பழைய நட்புக்களை தொடர்புக் கொள்ளுங்கள்; நட்பை மீண்டும் மலரச் செய்யுங்கள்.
நம் அன்றாட வாழ்வில் நிறைந்திருக்கும் தோழி / தோழர்கள் மற்றும் உறவுகள் தான் நாம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறோம், எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பதை அதிக அளவில் நிர்ணயிக்க கூடியவை.
எனவே நல்ல நட்பு வட்டத்தை அமைத்துக் கொள்வது அவசியம்.
நம்மில் பெரும்பாலனவர்கள் பலக் காரணங்களால் பள்ளி / கல்லூரி / வேலை இட நட்புக்களுடன் தொடர்பை இழந்து விடுவது சாத்தியம்.
அப்படிப்பட்ட பழைய நண்பர்களை பல வருடங்கள் கழித்து மீண்டும் தொடர்புக் கொள்ள நினைத்தால் நம்மில் பலருக்கும் பதட்டமாக இருக்கும். ஆனால், புதிய ஆராய்ச்சி ஒன்று நீங்கள் பதற்றமே இல்லாமல் உங்கள் பழைய நண்பரை தொடர்புக் கொள்ளலாம் என்று சொல்கிறது.
ஆய்வு சொல்வது என்ன?
Journal of Personality and Social Psychology இதழில் வெளியாகி உள்ள ஒரு ஆய்வில், பலரும் தங்களுடன் தொடர்பு விட்டுப் போன தோழி / தோழன் மீண்டும் தேடி வந்து பேசுவதை மிகவும் விரும்புகிறார்கள் என்றும், ஆனால் அதை பெரும்பாலான மக்கள் உணராமலே இருக்கிறார்கள் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.
ஆராய்ச்சியாளர்கள் 5,900 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் தொடர்ச்சியான 13 சோதனைகளை மேற்கொண்டனர். இந்தச் சோதனைகளில், தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்தி, மின்னஞ்சல் என ஏதாவது ஒன்றின் வழியாக பங்கேற்றவர் பழைய நட்புடன் தொடர்புக் கொண்டார்.
அப்படி தானாக சென்று பேசுவதை கிட்டதட்ட பங்குப்பெற்ற அனைவருமே குறைத்து மதிப்பிட்டதாக சோதனைகள் கண்டறிந்தன.
ஆனால் அவர்கள் தொடர்புக் கொண்டவர்களோ அவர்கள் பேசியதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்றும் ஆய்வு கூறுகிறது.