அரைகுறையாக எட்டியிருந்தது.
"உன் நாட்டுப்பெண்ணை எங்கே காணோம்?" என்று கேட்டுக்கொண்டே மூட்டை முடிச்சுகளைப் பிரித்து எடுக்க ஆரம்பித்தாள்.
"பிறந்தகத்துக்குப் போயிருக்கிறாள். எழுந்திருங்களேன்.. ஸ்நானம் செய்து சாப்பிடலாம்" என்று ஸ்வர்ணம் பேச்சை மாற்றி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றாள். ஸரஸ்வதியைத் தனியாகப் பார்த்து, "ஏண்டி அம்மா! நான் என்ன செய்வேன்? இந்தமாதிரி திடும் என்று வீட்டுச் சமாசாரங்களைத் துப்புத்துலக்க வந்துவிட்டாளே?"என்று கவலையுடன் கேட்டாள்.
"எல்லாம் தெரிந்து கொண்டுதான் வந்திருக்கிறாள் அத்தை. அந்தப் பெண் யாரென்பது உனக்குத் தெரியுமா? பரம சாதுவாக இருக்கும்போல் இருக்கிறதே!" என்று விசாரித்தாள் ஸரஸ்வதி.
"யரோ என்னவோ? அலமுவுக்கு உறவினர் ஆயிரம் பேர்கள் இருப்பார்கள்! எல்லோரையும் உறவு கொண்டாடுவது அவள் வழக்கம். இன்றைக்கு ஒருத்தர் நல்லவராக இருப்பார்கள். நாளைக்கே அவர்களைக் கண்டால் அலமுவுக்குப் பிடிக்காது. அது ஒருமாதிரி சுபாவம்" என்றாள் ஸ்வர்ணம்.
இதற்குள் ஊரிலிருந்து வந்தவர்கள் சாப்பாட்டை முடித்து விட்டு வெளியே வந்தார்கள். சாயம்போன பழைய சீட்டிப் புடைவையையும், பல இடங்களில் தைக்கப்பட்ட ரவிக்கையையும் தங்கம் உடுத்துயிருந்தாலும், பருவத்துக்கு ஏற்ற பூரிப்பு அவள் உடம்பில் பளிச்சிட்டது. பல வாசனைத் தைலங்களாலும், 'ஷாம்பூ' க்களாலும் அடைய முடியாத அடர்ந்த கூந்தலை அந்தப் பெண் பெற்றிருந்தாள். புளித்த பழைய அமுதும், ஓரொரு சமயங்களில் கேழ்வரகுக் கூழுமாகச் சாப்பிட்டதே அவள் கன்னங்களுக்குக் காஷ்மீரத்து ஆப்பிள் பழத்தின் நிறத்தை அளித்திருந்தன. சலியாத உழைப்பும், பரிசுத்தமான உள்ளமும் அவள் பெற்றிருந்ததால் கபடமற்ற முகலாவண்யத்தையும், வனப்பு மிகுந்த உடலமைப்பையும் பெற்றிருந்தாள்.
ஸரஸ்வதி அழகு தான். மேட்டூர் அணையில் தேக்கி சிறிது சிறிதாக வெளியே வரும் காவிரியின் கம்பீரமும் அழகும் ஸரஸ்வதியிடம் நிறைந்திருந்தன. 'தலைக்காட்'டில் உற்பத்தியாகிப் பிரவாகத்துடன் பொங்கிப் பூரித்துவரும் காவிரியைத் தங்கத்தின் அழகோடு ஒப்பிடலாம். காட்டு ரோஜாவிலிருந்து வீசும் ஒருவித நெடியைத் தங்கத்தின் அழகில் உணரமுடியும். பன்னீர் ரோஜாவின் இனிமையான சுகந்தத்தை ஸரஸ்வதியின்
அடக்கமான அழகு காட்டிக்கொண்டிருந்தது.
வைத்த விழி வாங்காமல் கதவைப் பிடித்துக்கொண்டு தன்னையே உற்று நோக்கும் ஸரஸ்வதியைத் தங்கம் பார்த்து விட்டு, பயத்தோடும், லஜ்ஜைரோடும் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.
"எதற்காக இந்தப் பெண் இப்படி என்னைப் பார்த்துப் பயப்படுகிறாள் அத்தை?" என்று ஸரஸ்வதி