அடுத்த நாளே குடத்தை எடுத்துக் கொண்டு அதிகாலையில் கலா புறப்பட்டுச் சென்றாள். தளர்வாக குடத்தின் கழுத்தில் கயிற்றைக் கட்டி கிணற்றுக்குள் விட்டாள். அது அவிழவில்லை, உடனே அதை பாதிவழி வரை மேலே தூக்கி இழுத்தவள் குடத்தை விழத் தட்ட கயிற்றை ஆட்ட ஆரம்பித்தாள். வெகு பல முயற்சிக்குப் பின்னால் குடம் விழுந்தது.
அவசர அவசரமாக படிகளில் இறங்கிச் சென்றாள். அந்த இடம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் பாடும் மரத்தை தேடிப் பார்த்தாள். அவளுக்கு முத்து மாலை மட்டுமல்லாது மற்ற ஆபரணங்களையும் முத்துக்களால் செய்ய மிகுந்த ஆசையிருந்தது. அந்த மரத்திலிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு முத்துக்களைச் சேர்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். அங்கு இனிமையான குரல் கேட்க ஆரம்பித்தது.
“லாலலா………….லா……..லலா..
லல லா………….லல……லா……..லல………லா..
வாருங்கள் என்னிடம் வாருங்கள்……..
என்னிடம் ஏராளம் முத்துக்கள் உள்ளன..
வாருங்கள் என்னிடம் வாருங்கள்……..
வாருங்கள் என்னை அன்பாய் அசைத்தாலே…….
நானும் அழகு அழகு முத்துக்கள் தருவேனே……….
“லாலலா………….லா……..லலா..
லல லா………….லல……லா……..லல………லா..
“லாலலா………….லா……..லலா..
லல லா………….லல……லா……..லல………லா..
மிக அவசரமாக அந்த மரத்தின் அருகில் சென்ற கலா சென்ற நேரம் முதலாக அந்த மரத்தை பிடித்து வேக வேகமாக உலுக்க ஆரம்பித்தாள். அவள் அப்படி ஆரம்பித்தவுடனேயே தலைச் சுற்றிப் போன மரம் மயங்கி கீழே விழுந்து விட்டது.
“என்னடா இந்த மரம் முத்து ஒன்றுமே தரவில்லையே?” என்று அதன் கிளைகளில் முத்துக்களை தேட தொடங்கினாள், அந்தோ பரிதாபம் ஒரு முத்தையும் அவளால் கண்டெடுக்க முடியவில்லை.
மிகவும் ஏமாற்றத்தோடு அங்கிருந்து நகர்ந்தாள், அந்த தாத்தா கண்ணில் அகப்பட்டால் அவரிடம் அந்த ஸ்டோர் ரூமிலிருந்து குடத்தையும் , வைரத்தையும் வாங்கி விட்டு வந்து விடலாமே…….சீக்கிரம் போய் முதலில் தூங்க வேண்டும் என்று எண்ணியவாறு முன்னேறிச் சென்றாள். அங்கு முனகல் சப்தம் கேட்டது.
தாத்தா மறுபடியும் பனித்துளிகளால் மூடப் பட்டு வெட வெடவென்று நடுங்கிக் கொண்டு இருந்தார்.
கலாவிற்கு எரிச்சலாக ஆகிவிட்டது, “இந்த தாத்தாவிற்கு கம்பளிப் போர்த்திக் கொண்டு இருக்க தெரியாதா? எப்ப பாரு பனியில உறைஞ்சு போய் கிடக்கிறாரே” என்று எண்ணினாள். அவள் அவர் அருகேச் செல்லவும் நிலாவிடம் உதவிக் கேட்டது போல அவளிடமும் உதவிக் கேட்டார்.
வேண்டா வெறுப்பாக அவளும் உளியும், சுத்தியலும் கொண்டு அவர் உடம்பைச் சூழ்ந்து இருந்த பனிக் கட்டிகளை உடைத்தாள். அவளுக்கு இருந்த அவசரத்தில் கொஞ்சமும் பொறுமை இல்லாமல் உடைத்ததில் தாத்தாவின் கைகளில் காயம் ஏற்பட்டு விட்டது.
கலா மன்னிப்பு கேட்டுக் கொண்டதால் தாத்தா அவளை மன்னித்து விட்டார். அவர் குளிரில் நடுங்கவே , தனக்கு சாப்பாடு செய்து தரக் கூறினார். சமையலறையில் சென்ற கலா அரிசியையும், பருப்பையும் ஊற வைத்தாள். ஆனால், பாவம் அவளுக்கு அதற்கு பிறகு என்னச் செய்வது என்றுத் தெரியவில்லை.
ஒன்றும் தெரியாமல் ஊற வைத்த அரிசியையும், பருப்பையும் தாத்தா முன்னால் வைத்து சாப்பிடச் சொல்லி விட்டு நின்றுக் கொண்டாள். தாத்தாவிற்கு அதைப் பார்த்ததும் அவளுக்கு சமைக்க தெரியாது என்றுப் புரிந்தது. ஊற வைத்த அரிசியையும், பருப்பையும் சாப்பிட முடியாதே எனவே அவள் எதற்காக வந்திருக்கிறாள் எனக் கேட்டு அவளை ஸ்டோர் ரூமிற்க்குள் கூட்டிச் சென்றார். அவளும் நல்ல பிள்ளையாக தன்னுடைய குடத்தை எடுத்து வந்து கிணற்றின் மேலே போக திரும்பினாள். அப்போது தாத்தா அவள் குடத்தில் ஏதோ ஒன்றைப் போட்டார். அவள் மிக சந்தோஷமாக வீடு திரும்பினாள்.
முத்துக்கள் கிடைக்காவிட்டால் என்ன வைரமாவது கிடைத்ததே…………மிக மகிழ்ச்சியாக வீட்டிற்க்கு வந்தவள் குடத்தினின்று அதை எடுத்தாள்.
“பாட்டி வாங்க, நிலா இங்கே வா…….”
“பார்த்தீங்களா பாட்டி நிலாவ பாராட்டிப் பேசினீங்களே, இப்போ இங்கே பாருங்க நானும் வைரம் கொண்டு வந்துட்டேன்” என்று ஆர்ப்பரித்தாள்.
அனைவரும் மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தனர். பொழுது புலர்ந்தது. கலா வைத்திருந்த வைரக் கல் சூரிய ஒளிப் பட்டதும் சிறியதாக தொடங்கியது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே அது கரைந்து நீராகியது.
தனக்கு கிடைத்தது வைரமல்ல, பனிக்கட்டி என்று புரிந்ததும் அதிர்ச்சியில் உறைந்துப் போனாள் கலா.
{kunena_discuss:875}