வீட்டிலேயே அலாதியாக இருக் கிறது!" என்று ஸ்வர்ணம் கூறிவிட்டு, "எப்பொழுது அவர்கள் மதித்துக் கடிதம் போட்டிருக்கிறார்களோ அவசியம் நீயும் ரகுபதியும் போய்விட்டு வாருங்கள். இந்தச் சந்தர்ப்பத்திலாவது இருவரின் மனமும் மாறி ஒற்றுமை ஏற்படட்டும்" என்றாள்.
ஸரஸ்வதி கடிதத்தை மறுமுறை மனதுக்குள் படித்துக் கொண்டாள். 'இவருக்கென்ன என்னிடம் அலாதி அன்பு? வருந்தி வருந்தி அழைக்கிறாரே. ஒரு வேளை அவருக்கு என்னை-' என்று நினைத்த ஸரஸ்வதியின் மனம் அதற்குமேல் ஒன்றையும் யோசியாமல் தயங்கியது. பிறகு ஸ்வர்ணத்தை நிமிர்ந்து பார்த்து, "அத்தான் அவசியம் போக வேண்டியதுதான் அத்தை. நான் எதற்கு?" என்று கேட்டாள்.
" உன்னை வரச் சொல்லி அந்தப் பிள்ளை எழுதி இருக்கிறானே. முன்பு அவர்கள் இங்கு வந்திருந்தபோதும் கூப்பிட்டார்கள். போய் விட்டுத்தான் வாயேன், ஸரஸு" என்றாள் ஸ்வர்ணம்.
ஸ்வர்ணம் கூறுவதைச் சரியென்று ஸரஸ்வதியின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. 'ஏற்கனவே. என்னால் கணவன் - மனைவி இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு, அதனால் பிறந்தகம் போயிருக்கிறாள் சாவித்திரி. ஊரிலும் என்னைப் பற்றியே தான் அவள் குடும்பத்தார் பழி கூறிக்கொண்டிருப்பார்கள். சில விஷயங்களில் ஆண்களின் சுபாவம் பரந்த நோக்கமுடையதாக இருக்கும். ஆகவே, சந்துரு என்னையும் வரும்படி கூப்பிடுகிறார். இதைப்போய்ப் பிரமாதமாக நினைத்துக்கொண்டு போவது தவறு' என்று ஸரஸ்வதி தீர்மானித்துக்கொண்டாள்.
வெளியே சென்றிருந்த ரகுபதி திரும்பியதும் ஸ்வர்ணம் மறுபடியும் கடிதத்துடன் அவன் அருகில் சென்று உட்கார்ந்து கொண்டாள். தீவிரமான யோசனையில். ஈடுபட்டிருக்கும் மகனின் முகத்தை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டே, "ரகு! என் பேரில் கோபமோ, வருத்தமோ வைத்துக் கொள்ளாதே. விரோதத்தை வளர்த்துக்கொண்டே போனால் அது வளர்ந்து கொண்டுதான் வரும். எதையும் பாராட்டாமல் தள்ளிவிட்டோ மானால் - விரோதம் வளர்வதற்கு இடமில்லையப்பா. தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை வர வேண்டும் என்று ஆசைப்பட்டுத் தான் அந்தப் பிள்ளை கடிதம் போட்டிருக்கிறான். அவன் அழைப்பிலே எல்லோருடைய அழைப்பும் கலந்திருப்பதாக பாவித்துப் போய்வா. நான் தான் எவ்வளவு காலம் சாஸ்வதமாக இருக்கப் போகிறேன்? ’தாய்க்குப் பிறகு தாரம்' என்று சொல்லுவார்கள். எனக்குப் பிறகு உன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டியவள் சாவித்திரிதான். அவளும் சிறியவள். உலகம் தெரியவில்லை. என் வார்த்தையைத் தட்டாதே. ரகு!" என்று உருக்கமாகக் கூறிவிட்டு மகனின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தாள்.
தாயின் கையிலிருந்த கடிதத்தைத் திருப்பிப் பார்த்துக் கொண்டே , ”ஸரஸ்வதியும் வருகிறாள்