டிரைவர் என்ஜினை ‘ஆன்’ செய்த போது, ராமசாமி வந்தார். பார்வதியின் பெரியண்ணன். அந்த உறவுக்கு ஏற்ற உருவம். உருவத்திற்கு ஏற்ற பணம் உள்ளவர். பணத்திற்கு ஏற்ற ‘பாவலா’ மனிதர்.
“கல்யாணத்துக்குப் புறப்பட்டாப் போல இருக்கு?”
சொக்கலிங்கம் முகத்தைச் சுழித்தார். காலங்காத்தால வந்துட்டான்! இவன் வாடை பட்டாலே, மூச்சு முட்டும். இனிமேல் போன காரியம் உருப்பட்டாப்லத் தான்!
‘அண்ணன் கேட்டதுக்கு ஏதாவது சொல்லுங்களேன்’ என்பது மாதிரி, பார்வதி, கணவனின் இடுப்பை ரகசியமாக இடித்தபோது, சொக்கலிங்கம், தன் மூத்த மைத்துனருக்குப் பதில் சொல்லும் கட்டாயத்திற்கு உட்பட்டார். கனகச்சிதமாகவே பதில் சொன்னார்.
“பின்ன என்ன... உங்கள் தங்கை இவ்வளவு நகை நட்டு போட்டிருக்கும் போது, நான் இந்தப் பட்டு வேட்டியை கட்டியிருக்கும் போது, கல்யாணத்துக்குத்தான் போவோம்... கருமாந்தரத்துக்கா போவோம்?”
ராமசாமி சளைக்கவில்லை.
“அடடே... நம்ப மல்லிகா அக்காவோட கல்யாணமா? எனக்கு மறந்தே போயிட்டு! நானும் கார்ல ஏறிக்கிறேன்.”
“இல்லத்தான், நாங்கள் வழில ஓர் இடத்துக்குப் போயிட்டு வரப்போறோம். நீங்கள் முன்னால போய் அங்க இருக்கவங்களுக்கு கொஞ்சம் ஒத்தாசை பண்ணுங்க. டிரைவர்! அவரு மறிச்சிக்கிட்டு நிற்கிறாரேன்னு யோசிக்க வேண்டாம். வண்டியை எடு. அவரு தானா துள்ளுவாரு... வண்டிக்கு சேதம் வருமேன்னு பார்க்கியா? சீக்கிரமாய் எடுப்பா...”
கார் சீறிக்கொண்டு புறப்பட்டது. ராமசாமி, அப்போதைக்கு ஒதுங்கிக் கொண்டார்.
பார்வதியால் தாளமுடியவில்லை. மல்லிகாவை விட்டு சிறிது விலகி உட்கார்ந்து கொண்டே, “எங்கள் அண்ணங்கன்னால் ஏன் உங்களுக்கு இப்படி பற்றி எரியுது?” என்றாள்.
“வத்தி வச்சால் பற்றித்தான் எரியும்.”
“உங்கள் தங்கை புருஷனை விட எங்க அண்ணன் தம்பிங்க மோசமில்ல. கல்யாணம் நிச்சயிக்கிறதுக்கு முன்னால, உங்கள்கிட்ட பெண்ணுக்குத் தாய்மாமனாச்சேன்னு, ‘இந்த இடம் பிடிக்குதா அத்தான்னு’ ஒரு வார்த்தை கேட்டாரா? சரி, கேட்கல. கல்யாண நோட்டீசை நேரிலயாவது வந்து கொடுத்தாரா? சரி. கொடுக்கல. கல்யாண வீட்ல யார் யாருல்லாமோ வாழ்த்துரையோ மண்ணாங்கட்டியோன்னு போட்டிருக்கே, உங்கள் பெயரையும் போடுறது? சரி போடல. பெண் வீட்டார்னு சொல்லி, அண்ணன்மாருங்க பெயருங்களை போட்டிருக்காரு... பிள்ளைகளோட பெயருங்களை போட்டிருக்காரு... தாய்மாமா பெயரை ஏன் போடல? இவள்