Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 26 - ஸரோஜா ராமமூர்த்தி
இருளும் ஒளியும் : 26. தாய்க்குப் பிறகு தாரம்
தீபாவளி அழைப்பைக் கையில் வைத்துக்கொண்டு கூடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் ரகுபதி, ’கடிதம் யார் எழுதி இருக்கிறார்கள்? என்ன எழுதப்பட்டிருக்கிறது?' என்று அறிந்து கொள்ள ஸரஸ்வதியும், ஸ்வர்ணமும்
ஆவலுடன் அவன் எதிரில் நின்றிருந்தார்கள்.
"கடிதம் போட்டுவிட்டார்கள் பிரமாதமாக! நான் குதித் துக்கொண்டு ஓட வேண்டியதுதான் பாக்கி!" என்று வெறுப்புடன் கடிதத்தை அங்கிருந்த மேஜைமீது வீசி எறிந்துவிட்டு ’விடுவிடு' என்று வெளியே போய்விட்டான் ரகுபதி. ஸரஸ்வதி, ஸ்வர்ணத்தின் ஏக்கம் நிறைந்த முகத்தைக் கவனித்துவிட்டு, "அத்தை! கடிதத்தை நான் படிக்கட்டுமா? ஒருவேளை கடிதம் சாவித்திரி எழுதியதாக இருக்குமோ என்று யோசிக்கிறேன். படிக்கட்டுமா அத்தை? அதில் ஒன்றும் தவறில்லையே?" என்று கேட்டாள்.
"இப்பொழுது நடக்கிறதெல்லாம் சரியாக இருக்கிறது! கடிதத்தைப் படித்தால்தான் தவறு ஏற்பட்டுவிடுமோ? படியேன்" என்றாள் ஸ்வர்ணம் பாதி கோபமாகவும், பாதி வருத்தமாகவும் ஸரஸ்வதியைப் பார்த்து. கடிதத்தை உறையிலிருந்து எடுத்து ஸரஸ்வதி படிக்க ஆரம்பித்தாள்:
அன்புள்ள ரகுபதிக்கு,
அநேக ஆசீர்வாதம். நீயும், உன் அம்மாவும், சௌ. ஸரஸ்வதியும் சௌக்கியமென்று நம்புகிறேன். தீபாவளிப் பண்டிகை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த வருஷம் தலை தீபாவளி ஆதலால் உன் வரவை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
சௌ. ஸரஸ்வதியின் கச்சேரி அரங்கேற்றத் துக்கு வரமுடியாமல் போய்விட்டது. பத்திரிகைகளில் வெளியான செய்திகளையும், புகைப் படங்களையும் பார்த்து ஆனந்தப்பட்டேன். ஸரஸ்வதியைக் கட்டாயம் உன்னுடன் அழைத்து வரவேண்டும். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
இப்படிக்கு.
சந்திரசேகரன்.
கடிதத்தைப் படித்து முடித்ததும் ஸரஸ்வதி கபடமில்லாமல் ’கல கல' வென்று சிரித்து, 'அத்தை! தலை தீபாவளி அழைப்பு மாப்பிள்ளைக்கா அல்லது எனக்கா என்பது புரியவில்லையே. வெறுமனே பத்துத் தடவை என்னைத்தானே வரும்படி சந்துரு எழுதி இருக்கிறார்?" என்றாள்.
"அவர்கள் வீட்டில் எல்லோருக்கும் உன் பேரில் கொள்ளை ஆசை. சாவித்திரியின் அம்மாவுக்குச் சதா உன் பேச்சுத்தான். சீதாவும் கல்யாணத்தின்போது எப்படி ஒட்டிக்கொண்டு இருந்தாள் பார்த்தாயா? நமக்கென்று வந்து வாய்த்திருக்கிறதே அந்தப் பெண் தான் அவர்கள்