குற்றத்தை அவர் பெருந்தன்மையோடு மறந்து விட்டார். மீண்டும் அம்மாதிரி அவர் ஏதேனும் எனக்காக வாங்கி வரும்போது அதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தச் சந்தர்ப்பம் எனக்கு விரைவிலேயே கிடைத்துவிட்டது. திருமணத்தின்போது அவர் எனக்காக வாங்கி வந்த பனாரஸ் பட்டுப் புடவையை நான் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டேன். அந்தப் புடவையை நான் உடுத்தியிருப்பதை கண்டதும் அவர் கண்களில் வீசிய ஒளி, என்னை மெய் சிலிர்க்கச் செய்தது. என் வாழ் நாள் முழுவதும் நினைவில் வைத்துக் குதூகலப்படுவதற்கு அந்த ஒரு நிகழ்ச்சியே போதும் எனக்கு.'
"அத்தை தங்கள் பெயருக்குத் திருமண அழைப்பிதழ் ஒன்று வந்திருக்கிறது...'' என்று கூறிக்கொண்டே விரைந்து வந்தான் ராஜா.
''யாருக்குத் திருமணம்?... படித்துச் சொல்லு?" ஆவலுடன் கேட்டாள் பார்வதி.
"மீனாட்சிக்கும் - கோபாலனுக்கும் வருகிற ஞாயிற்றுக் கிழமையன்று மதுரையில் திருமணமாம். அது யார் அத்தை மீனாட்சி ? மதுரை மீனாட்சி அம்மனுக்குத்தான் ஏற்கெனவே திருமணம் நடந்தாகி விட்டதே?'' என்று சிரித்துக்கொண்டே கேட்டான் ராஜா.
”எங்கே? அழைப்பிதழை இப்படிக் காட்டு பார்க்கலாம்...'' என்று கேட்டாள் பார்வதி.
"வேண்டாம் அத்தை! உங்களால் படிக்க முடியாது. நானே முழுதும் படிக்கிறேன்'' என்று கூறிப் படிக்கத் தொடங்கினான் ராஜா.
'மீனா என்கிற மீனாட்சிக்கும்' என்று அவன் தொடங்கிய போதே "ஓகோ, நம்ம மீனாவுக்கா?” என்றாள் பார்வதி.
”யார் அத்தை அது மீனா?''
''என் காலேஜில் வாசித்துக் கொண்டிருந்த பெண். டென்னிஸ் நன்றாக விளையாடுவாள். சரி... சரி... இப்போது எல்லாம் புரிந்துவிட்டது. ரொம்ப சந்தோஷம். வருகிற ஞாயிற்றுக்கிழமையன்றா முகூர்த்தம்... ம்..... இந்தக் கலி யாணத்துக்கு நான் நேரில் போகவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். உன் கலியாணத்தையே கீழே வந்து பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை எனக்கு...'' என்று பெருமூச்செறிந்தாள்.
''ராஜா ! இவர்களுக்கு என் பெயரால் ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்பிவிடுகிறாயா?''
''ஆகட்டும் அத்தை?'' ராஜா கீழே போய்விட்டான்.
பார்வதிக்கு மூச்சுத் திணறியது. 'ரத்தக் கொதிப்புள்ள வர்கள் உடம்பையோ, மனசையோ அலட்டிக் கொள்ளக் கூடாது. மூச்சு விடாமல் பேசவும் கூடாது’ என்று டாக்டர்கள் கூறிய வார்த்தைகள் அவள் நினைவுக்கு வந்தன.
அன்றிரவு சேதுபதி பார்வதியைக் காண வந்தபோது மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது.