குட்டிக் கதைகள் – 63. பூக்கள்
ஸ்வேதா என்று ஒரு சிறுமி இருந்தாள். அவள் வீட்டில் ஒரு சிறிய தோட்டம் இருந்தது.
ஸ்வேதாவிற்கு அந்த தோட்டம் மிகவும் பிடிக்கும்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த தோட்டத்தை பேணி பாதுகாத்தாள். அதன் அழகையும் ரசித்து மகிழ்ந்தாள்.
ஒரு நாள், ஒரு அழகான பூச்செடியை ஒரு நர்சரியில் பார்த்தாள். அது தன் தோட்டத்தில் இருந்தால் அழகாக இருக்கும் என்று நம்பினாள்.
தன் பெற்றோரிடம் கேட்டு அந்த செடியை வாங்கி தன் தோட்டத்தின் ஓரத்தில் இருந்த கல் சுவரின் பக்கத்தில் நட்டு வைத்தாள்.
அந்த செடியை ஸ்வேதா மிகவும் நன்றாக கவனித்துக் கொண்டாள்.
அந்த செடியும் செழிப்பாக வளர்ந்தது. அழகான ஆரோக்கியமான பச்சை இலைகளும் செடியை நிறைத்தன.
மாதங்கள் ஓடிப் போனது.
ஆனால் அந்த செடியில் ஒரு பூ கூட பூக்கவில்லை.
எரிச்சலடைந்த ஸ்வேதா பூக்காத செடியை வெட்டி விட நினைத்தாள்.
அந்த நேரத்தில், அவளுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்மணி போன் செய்து, “உன் தோட்டத்துல இருக்க புது பூ ரொம்ப அழகாக இருக்கு ஸ்வேதா! அதை பார்ப்பதாலே என் நாள் இனிமையானதாக மாறி விடுது. நன்றி ஸ்வேதா,” என்றாள்.
இதைக் கேட்டு, ஸ்வேதா பக்கத்து வீட்டில் தெரிந்த சுவரை எட்டிப் பார்த்தாள். அங்கே மிக அழகான மலர்கள் பூத்துக் குலுங்குவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டாள்.
ஸ்வேதா அந்த செடிக்காக எடுத்துக் கொண்ட முயற்சி வீண் போகவில்லை! என்ன அந்த செடி சுவரின் பிளவுகளின் வழியாக சென்று சுவரின் பின்புறம் பூத்திருந்தது!
கருத்து
உங்கள் முயற்சிகளுக்கான பலன் உங்களுக்கு தெரியவில்லை என்பதற்காக, அது பலனே அளிக்கவே இல்லை என்று அர்த்தமல்ல!!!