கண்ணீர் பெருக ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தாள். எவ்வளவோ சகிப்புத் தன்மையை அடைந்திருந்த அத்தை அழுவதைப் பார்த்து ஸரஸ்வதி கவலையுடன் அவள் அருகில் வந்து உட்கார்ந்து, "ஏன் அழுகிறாய் அத்தை? அத்தானுக்கு உடம்பு ஒன்றும் இல்லையே?" என்று விசாரித்தாள்.
இதற்குள்ளாக அலமு ஊருக்குப் புறப்படுவதற்காக மூட்டைகளைக் கட்டிவைத்துவிட்டு, "அவசரப்பட்டுக்கொண்டு முன்னே பின்னே விசாரியாமல் புது சம்பந்தம் செய்தாயே மன்னி; இப்பொழுது படுகிறாய் சேர்த்துவைத்து!" என்று ஆத்திரத்துடன் இரைந்து பேசினாள். ஸ்வர்ணத்துக்கு அடங்கி இருந்த துக்கமெல்லாம் பொங்கி வந்தது.
"இந்தாடி அம்மா! பெண்ணை நான் மட்டும் போய்ப் பார்த்துவிட்டு வரவில்லை. உன் மருமானும் தான் வந்தான். அவன் மனசுக்குப் பிடித்திருக்கிறது என்று தெரிந்துதான் கல்யாணம் நடந்தது."
"அந்தச் சவரணைதான் தெரிறெதே!" என்றாள் அலமு.
மறுபடியும் ஏதாவது சண்டை ஆரம்பித்துவிடப்போகிறது என்று நினைத்த ஸரஸ்வதி, அதட்டும் குரலில், “அத்தை! அத்தானுக்கு ஒரே தலைவலி என்றானே. அவன் தூங்குகிற சமயமாக நீங்கள் இங்கே சண்டைக்கு ஆரம்பிக்கிறீர்களே. பாவம், அவனைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. போதும்; உங்கள் பேச்சை நிறுத்திக்கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு, 'விர்' ரென்று எழுந்து கூடத்தில் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்துவிட்டுத் தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.
கூடத்து மூலையில் மங்கலாக எரியும் சிறு விளக்கின் வெளிச்சத்தில், அதற்கு மேல் பேச்சை வளர்த்த இஷ்டப்படாமல், அலமு கோபத்துடன் படுக்கையில் 'பொத்' தென்று சாய்ந்து படுத்துக்கொண்டுவிட்டாள்.
மாடியில் படுத்திருந்த ரகுபதிக்கு மனப்பாரம் சற்றுக் குறைந்தது. நிசப்தமான இரவில் நீல வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே வெகுநேரம் வெளியில் நின்றிருந்தான் அவன். மறுபடியும் தன் அறைக்கு வந்து அவன் படுக்கும் போது ஸரஸ்வதியின் அறையைக் கவனித்தான். லேசாக வீசும் நிலவொளியில் ஸரஸ்வதிக்கு அருகாமையில் தங்கம் படுத்திருந்தாள். அவளுடைய அழகிய கைகள் ஸரஸ்வதியின் கழுத்தை வளைத்துக் கட்டிக்கொண்டிருந்தன. மங்கிய வெளிச் சத்தில் தங்கம் நன்றாக விழித்துக்கொண்டு படுத்திருப்பது தெரிந்தது. 'ஆமாம்... ஸரஸ்வதியும் விழித்துக் கொண்டுதான் இருக்கிறாள். மெல்லிய குரலில் இருவரும் ஏதோ பேசுகிறார்கள். தங்கம் இவ்வளவு அந்தரங்கமாக என்ன பேசப்போகிறாள்? அன்று மாலை கச்சேரியிலிருந்து திரும்பும்போது நான் அசட்டுப் பிசட்டென்று அவளிடம் நடந்துகொண்டதை ஸரஸ்வதியிடம் வெளி யிடுகிறாளோ? பொழுது