தேயிலைச் செடிகள் வளர்வதற்கு இவற்றின் லேசான இளம் நிழல் பயன் படுகிறது. இந்த மரங்களின் கிளைகள் அடர்ந்து படர்ந்து வளரும்போது நிழல் அதிகமாகிவிடும் என்பதற்காக அவற்றை வெட்டி விடுவார்கள். ஸில்வர் ஓக் மரத்தைப் போல், ஆசாபாசங்களை அவ்வப்போது வெட்டிக்கொண்டு வாழ்பவர்கள் தான் சமூக சேவையைச் சரிவரச் செய்ய முடியும்.”
’நானும் "ஸில்வர் ஓக்” மரத்தைப் போல் ஆசாபாசங்களை வெட்டிக் கொண்டு வாழவேண்டியவள் தானா? எனக் கென்று தனி வாழ்க்கை கிடையாதா?’
கீழே ராஜாவின் சீட்டிக் குரல் மணி ஒன்பதாகி விட்டது என்பதை அறிவித்தது.
'இன்று திங்கட்கிழமை. சீக்கிரமே கல்லூரிக்குப் போய் அலுவல்களை முடித்துக் கொள்ள வேண்டும். இன்று மாலை கல்லூரி முடிந்ததும் பாரதியின் வீட்டுக்குச் சென்று கணக்குப் பாடத்தைத் தொடங்கிவிட வேண்டியதுதான்.'
சனிக்கிழமை மாலையே போக வேண்டுமென்றுதான் முதலில் நினைத்தாள். ஆனாலும் ஒப்புக்கொண்ட உடனேயே அவ்வளவு அவசரப்பட்டுக் கொண்டு போய்விடக் கூடாதென்பதற்காக, இரண்டு தினங்கள் தள்ளிப் போட்டாள். இந்த இரண்டு நாட்களாக எத்தனைக் கெத்தனை அமைதியோடு இருக்க வேண்டுமென்று எண்ணினாளோ, அவ்வளவுக்கு அவள் உள்ளத்தில் ஒருவிதப் பரபரப்பு அலைந்து கொண்டிருந்தது.
”ஞானம்! சமையலாகி விட்டதா? சாப்பிட உட்காரலாமா?'' என்று கேட்டுக் கொண்டே மாடியிலிருந்து கீழே இறங்கி வந்துவிட்டாள் பார்வதி.
தினந்தோறும், மணை போட்டு, இலை போட்டு, ராஜா வந்து உட்கார்ந்துகொண்டு 'அத்தை அத்தை' என்று அலறிய பிறகே கீழே இறங்கி வருவதுதான் பார்வதியின் வழக்கம். வழக்கத்துக்கு மாறாக ராஜாவுக்கு முன்னால் வந்து விட்ட பார்வதி, "ராஜா, சாப்பிட வரவில்லையா? ஏன் லேட் இன்றைக்கு உனக்கு?'' என்று கேட்டது, ஞானத்துக்குப் பெரும் வியப்பாயிருந்தது.
''நான் லேட் இல்லை அத்தை; நீங்கதான் எர்லி” என்று சிரித்துக் கொண்டே வந்து உட்கார்ந்தான் ராஜா.
"நான் எர்லியா? நாற்பத்தாறு வயது என்பது எர்லியா?'' தனக்குள்ளாகவே எழுந்த கேள்விக்கு விடை தேடிக் கொண்டிருந்தது அவள் உள்ளம்.
""அத்தை! பால்காரச் சின்னையனுக்குக் கல்யாணமாம். அடுத்த மாதம் முகூர்த்தம் வைத்திருக்கிறானாம். இரு நூறு ரூபாய் முன் பணம் வேண்டுமென்கிறான்!'' என்றான் ராஜா.
"அவனுக்கு இதுவரை கலியாணமே ஆகவில்லையா? வயசு ஐம்பதுக்கு மேல் இருக்கும் போலிருக்கிறதே!”