போகப் போவதில்லை என்பது போல். படுக்கும் போது உடுத்திருந்த பருத்தி ஆடையோடு இருந்தாள். பார்வதி, அவளருகே வந்து, முகத்தை நிமிர்த்தினாள்.
“பைத்தியம்... இன்னுமா அந்த மனுஷன் பேசினது மனசில நிக்குது? இதுக்கு வருத்தப்படுறவள், எதுக்குத் தான் வருத்தப்பட மாட்டே? சொந்த அப்பாதானே பேசினார்? பேசினால் பேசிட்டுப் போகட்டும். இனிமேல் வேணுமுன்னால், அங்கே போக வேண்டாம். சரி, ஆட்டோ வந்துட்டுது, புறப்படுடி.”
“சொந்த அப்பா, சொந்தமில்லாத அப்பான்னு பேசுனிங்கன்னால், எனக்குக் கோபங்கோபமாய் வரும். அப்பா பேசிட்டார்னு நான் வருத்தப்படல... அந்த ஆள், நாலு பேரு மத்தியில், சனியன்னு பேசிட்டார்னு தான் வருத்தமாய் இருக்கு. ஏம்மா, படிக்காதவங்களுக்கு நாகரிகமாய் பேச வராதோ...”
“நான் கூடத்தான் படிக்கல. நாகரிகமாய் பேசாமலா இருக்கேன்...”
“நான் படிக்காத ஆண்களைச் சொன்னேன்.”
சொக்கலிங்கம் உள்ளே வந்தார்.
“நான் கூடத்தான் படிக்கல... எப்போதாவது அநாகரிகமாய் பேசியிருக்கேனா? இழவு எடுத்த பயல், பேசினால் பேசிட்டுப் போறான். ஏதாவது பட்டச் சாராயம் போட்டிருப்பான். பன்னாடப் பயல்... அவனுக்காகவா இப்படி உட்கார்ந்திருக்கே? பெருமாள் மாதிரி ஆட்களையும், அவங்க பேசறதையும், நாம, அவங்களை மனுஷனாய் எண்ணி மதிப்புக் கொடுத்தால், அப்புறம் நாம எண்ணுறதுல்லாம் மனுஷத்தனமாய் இருக்காது. விடு கழுதையை... சீக்கிரமா புறப்படு... நானும் நுங்கம்பாக்கம் வரை, ஆட்டோவுல வரணும்... உம் புறப்படும்மா... நான் மட்டும் அவன் பேசும் போது இருந்திருக்கணும்... சரி... ஜல்தியாய் புறப்படும்மா...!”
அந்த ஆளை மனதில் இருந்து கட்டாயமாக விலக்கிக் கொண்டே, மல்லிகா புறப்பட ஆயத்தமானாள். புடவையை எடுப்பதற்காக, அவள் பீரோவைத் திறந்த போது சொக்கலிங்கம் வெளியே வந்தார்.
சொக்கலிங்கமும் மல்லிகாவும் ஆட்டோவில் ஏறிய போது பார்வதியின் அண்ணன், அந்த ஆட்டோவை வழி மறிப்பது மாதிரி வந்து நின்றுவிட்டு, பிறகு “காலேஜுக்கா... இல்ல செட்டியார் வீட்டுக்கா... எப்படியோ... நீங்க காலேஜுக்கும் மல்லிகா செட்டியார் வீட்டுக்கும் தெரியாமல் போயிடப்படாது. டிரைவர், யார் யார் எங்கு இறங்கணும் என்கிறதை ஞாபகப் படுத்துங்க...” என்று சொல்லிக் கொண்டே, வாசல் படிக்கட்டில் கால் வைத்தார்.
வாசலில் நின்ற பார்வதி, “வாங்கண்ணா” என்றாள்.
சொக்கலிங்கம், திடீரென்று, ஆட்டோவில் இருந்து இறங்கி, “நீ போம்மா... நான் செட்டியார் வீட்டுக்குப் போகலை. இவரு முகத்துல விழித்த பிறகு எங்கேயும் போகப்படாது. நீ கூட