வலது காலை மட்டும் நகர்த்தினாள். ராமசாமி உபதேசம் செய்பவர் போல் பேசினார்.
“எனக்கென்ன, போகணுமுன்னா போங்க. அங்கே போனதும், அந்த குடிகாரன் வாயில வந்தபடி பேசப் போறான். அரிவாளத் தூக்கிக்கிட்டு இவரை வெட்டினாலும் வெட்டுவான். எனக்கென்ன, போயிட்டு வாங்க. உங்களுக்கெல்லாம் பட்டாத்தான் புத்தி வரும்...”
இப்போது சொக்கலிங்கம் தயங்கினார். தங்கையின் கணவர் அவரை நேருக்கு நேராக நின்று திட்டமாட்டார். இருந்தாலும் இவரு சொல்றது மாதிரி, அரிவாளை கிரிவாளை தூக்கினால்? இவளை மானபங்கமாய் பேசிவிட்டால்...?
சொக்கலிங்கத்தின் மனதில் உதித்த அச்சமும் சந்தேகமும் அவர் பேச்சில் நன்றாக ஒலித்தது.
“என்ன பார்வதி... போகலாமா, வேண்டாமா... சொல்லு...”
பார்வதி சொல்வதற்கு முன்னால், அண்ணனை நோக்கினாள்.
“என்னை ஏன் பார்க்கறே? போறதுன்னால் போ. ஆனால் ஒண்ணு. அவள் கூட நீ சேருறதாய் இருந்தால் இனிமேல் என்னை அண்ணன்னு சொல்லப்படாது. உன்னை தூசி மாதிரி நினைச்சிட்டுப் போனவளை நீ கூட்டிக்கிட்டு வந்தால், எங்களை தூசின்னு நினைச்சதா அர்த்தம். அவளை சேர்க்கிறதாய் இருந்தால், எங்களை தள்ளி வச்சிடு. அவள் இனிமேல் இந்த வீட்டுக்குள்ள கால் வச்சால், நாங்க கால் வைக்க மாட்டோம். அப்புறம் உனக்கும் எங்களுக்கும் ஒட்டும் கிடையாது; உறவும் கிடையாது. இவரு காலத்துக்குப் பிறகு, ‘மல்லிகா திட்டினாள். அவள் அப்பன் அடிக்க வரான்’னு எங்க கிட்ட வந்து கண்ணைக் கசக்கக் கூடாது. நாங்க ஒண்ணும் கேட்கமாட்டோம். உன் தலையிலே என்ன எழுதியிருக்கோ, அதை என்னால மாத்த முடியுமா? வேணுமுன்னால் போ...”
பார்வதி பயந்து விட்டாள். தள்ளாத வயதில், மல்லிகா, தான் இப்போது அவளிடம் எப்படி நடந்து கொண்டாளோ, அப்படி தன்னிடம் அவள் நடந்து கொள்வது போலவும், அம்மா என்று சொல்லாமல் அத்தை என்று சொல்வது போலவும், அவள் அப்பா பெருமாள் தன்னை நாயே பேயேன்னு திட்டுவது போலவும், அழுது கொண்டு அண்ணன் வீட்டுக்குப் போனால் அங்கே கதவு சாத்தப்படுவது போலவும் கற்பனை செய்தாள். பயத்தில் அவள் உடம்பெல்லாம் ஆடியது. அண்ணனைப் பார்க்கும் போது, அதிகமாக ஆடியது. இறுதியில் திட்டவட்டமாகப் பேசினாள்.
“எங்க... அண்ணியைப் பார்த்துட்டு வாரேன்... அண்ணி... வீட்லதான அண்ணா இருக்காங்க...”
ராமசாமி, ‘பிளஸ்’ மாதிரி தலையாட்டினார். பார்வதி புறப்பட்டாள். அண்ணியிடம் நடந்ததைச் சொல்லி அழவேண்டும்! ராமசாமி, தங்கையுடன் போய் விட்டார்.
சொக்கலிங்கம், தனிமையில் தவித்தார். கடைக்குப் போக மனமில்லை. யாருக்காக சம்பாதிக்க