ஆரம்பித்தால் போகிறது" என்றாள்.
"அவசரம் ஒன்றுமில்லை. நாள் நன்றாக அமைந்திருக்கிறது. நான் கேட்பதற்கு முன்பே கடைக்காரர்களும், 'புதுசாக வீணை தஞ்சாவூரிலிருந்து வந்திருக்கிறது, ஸார்; வேண்டுமானால் எடுத்துப் போங்கள்' என்று கையில் கொடுத்தார்கள்" என்று கூறிவிட்டுத் தன் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் உட்கார்ந்திருக்கும் மனைவியின் முகத்தை மறுபடியும் பார்த்தான் ரகுபதி.
ஏதோ அலுவலாகச் சற்றுமுன் சமையலறைக்குச் சென்று காய்ச்சிய பாலை இறைவனுக்குப் படைப்பதற்காக எடுத்து வந்த ஸ்வர்ணம், மகன் கூறுவதைக் கேட்டுவிட்டு, "அவன் இஷ்டப்படி தான் இன்றைக்குப் பாட்டு ஆரம்பியேன். இதற்குப்போய் இவ்வளவு தர்க்கம் வேண்டியதில்லையே! யாராவது ஒருத்தர் தாழ்ந்து போய்விட்டால் ஆயிற்று" என்று கூறிவிட்டுப் பாலைக் கீழே வைத்துவிட்டு உட்கார்ந்தாள்.
இதுவரையில் பேசாமல் ஏதோ முழுகிவிட்டது போல் உட்கார்ந்திருந்த சாவித்திரி சரேலென்று எழுந்து, "எனக்கு இதிலெல்லாம் அவ்வளவு பிடித்தமில்லை என்று முன்னாடியே சொல்லி இருக்கிறேனே. வெறுமனே இதென்ன வீண் தொந்தரவு?" என்று கூறி அறையைவிட்டுப் போக எத்தனித் தா…..
ஸ்வர்ணத்துக்கும் கோபம் வந்தது. நாட்டுப்பெண்ணைப் பார்த்து அதட்டும் குரலில், "நீ செய்கிறதும், பேசுகிறதும் நன்றாகவே இல்லை, சாவித்திரி. அவன் இஷ்டப்படி தான் கேட்டு வையேன், இதிலே என்ன குறைந்துவிடப்போகிறாய்? அவன் கிழக்கே பார்க்கச் சொன்னால் நீ மேற்கே பார்த்துக் கொண்டு நிற்கிறாயே, சுத்தமாக நன்றாக இல்லையே நீ செய்கிறது!" என்றாள் ஸ்வர்ணம்.
"ஆமாம்... . நன்றாகத்தான் இல்லை. அதுவும் என்னுடைய இஷ்டம்" என்று வெடுக்கென்று கூறிவிட்டு 'திடுதிடு' வென்று படுத்துக்கொண்டு கண்ணீர் பெருக்கினாள் சாவித்திரி.
----------------------
தொடரும்