இவர்களுக்கு என்ன வேலை' என்று நினைத்தாள் அவள்.
ரகுபதி எழுந்து சற்று வெளியே போனபோது. "இந்தாருங்கள்! எல்லாச் சமாசாரங்களையும் ஆற அமரக் கேட்டுக் கொள்ளலாம்; ஒன்றும் கொள்ளை போய்விடாது. அவன் பெண்டாட்டியோடு அவனைப் பேசவிடுங்கள்" என்று கூறிவிட்டு விருந்து தயாரிப்பதற்குச் சமையலறைக்கு விரைந்தாள்.
கூடத்துக்கு வேலையாக வந்த சீதா குறும்புத்தனமாகச் சிரித்து, ”அத்திம்பேரே! அதோ உங்கள் சிறை இருக்கிறது. காவல்காரியும் அங்கேதான் இருக்கிறாள்!" என்று கூறிவிட்டுப் போய்விட்டாள்.
தனியாக விடப்பட்ட ரகுபதி, சீதா காட்டிய அறையைப் பார்த்தான். பிறகு துணிவுடன் எழுந்து அறைக்குள் சென்றான். சாவித்திரிக்கு ஒரு கணம் தன் கால்களின் கீழ் இருக்கும் பூமி நடுங்குவதுபோல் இருந்தது. கட்டிலைக் கையால் பிடித்துக் கொண்டாள். அவனை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சினாள். ரகுபதியின் மனம் அன்பு நிறைந்தது அல்லவா? "சாவித்திரி! இன்னும் என் மேல் உனக்குக் கோபமா?" என்று கேட்டு அவள் கரங்களைப் பற்றித் தன் கைகளுடன் சேர்த்துக்கொண்டான்.
உதடுகள் துடிக்க அவள், 'இல்லை' என்னும் பாவனயாகத் தலை அசைத்தாள். அவன் கரங்களைப் பற்றித் தன் முகத்தை மறைத்துக்கொண்டாள்.
”எல்லாவற்றையும் மறந்து விடுவோம் சாவித்திரி! புதிய வாழ்க்கை தொடங்குவோம்!" என்று ஆர்வத்துடன் அவள் முகத்தைத் திருப்பி அவளைப் பார்த்தான் ரகுபதி.
கண்கள் கலந்து உறவாடின. காதலர்களைத் தனியாக விட்டுவிடுவோம்.
-----
தொடரும்