ஏற்றுக் கொண்டிருப்பாள். தனக்குக் கிடைத்த ஒரு பெருமையாகவும் எண்ணியிருப் பாள். ஆனால் இன்று இப்போது அவள் உள்ளப் போக்கு அடியோடு மாறியுள்ள இந்த நேரத்தில் அவளால் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
மாலை வேளைகளில் சேதுபதியைச் சந்தித்துப் பேசுவதில் அவள் பேருவகை யடைந்தாள். அதைக் காட்டிலும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் இந்த உலகத்தில் வேறு ஒன்று இருப்பதாகவே அவளுக்குத் தோன்றவில்லை. எனவே, 'மன்னிக்கவும்' என்று பதில் கடிதம் எழுதிப் போட்டு விட்டாள்.
மணி மூன்றடிப்பதற்குள் தன்னுடைய வேலைகளை யெல்லாம், கடமைகளை யெல்லாம் முடித்துக் கொண்டு விட்ட பார்வதி, 'மணி எப்போது ஐந்தடிக்கப் போகிறது' என்று எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தாள்.
மணி ஐந்து அடித்தது.
சேதுபதியைச் சந்திக்கும் ஆவலில் அவள் உள்ளம் துடித்துக் கொண்டிருந்த போதிலும், பாரதி வந்து அழைத்த போது, "எனக்கு இப்போது ரொம்ப வேலை இருக்கிறது. நீ போகலாம். நான் ஆறு மணிக்கு வருகிறேன்'' என்று சொல்லி அனுப்பிவிட்டாள்.
கல்லூரி முடிந்தவுடன் பாரதியையும் காரில் அழைத்துக் கொண்டு டியூஷனுக்குப் புறப்பட வேண்டும் என்பதுதான் பார்வதியின் திட்டம். ஆனால் பாரதி வந்து அழைத்த போது ஏனோ அவள் மனம் மாறிவிட்டது.
பாரதி அப்பால் சென்றதும், 'ஆறு மணிக்கு வருவதாக ஏன் சொல்லியனுப்பினேன்? இதென்ன பயித்தியக்காரத் தனம்?' என்று தனக்குத்தானே சிரித்துக் கொண்டாள் பார்வதி.
அடுத்த ஒரு மணி நேரமும் அவள் தன்னுடைய அறையிலேயேதான் உட்கார்ந்திருந்தாள். ஒரு மணி நேரம் தான் என்றாலும், அந்த நேரத்தில் அது ஒரு யுகமாகத் தோன்றி யது! அறை அவளுடைய சொந்த அறைதான் என்றாலும், அந்த நேரத்தில் அது சிறைக் கூடமாகத் தோன்றியது. பார்வதி ஏதேதோ யோசித்தாள். கடந்து போன தன் பழைய வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை யெல்லாம் எண்ணிப் பார்த்து அசை போடலானாள்.
சிறுவயதில் தாய் தந்தையரைப் பிரிந்து அனுபவித்த துன்பங்கள், தன் சகோதரனுடன் கிராமத்தை விட்டு வந்த சம்பவம், அவனுக்குத் திருமணம் செய்து வைக்கத் தான் பட்டபாடு, தான் காலேஜில் சேர்ந்து படிப்பதற்கும்,