புகை வண்டி பெரும் வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. அதன் வேகத்தைப்போல் ரகுபதியின் மனோ வேகமும் அதிக மாயிற்று. பைத்தியக்காரத்தனமாக அல்லவா அவன் மனைவியை நாடிப் போகிறான்? மறுபடியும் அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகமாட்டாள் என்பது என்ன நிச்சயம்? சிந்தனைச் சுழலில் ஜன்னலின் மேல் தலை வைத்துக்கொண்டே கண்ணயர்ந்து விட்டான் ரகுபதி. விடியற்காலை சில்லென்று காற்றுப் பட்டவுடனேயே விழிப்பு ஏற்பட்டது. ரெயிலும் தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டு ஒரு நிலையத்தில் நின்றிருந்தது. ஊரின் பெயரை உற்றுக் கவனித்தான். 'ஆ! தங்கம் இங்கேதானே அருகில் கிராமத்தில் இருக்கிறாள்' என்று நினைத்தான். "சாவித்திரி மன்னியோடு எங்கள் ஊருக்கு வாருங்கள்!' என்று அழைத்துவிட்டுப் போனாளே! மன்னியும் வேண்டாம், பொன்னியும் வேண்டாம். நான் மட்டுந்தான் போகிறேனே. தங்கத்தின் ஊரில் தீபாவளி கிடையாதா என்ன? கூடை நிறைய இருக்கும் கதம்பம் தங்கத்தின் கருங்கூந்தலுக்குத் தான் அர்ப்பணம் ஆகட்டுமே! பெட்டியிலே வைத்திருக்கும் வாணங்கள், பட்டாசுகளைத் தங்கந்தான் வெடித்து ரசிக்கட்டுமே?" ரகுபதி பெட்டியையும், கூடையையும் அவசரமாக இறக்கிவிட்டுத் தானும் கீழே இறங்கினான். ரெயிலும் அவன் அறியாமையைக் கண்டு சீறுவது போல் 'புஸ்' ஸென்று பெருமூச்சு விட்டுக் கொண்டு கிளம்பிவிட்டது.
-------------
தொடரும்