வாழ்ற எனக்கு, அந்த மானத்தை விட நீதான் முக்கியம். ஆனால் ஒண்ணு. உன்னை அந்த கேடு கெட்ட ரவுப் பயலுக்கு கட்டிக் கொடுக்கத் துணிந்தவங்க. எதுக்கும் துணிந்த பாவிங்களாத்தான் இருப்பாங்க... நீ மட்டும் அவங்க சொந்த மகளாய் இருந்தால் இப்படி அந்த சோதாப் பயலுக்கு காவு கொடுக்கிற எண்ணம் வருமா? இனிமேல், அந்த வீட்ல, நீ, ராமன் பயலை கட்டிக்காம இருக்க முடியாது. இனிமேல் நீ அங்கே போனால், அவளுக்கு இளக்காரமாய் போய்விடும். உன்னை... எப்படி வேணுமுன்னாலும் செய்யலாம் என்கிற தைரியம் வந்துவிடும். என்னாலயும் தட்டிக் கேட்க தகுதியில்லாமல் போயிடும். இவ்வளவு நீ அழுறே... சொக்கலிங்கத்துக்கோ, அவன் பெண்டாட்டிக்கோ... நிஜமாகவே உன் மேல் பாசம் இருந்தால் இங்கே வந்து கூட்டிட்டுப் போகலாமே? என்னை, ரெண்டு அடி அடித்துவிட்டு கூட கூட்டிட்டுப் போகலாமே... நான் திருப்பியா அடிப்பேன்? உன்னை இங்கே கொண்டு வந்ததுல நான் சந்தோஷப் படுறேன்னு நினைக்கிறியா... நீ நல்லா இருக்கணும் என்கிறதுதான் எனக்கு முக்கியம்மா... நான் பாவி... நான் பாவி...!”
பெருமாள், தன் தலையிலே அடித்துக் கொண்டார். ஆனால் அழவில்லை.
மல்லிகா, அப்பாவையே பார்த்தாள். அவருக்குள்ளே எவ்வளவு பாசம். எவ்வளவு அன்பு. தியாகராய நகருக்குப் போனால், அப்பா, அம்மாவோடு, ராமனையும் பார்க்க வேண்டியதிருக்குமே...
மல்லிகா முடங்கிப் படுத்தாள். செல்லம்மா, மகள் தலையை எடுத்து, தன் மடியில் போட்டுவிட்டு, குழந்தையை குலுக்குவது போல் குலுக்கினாள். மல்லிகா, கை கால்களைச் சுருட்டிக் கொண்டு, முடங்கிக் கொண்டே இருந்தாள்.
--------------
தொடரும்