"ஆமாமடி பாட்டி ரெயிலேறிப்போய் இதெல்லாம் பார்த்துவிட்டு வருகிறாள்! வேறு வேலையே இல்லை பார் அவளுக்கு? உன் அத்திம்பேர் விஷயந்தான் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதே...”
சீதாவுக்கு அங்கே பேசிக் கொண்டு நிற்கப் பொழுதில்லை. காலேஜுக்கு நேரமாகி விட்டதால் அவள் புறப்பட்டுவிட்டாள்.
சீதா காலேஜுக்குப் போன பிறகு, ஊர் வம்புகளை ஒப்பிக்கும் வழக்கமான வேலையைப் பாட்டி நிர்ப்பயமாக நடத்தினாள். அவள், சாவித்திரியின் அருகில் வந்து, நேற்று கோவிலுக்குப் போயிருந்தேன். ராமுவைப் பார்த்தேன். அவன் உன்னைப் பற்றி விசாரித்தான். ”ஆமாண்டா அப்பா! சாவித்திரி இங்கே தான் இருக்கிறாள். அவளைக் கொண்டுவந்து விடும்படி சம்பந்தி வீட்டார் ஒரு வரிகூட எழுதவில்லையே. நீ அந்தப் பக்கம் போயிருந்தாயோ?" என்று கேட்டேன். 'போயிருந்தேன் பாட்டி! அவர்கள் வீட்டிற்குப் போக வேண்டும் என்று நான் கிளம்பவில்லை. தற்செயலாக வழியிலேயே மாப்பிள்ளைப் பையனைச் சந்தித்தேன். 'ஏண்டா அப்பா! நீ செய்கிறது நன்றாக இருக்கிறதா?' என்று கேட்போம் என்று பார்த்தால் அங்கே ஏகப்பட்ட அமர்க்களம். அவன் தான் திறந்த வாய் மூடாமல் பாட்டைக் கேட்டுக்கொண்டு இருக்கிறானே. அவனை என்னத்தைக் கேட்கிறது?' என்று ராமு சொன்னான். அவன் பொய்யா சொல்லப் போகிறான்?"
"சரி, சரி, போதும். இனிமேல் நீ யாரிடமும் எதையும் விசாரிக்க வேண்டாம். நடக்கிறபடி நடக்கட்டும் போ" என்று அலுப்புடன் கூறிவிட்டுச் சாவித்திரி அங்கிருந்து எழுந்து விட்டாள். எழுந்தவள் நேராகத் தன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு காகிதத்தையும், பேனாவையும் எடுத்தாள். மளமளவென்று கணவனுக்குக் கடிதம் எழுத ஆரம்பித்தாள். கோபத்தாலும், ஆங்காரத்தாலும் அவள் கைகள் நடுங்கின. பேனாவிலிருந்து அங்கங்கே இரண்டு சொட்டுகள் மசியும் காகிதத்தில் விழுந்தன. கடிதம் எழுதி முடித்ததும் அதை வாசிக்க ஆரம்பித்தாள்.
அன்புள்ள கணவருக்கு என்றோ, ஆருயிர்க் காதலருக்கு என்றோ கடிதம் ஆரம்பிக்கப் படவில்லை.
"நமஸ்காரம். பத்திரிகைகளில் வெளியாகி இருந்த புகைப் பட்டங்கள் மிகவும் அபாரம்! கட்டிய மனைவி ஒருத்தி இருக்கிறாள் என்பதை மறந்துவிட்டு உங்களுடைய கலை வேஷம் நன்றாக இருக்கிறது! அந்த இன்னொரு பெண் யார் என்பதை எனக்குத் தெரிவிப்பீர்களா?"
கடிதம் பைத்தியக்காரத்தனமாக எழுதப்பட்டது. ஆத்திரத்தில், அவசரத்தில் என்ன எழுதுகிறோம் என்பதைக் கவனியாமல் எழுதப்பட்டது. சாவித்திரிக்குப் பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியது. 'நாம் ஏன் அவருக்குக் கடிதம் எழுதவேண்டும்? கடிதம் எழுதி அவர் சொந்த