற்கு மிகவும் பெரிதாக இருக்கிறாய். நீ என் நண்பனாக இருக்க முடியாது.” என்று முயல் பதிலளித்தது.
பின்னர் யானை ஒரு தவளையை சந்தித்து அதனிடம் தன நண்பனாக இருக்க முடியுமா என்று கேட்டது.
தவளை சொன்னது “நீ மிகவும் பெரிதாக இருக்கிறாய். கனமாகவும் இருக்கிறாய். நீ என்னைப் போல குதிக்க முடியாது. அதனால் நீ என் நண்பனாக இருக்க முடியாது.”
அடுத்து யானை ஒரு நரியிடம் கேட்டது. நரியும் மற்றவர்கள் சொன்ன அதே பதிலான ‘நீ மிகவும் பெரிதாக இருக்கிறாய்!’ என்பதை தான் சொன்னது.
அடுத்த நாள், காட்டில் உள்ள அனைத்து விலங்குகளும் பயத்தில் ஓடிக் கொண்டிருந்தன. யானை ஒரு கரடியை நிறுத்தி என்ன நடக்கிறது என்று விசாரித்தது. புலி ஒன்று அனைத்து விலங்குகளையும் தாக்குவதாக கரடி சொன்னது.
யானை பலவீனமான விலங்குகளை காப்பாற்ற விரும்பியது. அதனால் புலியின் அருகில் சென்று “புலி ஐயா, தயவு செய்து என் நண்பர்களை விட்டு விடுங்கள். அவற்றை வேட்டையாடாதீர்கள்." என்றது.
புலி அதை காது கொடுத்ததும் கேட்கவில்லை. யானையிடம் உன் வேலையை பார்த்துக் கொண்டு போ என்றது.
பிரச்சனையை தீர்க்க வேறு வழியில்லாமல் யானை புலியை உதைத்து பயமுறுத்தி அங்கிருந்து துரத்தியது.
பின்னர் நடந்ததை மற்ற விலங்குகளிடம் சொல்லி பயமில்லாமல் இருக்குமாறு யானை சொன்னது.
யானை தங்கள் உயிரைக் காப்பாற்றியதை கேட்ட விலங்குகள், "நீ பெரிதாக இருந்தாலும் எங்கள் அனைவரின் நண்பனாக இருக்க சரியானவன் தான்." என்று ஒன்றாக ஒப்புக்கொண்டன.
கருத்து:
நட்பு என்பது ஒரே மாதிரியானவர்களிடம் தான் வர வேண்டும் என்றில்லை. ஒல்லியாக, குண்டாக, உயரமாக, குள்ளமாக என எல்லா விதமாகவும் நண்பர்கள் இருக்கலாம்.