Flexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 17 - சாவி
பார்வதி கண் விழித்துப் பார்த்தபோது தன் வீட்டு மாடி அறையில் உள்ள கட்டிலில் தான் படுத்துக்கொண்டிருப் பதை உணர்ந்தாள். கல்லூரியில் மயக்கமுற்றுக் கீழே விழுந்துவிட்ட பின்னர் நடந்தது எதுவுமே அவளுக்கு நினைவில் இல்லை.
ராஜா, பாரதி, ஞானம், கல்லூரி மாணவிகள் சிலர், மிஸஸ் அகாதா, இன்னும் சில புரொபஸர்கள் அத்தனைப் பேரும் அந்த அறைக்குள் கவலை தோய்ந்த முகத்துடன் பார்வதியையே பார்த்த வண்ணம் நின்றுகொண்டிருந்தனர்.
அப்போது இரவு பதினோரு மணி இருக்கலாம். பார்வதி, அவர்கள் எல்லோரையும் ஒரு முறை கண்ணோட்டமிட்டு ”நீங்களெல்லோரும் எத்தனை நேரமாக இங்கே காத்திருக்கிறீர்கள்? பாவம்! சாப்பிட்டீர்களா, இல்லையா? ராஜா! இவர்களை யெல்லாம் கீழே அழைத்துக்கொண்டு சென்று சாப்பிடச் சொல்லு...”என்று ஈனஸ்வரத்தில் பேச முடியாமல் பேசினாள்.
''முதலில் நீங்கள் சாப்பிடுங்க'' என்று கூறி, பக்கத்திலிருந்த ஹார்லிக்ஸை எடுத்துத் தன் கையாலேயே கலந்து கொடுத்தாள் மிளஸ் அகாதா.
அந்த பிரெஞ்சு ஆசிரியையின் அன்பு, பார்வதியின் கண்களைப் பனிக்கச் செய்து விட்டது.
"பாவம்! நீங்கள் கூடவா மாடிப்படி ஏறி என்னைப் பார்க்க வந்திருக்கீங்க! கல்லூரியில் கூட மாடியில் நடக்கும் வகுப்பாயிருந்தால் பாடம் நடத்தப் போக முடியாதென்று கூறுவீர்களே!'' என்றாள் பார்வதி.
''நான் என்ன! கல்லூரி முழுதுமே இங்கேதான் இருக்குது...'' என்றாள் அக்காதா.
திருவாளர் சேதுபதியும், பாலம்மாளும் அப்போது அறைக்குள் பிரவேசிக்கவே, சுற்றியிருந்தவர்கள் சற்று விலகி மரியாதையுடன் நின்றார்கள்
சேதுபதியைக் கண்டதும் பார்வதியின் இதயம் படபடத்தது. ”ஐயோ இவர் எதற்காக இங்கே வந்தார்? இவரை நான் மறக்க முயன்றாலும் இவர் என்னை மறக்கவிட மாட்டாரோ? இவரை இனிக் கண்ணால் காணக்கூடாது; மனத்தாலும் நினைக்கக் கூடாது என்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன். இப்போது இவரே என் எதிரில் வந்து நிற்கிறாரே!”
டாக்டர் பாலம்மாள், பார்வதியின் கை நாடிகளைச் சற்று நேரம் உணர்ந்து பார்த்துவிட்டுப் பின்னர் காது குழலை வைத்துப் பரிசோதித்தாள்.
"கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஒரு மாதம் ஓய்வெடுக்க வேண்டும். அதுதான் ரொம்ப முக்கியம். நான் நேற்றுச் சொல்லிவிட்டுப் போனேன். கல்லூரிக்குப் போகக் கூடாது என்று'' என்று கூறிவிட்டுப் புறப்பட்டாள் டாக்டர்.
டாக்டருடனேயே கீழே இறங்கிச் சென்ற ராஜா ''அத்தைக்கு என்ன ஆகாரம் கொடுக்கலாம் டாக்டர்?'' என்று விசாரித்தான்.