அறைக்கு வெளியிலேயே நின்றுகொண்டிருந்த சேதுபதி, பார்வதியைப் பார்க்கவே விரும்பவில்லை. காரணம் தன்னைக் கண்டதும் அவளால் படுத்திருக்க இயலாது. எழுந்து உட்கார்ந்து விடுவாள். அந்தச் சிரமத்தை அவளுக்குக் கொடுக்கக்கூடாது என்று அவர் எண்ணியது தான்.
ஒவ்வொருவராக வந்து பார்வதியிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டனர். கடைசியில் மிஸஸ் அகாதா விடைபெற்றுக்கொள்ள வந்தபோது பார்வதியின் கண்கள் கலங்கி விட்டன. காலை விந்தி விந்தி நடக்கும் அகாதாவிடம் பார்வதிக்குத் தனிப்பட்ட அன்பு உண்டு. வானமே இடிந்தாலும் பூமியே பிளந்தாலும் அகாதா கல்லூரிக்கு வரத் தவறியதில்லை.
”ராஜா! இந்த பிரெஞ்சு லேடியைக் காரிலே கொண்டு போய் விட்டுவிட்டு வா'' என்று பார்வதி கூறியபோது, ”இவர்களை நானே கொண்டு போய் விட்டுவிடுகிறேன். ராஜாவை எங்கும் அனுப்ப வேண்டாம். ராஜா நீ இங்கேயே இருந்து அத்தையைக் கவனித்துக்கொள். ஏதாவது முக்கியமாயிருந்தால் எனக்கு உடனே டெலிபோன் செய்” என்றார் சேதுபதி, வராந்தாவில் நின்றபடியே.
’தோங்க் யூ' என்று கூறிப் புறப்பட்டாள் அகாதா.
"அப்பா! நான் இங்கேயே இருக்கட்டுமா?” என்று கேட்டாள் பாரதி.
”வேண்டாம்; நீ என்னோடு வந்துவிடு. நாம் வீட்டுக்குப் போனதும் உன் அத்தையை இங்கே அனுப்பி வைக்கலாம். நம்மைக் காட்டிலும் அவள் இங்கே இருந்தால் உன்னுடைய பிரின்ஸிபாலுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து கொண்டிருப்பாள்” என்றார் சேதுபதி.
சேதுபதியின் அன்பு மொழி ஒவ்வொன்றும் பார்வதியின். நெஞ்சத்தைச் சஞ்சலத்திலாழ்த்தின. நேற்று முன் தினமாயிருந்தால் அந்த மொழிகள் அவளுக்கு இனித்திருக்கும். இப்போது அவற்றை அவள் கசப்பு மாத்திரைகளாக்கி விழுங்கிக் கொண்டிருந்தாள்.
'இவர் எதற்காக என்மீது அன்பு பாராட்ட வேண்டும்? அளவுக்கு மீறிய அன்பைப் பொழிந்து என்னைச் சித்திர வதைக்குள்ளாக்க வேண்டும்? நான் மயக்கமுற்று விழுந்ததற்கு இவரல்லவா காரணம்? இவரிடம் நான் கொண்டிருந்த அன்பல்லவா காரணம்! இதுகாறும் இவரையே நினைத்து நினைத்து, இவருடைய அன்புக்காகவே ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன். என்னுடைய எண்ணத்தை இப்போது மாற்றிக்கொண்டு விட்டேன். இவரை மறந்து வாழ முடிவு செய்துவிட்டேன். இப்போது நான் வேண்டுவ தெல்லாம் இவர் என்னிடம் அன்பு பாராட்டாமல் இருக்க வேண்டும் என்பதுதான். தேவி! இந்தச் சோதனையிலிருந்து நீயே என்னைக் காக்க வேண்டும்' என்று வேண்டிக் கொண்டாள்.
வாசலில் சேதுபதியின் கார் புறப்படும் ஓசை கேட்ட போது பார்வதி அந்த ஓசையை உற்றுக்