Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 28 - ஸரோஜா ராமமூர்த்தி
இருளும் ஒளியும் : 28. மைசூரில்
ரகுபதியும் ஸரஸ்வதியும் ஒன்றாகவே ரெயில் நிலையத்துக்கு வந்தார்கள். சற்று முன்பாக ரெயில்கள் கிளம்பின. இருவரும் ஒவ்வோர் ஊரைக் குறிக்கோளாக வைத்துக்கொண்டு பிராயணச் சீட்டுகள் வாங்கியிருந்தார்கள். ரகுபதியின் பிரயாணம் பாதியில் நின்றது. சட்டென்று என்னவோ தோன்றவே ஒருவித யோசனையுமின்றி ரெயிலிலிருந்து அவன் இறங்கி விட்டான். ஸரஸ்வதியின் மனம் களங்கமற்று இருந்தது. இவ்வளவு காலம் மனத்தைப் பீடித்திருந்த கவலையும் ஒருவாறு நீங்கிவிட்டதல்லவா? அத்தான் ரகுபதி தன் மனைவியை அழைத்துவரப் புறப்பட்டுவிட்டான். இனிமேல் அத்தை ஸ்வர்ணத்தின் கவலைகளும் நீங்கிவிடும். ஆகவே, ரெயில் புறப்பட்டவுடன் படுக்கையை உதறிப் போட்டுக்கொண்டு படுத்தவள் விடியுமளவு நன்றாகத் தூங்கினாள். காலைக் கதிரவனது கிரணங்கள், ஓடும் ரெயிலின் ஜன்னல் வழியாகத் தன் மீது பட்டவுடன்தான் ஸரஸ்வதிக்கு விழிப்பு ஏற்பட்டது. செந்தமிழ் நாட்டைக் கடந்து மைசூர் ராஜ்ய எல்லைக்குள் ரெயில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. காவிரி நதி பாய்ந்து வளம் பெற்று இருப்பதால் எங்கு பார்த்தாலும் பசுமை போர்த்த காடுகளும், சிறு குன்றுகளும், புதர்களும் நிறைந்து பார்ப்பதற்குப் 'பசேல்' என்று காட்சி அளித்தது. தமிழ் நாட்டிலே 'சுரீரென்று மக்களைத் தாக்கும் கதிரவன், மைசூர் ராஜ்யத்தில் சற்று நிதானமாகவே பவனி வருகிறான். பனி தோய்ந்த பள்ளத்தாக்குகளில் புகை போல் பனி மூடியிருக்கும் மலைச் சாரலில் அவன் ஜம்பம் ஒன்றும் சாயவில்லை.
ஓடும் ரெயில் ஒரு சிறிய கிராமத்தினூடே செல்லும்போது தலையில் தயிர்க் கூடைகளுடனும், மைசூருக்கே உரித்தான செழுமையான காய்கறிகள் கூடைகளுடனும் பெண்கள் அணியாகக் கேழ்வரகுக் கொல்லைக்குள் புகுந்து செல்வதை ஸரஸ்வதி கண்டாள். காலை ஒன்பது மணிக்கு மேல் ரெயில், ஸ்ரீரங்கப் பட்டணத்தை அடைந்தது. நிலையத்தில் அவளை அழைத்துப் போவதற்கென்று அவளுடைய தகப்பனார் வந்திருந்தார். பெரிய உத்தியோகத்தில் இருப்பவர். அந்தஸ்து வாய்ந்தவர் என்பதற்கு அறிகுறியாக அவருடன் நாலைந்து பேர்கள் வந்திருந்தார்கள். வண்டியிலிருந்து இறங்கியதும் ஸரஸ்வதி அன்புடன், ”அப்பா" என்று அழைத்து அவர் அருகில் சென்று நின்றாள். ” எப்படியம்மா இருக்கி? நீ மட்டுமா தனியாக வந்தாய்?" என்று ஆதுரத்துடன் மகளைக் கேட்டு, ஆசையுடன் அவள் முதுகில் தட்டிக் கொடுத்தார். அவருடன் வந்திருந்த நண்பர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்கள். தகப்பனாரும், அவர் நண்பரும் பின் தொடர ஸரஸ்வதி வெளியே சென்று தயாராக இருந்த வாடகை மோட்டாரில் ஏறிக் கொண்டாள்.
'அப்பாதான் எவ்வளவு மாறிவிட்டார்! மூன்று வருஷங்களுக்கு முன்புகூட இள வயதினர் போல