உயர்வாக எண்ணிக் கொண்டிருந்தாள். இன்று அந்த உயர்வுக்கெல்லாம் உயர்வாக இமயமாக வளர்ந்து காட்சி அளித்தார் அவர். அந்த இமயமலைக்கு முன்னால் அவள் ஒரு சிறு குன்று! சின்னஞ்சிறு குன்று! அப்படித்தான் எண்ணினாள் அவள்.
''அப்பா!'' என்று அழைத்துக்கொண்டே அறைக்குள் நுழைந்த பாரதியின் குரல், பிரன்ஸிபாலை விழிப்புறச் செய்தது.
இரண்டு கோப்பைகளில் காப்பியைக் கொண்டுவந்து வைத்த பாரதி, பிரின்ஸிபாலைப் பார்த்து, "ப்ளீஸ்..." என்றாள்.
''உனக்கு இன்று பர்த் டே அல்லவா? மிக்க மகிழ்ச்சி; இப்போது உன் வயது என்ன?" என்று கேட்டாள் பார்வதி.
"இருபது'' என்றாள் பாரதி.
"ஓ, டீன் ஏஜ் முடிந்துவிட்டதென்று சொல்?'' சிரித்துக் கொண்டே கூறினாள் பார்வதி.
பதில் கூறாமல் வெட்கத்துடன் நின்ற பாரதி, "அப்பா, நான் கொஞ்சம் வெளியே போய் என் பிரண்டைப் பார்த்து விட்டு வரப்போகிறேன்'' என்று தன் தந்தையிடம் ஆங்கிலத்திலேயே பேசி உத்தரவு கேட்டாள்.
'அந்த பிரண்ட் கர்ல் பிரண்டா,பாய் பிரண்டா ?' என்று சேதுபதி கேட்கவில்லை. அப்போது இருந்த மன நிலையில் அவருக்கு அதெல்லாம் கேட்கத் தோன்றவில்லை.
பார்வதிக்குத் தன்னுடைய 'டீன் ஏஜ் 'பருவம் பற்றிய நினைவு தோன்றிவிடவே, அந்தச் சிந்தனையில் மூழ்கிப் போனாள்.
"ம்.. இளமைப் பருவத்துக்குள்ள மகிழ்ச்சியும் உற்சாகமுமே தனி!'' என்று பெருமூச்சுடன் கூறினாள் பார்வதி.
"ஆமாம்; குழந்தைப் பிராயம், வாலிபப் பருவம் என்ப தெல்லாம் ஒன்வே டிராபிக், போன்றது. ஒரு வழிப் பாலத் தில் ஒரு முறை போகத்தான் முடியுமே தவிர, திரும்பி வர முடியாது. திரும்பி அந்த வழியில் செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டாலும் முடியாது. திரும்பி வருவதற்கு மனம் இருக்கலாம். ஆனால் செயல்படுத்த முடியாது!'' என்றார் சேதுபதி.
இப்படிச் சொன்னவர் சட்டென்று ஏதோ நினைத்துக் கொண்டவர்போல் பேச்சை நிறுத்திக் கொண்டு, 'இந்த உதாரணத்தை ஏன் சொன்னோம்' என்று எண்ணி மனத்திற் குள்ளாகவே வருத்தப்பட்டார்.
அவர் கூறிய வார்த்தைகள் பார்வதிக்குச் 'சுருக்' கென்றன.
"உனக்கு வயதாகிவிட்டது. இளமைப் பருவத்தைக் கடந்துவிட்டாய். மீண்டும் அதை அடைய முடியாது. ஒரு வழிப் பாலத்தில் மீண்டும் செல்ல ஆசைப்படாதே!'' என்று அவர்