Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 29 - ஸரோஜா ராமமூர்த்தி
இருளும் ஒளியும் : 29. வரவேற்பு
முற்றத்தில் துளசி மாடத்தின் முன்பு மணிக்கோலமிடும் தங்கத்தின் எதிரில் ரகுபதி அதிகாலையில் வந்து நின்றான். தலைப் பின்னல் முன் பக்கம் சரிந்து விழ, முதுகில் புரளும் மேலாக்கு நழுவ அவள் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். கைகள் 'சரசர' வென்று புள்ளிகளை வைத்தன; புள்ளிகளைச் சேர்த்து அழகிய கோலமாக்கின. கோலத்தை முடித்துவிட்டுத் தலை நிமிர்ந்த போது தான் அவள் சற்றும் எதிர்பாராத விதமாக ரகுபதி காட்சி அளித்தான் அங்கே! தங்கம் தன் அழகிய கண்களால் அவனைப் பார்த்துக் கொட்டக் கொட்ட விழித்தாள். பிறகு வழக்கமான சிரிப்புடன், ”ஓ! அத்தானா! வாருங்கள், வாருங்கள், எங்கே இப்படி? ஓஹோ! தீபாவளிப் பிரயாணமோ?" என்று கேட்டாள்.
"அத்தானேதான்! சாட்சாத் ரகுபதி தான். நீ ஊருக்கு வரும்போது யாரிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்தாயோ, அவனே தான்! தீபாவளி கொண்டாடத்தான் இங்கே வந்திருக்கிறேன்!" என்று சொல்லிவிட்டு, கூடையைப் பிரித்துக் கட்டுக் கதம்பத்தையும், பழங்களையும் எடுத்து அவளிடம் கொடுத்தான்.
'இதற்குள்ளாக உள்ளிருந்து வியப்புடன் அலமு அத்தை பரபரவென்று முற்றத்துக்கு வந்தாள். "வந்தாயாடா, ரகு! வா அப்பா. இப்பொழுதாவது வழி தெரிந்ததே உனக்கு!" என்று அவனை வரவேற்று உபசரித்தாள். தீபாவளி இன்னும் இரண்டு நாட்கள் தாம் இருக்கின்றன என்பதற்கு அறிகுறியாக அவ்வீட்டிலிருந்து 'கம கம' வென்று பலகாரங்களின் வாசனை வீசியது. துளசி மாடத்துக்குக் கோலமிட்டு முடித்தவுடன் தங்கம் கொல்லைப்புறம் சென்றாள். தவிடும், பிண்ணாக்கும் கலந்து பிசைந்து ஆசையுடன் கறவைப்பசுவுக்கு வைத்தாள். 'தக தக' வென்று தேய்த்து அலம்பிய பித்தளைச் செம்பில் நுரை பொங்கும் பாலைக் கறக்க ஆரம்பித்தாள். 'சொர், சொர்'ரென்று பால் பாத்திரத்தில் விழ ஆரம்பித்தது. ரகுபதி, கையில் பல் துலக்கும் 'பிரஷ்'ஷுடன் கொல்லைப்பக்கம் வந்தான். பாலைக் கறந்துகொண்டே தங்கம் அவனைப் பார்த்து. "அத்தான்! கையில் என்னவோ வைத்திருக்கிறீர்களே. அது என்னது? விலை ரொம்ப இருக்குமோ?" என்று கேட்டாள்.
"தூ பிரமாதம்! அதன் விலை ஒரு ரூபாயிலிருந்து இரண்டு ரூபாய்களுக்கு மேல் போகாது" என்றான் ரகுபதி.
தங்கம் ஒரு மாதிரியாகச் சிரித்தாள். பிறகு அவனைப் பார்த்து. “அத்தான்! நான் சொல்கிறேனே என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். நம் பண்ணைக் குடியானவன் கிட்டே ஒரு வார்த்தை சொன்னால் ஒரு கட்டு வேப்பங் குச்சிகளைச் சீவி ஒழுங்கு படுத்தித் தருவான், விலை, கிலை ஒன்றும் நீங்கள் தர வேண்டாம். ஊருக்குப் போகும்போது எடுத்துப் போங்கள்!" என்றாள்.