திருடன் கையில் இருந்த வலைக்குள் சிட்டுக் குருவிகளைப் பார்த்தவுடன் அந்தப் பூனை உடனே கடித்துத் தின்னப் பாய்ந்து வந்த்து.
“பூனைக் கண்ணா! கொஞ்சம் பொறுமையாயிரு. வலையைவிட்டு எடுத்து விடுகிறேன். பிறகு நீ லபக் கென்று பிடித்துக் கொள்ளலாம்” என்று கூறிச் சிட்டுக் குருவி ஒன்றை வெளியில் எடுத்தான் திருடன்.
பூனை அதைக் கௌவிப் பிடிக்கப் பாய்ந்தது.
வலைக்குள் இருந்த மற்றொரு சிட்டுக் குருவி 'அம்மா...' என்று கதறியது.
அவ்வளவு தான் பூனையின் தலையில் ஓர் அடி விழுந்தது. அந்தத் திருடன் தலையில் ஓர் அடி விழுந்தது. அந்தத் திருடனும் பூனையும் மயங்கி விழுந்தார்கள்.
வலைக்குள் இருந்த சிட்டுக் குருவியை ஒரு பெண்ணின் அழகான கை வெளியில் எடுத்து விட்டது.
'அன்புக் குழந்தைகளே நீங்கள் பறந்து செல்லுங்கள்' என்று அந்தச் சிட்டுக் குருவிகளை இரண்டு கைகள் தூக்கி வானை நோக்கி வீசின.
சிட்டுக் குருவிகள் பறந்து கொண்டே கீழே நோக்கின. கடல் தேவதை கனிவான முகத்தோடு அவற்றைப் பார்த்துக் கை வீசிக் கொண்டிருந்தாள்.
'அம்மா காப்பாற்றினாள்; கடலம்மா காப்பாற்றினாள்’ என்று பாடிக் கொண்டே அவை தங்கள் அரசமரத்துக் கூட்டுக்குப் பறந்து சென்றன.
மற்ற குருவிகளிடம் தாங்கள் பட்ட பாட்டை எடுத்துக் கூறின. அந்த முரட்டுத் திருடனின் அரக்கத் தனத்தைப் பற்றியும், கடலம்மாவின் அன்பு உதவியைப் பற்றியும் அவை விரிவாக எடுத்துக் கூறின.