சீக்கிரமே சாப்பிட்டு விட்டு வெளியே சென்றுவிட்டான் என்பதைச் சற்று முன்பு கேட்ட ஸ்கூட்டரின் ஒலியிலிருந்தே பார்வதி புரிந்துகொண் டாள். அவனை நிமிர்ந்து நோக்கவும், அவனுடன் பேசவும் கூடக் கூசிக்கொண்டிருந்த பார்வதிக்கு, அவன் அங்கே இல்லாதது ஆறுதலாகவே இருந்தது.
பார்வதி அதிகம் பேசவில்லை. சாப்பாட்டை முடித்துக் கொண்டு குறித்த நேரத்திலேயே கல்லூரிக்குப் புறப்பட்டு விட்டாள். வழக்கம்போல் செவிட்டுப் பெருமாள் முக்காலியை விட்டு எழுந்து நின்று வணக்கம் செலுத்தினான். கல்லூரிக் காம்பௌண்டுச் சுவர் நெருங்கும்போது காலை விந்தி விந்தி நடந்து வந்துகொண்டிருந்த மிஸஸ் அகாதா 'ஹலோ குட்மார்னிங்' என்றாள். அப்போது மணி பத்தடிக்க ஐந்து நிமிஷம்.
பார்வதி காரைத் தன் அறைக்கு நேராகக் கொண்டு போய் நிறுத்துவதற்குள், அட்டெண்டர் ரங்கசாமி ஓடி வந்து காரின் கதவைத் திறந்தான். இதற்குள் பிரின்ஸிபால் வந்துவிட்டார் என்ற சேதி கல்லூரியெங்கும் பரவிவிடவே, பேச்சுக் குரல் அடங்கி அமைதி நிலவிற்று.
பார்வதி அமைதியாகத் தன் அறைக்குள் போய் அமர்ந்து கொண்டாள். அவள் கையெழுத்துக்காக மேஜை மீது ஏதேதோ கடிதங்கள் காத்திருந்தன. அவற்றைப் படித்துக் கையெழுத்துப் போட வேண்டும். பகல் ஒரு மணிக்கு வெளி நாட்டிலிருந்து யாரோ கல்வித் துறை நிபுணர்கள் வருகிறார்கள். அவர்களை வரவேற்று உபசரித்துக் கல்லூரியைச் சுற்றிக் காண்பிக்க வேண்டும். உதவிப் பிரின்ஸிபாலுக்கு உடம்பு சரியில்லை. அவளுக்குப் பதிலாக வகுப்புக்குச் சென்று பாடங்கள் நடத்த வேண்டும். மாலை நாலு மணிக்கு அவர்களை வழியனுப்ப விமான நிலையத்துக்கு வேறு சென்றாக வேண்டும். பார்வதிக்கு லேசாகத் தலையை வலித்துக்கொண்டிருந்தது. அதைப் பொறுத்துக் கொண்டவளாய், தன் கடமைகளை முடிந்த வரையில் செய்து முடித்தாள் பார்வதி.
மணி மூன்று. அவளால் உட்கார்ந்திருக்கவும் முடியாத நிலை. பாரதியை அழைத்து வரச் சொன்னாள்.
அவள் வந்ததும் பாரதி! இன்று எனக்கு உடம்பு சரியில்லை. ஆகையால் டியூஷனை நாளைக்கு வைத்துக் கொள்ள வேண்டியதுதான். நான் இப்போது வீட்டுக்குச் செல்கிறேன்'' என்று கூறிப் புறப்பட்டாள்.
பார்வதி, சாரதாமணிக் கல்லூரியின் தலைமைப் பதவியை ஏற்று எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை அவள் தலைவலி என்று சொல்லிக் கல்லூரிக்கு வராத நாளே கிடையாது.
பார்வதி முக்கிய அலுவல்களை யெல்லாம் ரத்து செய்து விட்டு, கடமைகளை யெல்லாம் மறந்துவிட்டு, கல்லூரியிலிருந்து இரண்டு மணி முன்பாகவே புறப்பட்டுச் சென்றது அன்றுதான்