Flexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 18 - சாவி
சற்று நேரத்துக்கெல்லாம் அவர்கள் மேலே வந்தார்கள். ”இரண்டு நாட்களாக வேலை சரியாயிருந்தது. அதனால் தங்களை வந்து காண முடியவில்லை. மன்னிக்கவேண்டும்” என்றனர்.
”இப்போது மணி என்ன தெரியுமா?” பார்வதி கேட்டாள்.
”பதினொன்று....”
''இப்போது கல்லூரி நடக்கும் நேரத்தில், வகுப்புக்குப் போகாமல் இங்கே வந்திருக்கக் கூடாது...”
"தங்களை இரண்டு நாட்களாகக் காணாமல் இருந்ததே தவறு.”
"கல்லூரி நேரத்தில் வகுப்பை விட்டு வந்தது அதை விடப் பெரிய தவறு. உங்களுடைய முதல் கடமை படிப்பு தான். படிப்பையும் பரீட்சையையும் விட்டுவிட்டு இங்கே வந்திருக்கக் கூடாது. இந்தச் சின்ன விஷயம் மாணவிகளாகிய உங்களுக்குத்தான் தெரியவில்லை யென்றால், ஆசிரியைகளாவது உங்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும். சரி; நேரத்தை வீணாக்காமல் புறப்படுங்கள் ” கொஞ்சம் கடுமையாகவே பேசி முடித்தாள் பார்வதி. பிரின்ஸிபாலின் கண்டிப்பு அவர்களுக்குத் தெரிந்ததே! ஆகவே, போய் வருகிறோம்'' என்று தாழ்ந்த குரலில் விடை பெற்றுக் கொண்டு உடனே புறப்பட்டு விட்டார்கள் அவர்கள்.
அவர்கள் சென்றதும், "பாவம், கண்டிப்பாகப் பேசி அனுப்பி விட்டேன். கொஞ்சங் கூடப் பண்பில்லாதவள் நான்” வருத்தத்துடன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள் பார்வதி.
ஆயிற்று; பார்வதி படுக்கையாகப் படுத்து விளையாட்டாகப் பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. காமாட்சியும் ஞானமும், பார்வதியின் உடம்பைத் தேற்றுவதற்கு இரவு பகலாகக் கண் விழித்துப் பாடுபட்டும் அவள் உடம்பு தேறாமல் நாளுக்கு நாள் கேவலமாகிக் கொண்டே யிருந்தது. உள்ளத்தில் வேதனைகள் புகுந்து அரித்துக் கொண்டிருக்கும் போது உடலை எவ்வளவு போஷித்தும் என்ன?
சேதுபதியின் அன்பைப் பார்வதி என்று மறந்துவிடத் துணிந்தாளோ அன்று முதல் அவளுக்கு நிம்மதியே இல்லை. அவருடைய அன்பை அவளால் மறக்கவோ மறுக்கவோ முடியாமல் உள்ளத்தில் வலி கண்டு, அந்த வலியே அவள் உடலை இளைக்கச் செய்து கொண்டிருந்தது.
பார்வதி கண்களை மூடிப் படுத்திருந்தாள். பழரசத்துடன் மெதுவாகக் கட்டிலின் அருகே வந்து நின்றாள் பாரதி.
கண் விழித்த பார்வதி, ”பாவம்! என்னால் உங்களுக் கெல்லாம் சிரமம்...”
”பரீட்சையெல்லாம் சரியாக எழுதியிருக்கிறாயா, பாரதி! ராஜாவை எங்கே காணோம்?”
“அவன் எப்படி எழுதியிருக்கிறானாம்?” என்று கேட்டாள்.
"இரண்டு பேருக்குமே நேற்றோடு பரீட்சை முடிந்து விட்டது. நன்றாகவே எழுதியிருக்கிறோம்...''