அடக்கி வைத்திருக் கும் அந்த எண்ணத்தை இன்று வெளியிட்டுவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்து கொண்டார். அடுத்த கணமே 'சே! பார்வதி என்னைப்பற்றி எவ்வளவு உயர்வாக எண்ணிக் கொண்டிருக்கிறாள்? என்னிடம் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறாள். இப்படி நான் ஓர் அற்ப ஆசை வைத்திருக்கிறேன் என்று தெரிந்தால் என்னைத் தாழ்வாக எண்ணிக் கொள்வாளோ? எண்ணிக் கொள்ளட்டுமே! தெரியட்டுமே. தெரிந்து தான் போகட்டுமே. ஒரு நாளைக்கு இல்லா விட்டால் ஒரு நாள் தெரிய வேண்டியதுதானே? இதற்கு ஒரு முடிவு ஏற்பட வேண்டியதுதானே. இன்று மாலையே பேச்சுக் கிடையில் திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இருக்கிறதா?' என்று தெளிவாகத் தைரியமாகக் கேட்டு விடுகிறேன். கேட்டு நிச்சயமாக ஒரு பதிலை அறிந்து கொண்டு விடுகிறேன்.'
ஒரு தீர்மானத்துக்கு வந்தவராய் நாற்காலியை விட்டு எழுந்தார், சேதுபதி. அன்று மாலை ஐந்து மணி இருக்கும். தம்முடைய பங்களா வாசலில் மரத்தடி ஊஞ்சலில் உட்கார்ந்து லேசாக ஆடியபடியே ஒவ்வொரு விநாடியும் பார்வதியின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண் டிருந்தார் அவர்.
எங்கோ ஒலிக்கின்ற ஹாரன் சத்தங்களெல்லாம் பார்வதியின் காராயிருக்குமோ என்ற பிரமையை உண்டாக்கின. கடைசியில், காம்பவுண்டுக்கு வெளியே ஒரு கார் வந்து நின்றது. சேதுபதி ஆவலுடன் அந்தக் காரை நோக்கினார். ஆனால் அதில் பார்வதியைக் காணவில்லை. பாரதி மட்டுமே இறங்கி வருவதைக் கண்ட சேதுபதிக்குப் பெரும் ஏமாற்றமாயிருந்தது.
"என்ன பாரதி! இன்றைக்கு டியூஷன் இல்லையா?” என்று கேட்டார் சேதுபதி.
”உண்டு அப்பா. பிரின்ஸிபாலுக்கு ரொம்ப வேலை இருக்கிறதாம். ஆறு மணிக்கு மேல் வருவதாகச் சொல்லி யிருக்கிறார்'' என்றாள் பாரதி.
’அப்படியா?' என்றவர் வரட்டும். நீண்ட நாட்களாக என் உள்ளத்தில் புகுந்து உடைந்து கொண்டிருக்கும் பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டி விடுகிறேன்' என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டவராய் ஊஞ்சலை வேகமாக ஆட்டினார்.
---------------
தொடரும்