ரெயிலில் ஒரு மூலையில் உட்கார்ந் திருந்த ரகுபதி சிறிது நேரம் வரையில் அங்கு என்ன நடைபெறு கிறது என்பதைக் கவனிக்கவில்லை. பித்துப் பிடித்தவன் போல் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். இரவின் அமைதியைக் கலைத்துக்கொண்டு வனப் பிரதேசத்தில் ’தட தட' வென்று ரெயில் சென்றுகொண்டிருந்தது. அத்துடன் குழந்தை ஒன்று வீறிட்டு அழுதது. தாயார் கொஞ்ச நேரம் சமாதானம் செய்து பார்த்தாள். பிறகு தகப்பனார் சீராட்டிப் பார்த்தார். அழுகை ஓய்ந்தபாடில்லை. இருவரும் மனம் சலித்தவர்களாக, "சனியனே! என்ன தான் வேண்டுமென்று சொல்லித் தொலையேன்" என்று இரைந்து கோபித்துக் கொண்டார்கள் குழந்தையை! குழந்தை அழுது கொண்டு தன் மழலை மொழியில், "நீ ஆண்டாம் போ.... பாட்டிதான் வேணும். பாட்டிகிட்டே தாச்சுக்கணும் போ" என்றது.
'அப்பாடா' என்று பெற்றோர் பெருமூச்சு விட்டனர். ஓடுகிற ரெயிலில் ஊரிலிருக்கும் பாட்டியை எப்படி வரவழைப்பது என்று புரியாமல் திகைத்தனர். இருவரும் படும் சிரமத்தைப் பார்த்து ரகுபதி கூடையை அவிழ்த்து அதிலிருந்து இரண்டு பெரிய ஆரஞ்சுப் பழங்களை எடுத்தான்.
”இந்தா பாப்பா! பாட்டியிடம் காலம்பற போகலாம்”, என்று கூறி அவைகளை குழந்தையிடம் கொடுத்தான். தங்க நிறத்தில் பளபளவென்று உருண்டு விளங்கும் பழங்களைத் தன் குஞ்சக் கரங்களால் குழந்தை வாங்கிக்கொண்டு சமாதானம் அடைந்தது. இந்தக் காட்சியை ரசித்த பெரியவர் ஒருவர். ”இதைத்தான் குழந்தை மனம் என்கிறது, ஸார்! நம்மால் லேசில் திருப்தியடைய முடியாத விஷயங்கள் பல இருக்கின்றன. அகங்காரமும், மமதையும் தலை தூக்கி நம்மை நசுக்கிவிடுகின்றன. லேசிலே மனம் பணியமாட்டேன் என்கிறது. குழந்தைகள் அப்படி இல்லை. ஒன்று வேண்டுமென்று ஹடம் பிடிப்பார்கள். வீம்பு பண்ணுவார்கள். ஆனால், அதையே நீடித்து நினைவு வைத்து கொள்ள மாட்டார்கள். சட்டென்று மறந்து போவார்கள்" என்று கூறினார்.
ரகுபதி மனைவியைப் பார்த்து வருவதற்காகத்தான் கிளம்பி இருக்கிறான். அவளிடம் எப்படியெல்லாம் 'பவ்யமாக' நடந்து கொள்ளவேண்டும் என்று தாயார் வேறு உபதேசம் செய்து அனுப்பி இருக்கிறாள். ஸரஸ்வதி ரெயில் நிலையத்தில் கூட 'சாவித்திரியை அழைத்து வந்துவிடு' என்று உத்தரவு போட்டிருக்கிறாள். ஆனால் அவன் அந்தராத்மா இருக்கிறதே அது லேசில் மசிந்து போகத் தயாராக இல்லை. படுக்கை அறையில், "உன்னை அடித்துவிட்டேன் என்று கோபமா சாவித்திரி?" என்று அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சியபோது, அவள் தன் கைகளை ஆங்காரத்துடன் உதறி விடுவித்துக்கொண்ட சம்பவத்தை அவன் மனம் மறக்கவில்லை. சாதாரண சிறாய்ப்புக் காயமாக இருந்தால் சீக்கிரம் குணமாகிவிடும். ஆழப்பதிந்து போன வெட்டுக் காயமாக அல்லவா ஏற்பட்டிருக்கிறது?