இந்தா நாலு ரூபாய்தான் இருக்கு...”
“ஒரு ரூபாய் ஐம்பது பைசா போதும்பா...”
“பரவாயில்லை. இதுதான் நான் செய்யுற உருப்படியான செலவு. வச்சுக்கோ.”
மல்லிகா, பணத்தை வாங்கிக் கொண்டாள். மீதிக் காசில் அப்பாவுக்கு ரசகுல்லா வாங்கிட்டுப் போகணும். அம்மாவுக்கு மசால் தோசை. நல்லா தின்பாங்க. மிச்சக் காசிருந்தால் சரவணனுக்கு ஒரு கைக்குட்டை.
மல்லிகாவிற்கு வெட்கமாக இருந்தது. அவன் பதிலுக்கு என்ன கொடுப்பான்? என்ன கொடுக்கணும்? இந்த அப்பா, அந்த அப்பாகிட்ட எப்படி எப்படி நடந்துக்கணுமுன்னு சொல்றாரே. நான் சரவணனைப் பார்க்கப் போறதும் தெரிந்தால்... அவர் கிட்டேயும் எப்படி எப்படி நடக்கணுமுன்னு சொல்வாரா?
அப்பா - அம்மாவைப் பார்க்கப் போகிற பாசத் துடிப்போடு, காதலித்தவனை காணப் போகிற நேச நெஞ்சோடு, அவள் புறப்பட்டாள். இதற்குள் விஷயத்தைப் புரிந்து கொண்ட ‘இட்லி’ ஆயா தங்கம்மா “வந்துடு கண்ணு. இருந்துடாதே” என்றாள். ராக்கம்மாள், “நீ மட்டும் இங்கே வர்ல... நான் வீட்டைக் காலி பண்ணிடுவேம்மா...” என்றாள்.
மல்லிகா சிரித்துக் கொண்டே புறப்பட்டாள். பெருமாள் பஸ் நிலையம் வரைக்கும் வழியனுப்ப எழுந்தார். செல்லம்மா தன் வயிற்றை இறுக்கிப் பிடித்துக் கொண்டே, ‘அண்ணன் அவளை நாலு அடி அடித்தாவது அங்கேயே இருக்கச் சொல்லணும்’ என்று நினைத்துக் கொண்டாள்.
பெற்றவனும், அவருக்குப் பிறந்தவளும், வாசலைத் தாண்டப் போகிற சமயத்தில் எதிர்ப்பக்கத்தில் இருந்து பெருமாளின் பதினேழு வயது மகன் பரமசிவன் படி வாசலைத் தாண்டினான். சொக்கலிங்கத்தின் அரிசி மண்டியில் வேலை பார்ப்பவன். வேளச்சேரியில் இருக்கும் அந்தக் கடையை கவனித்துக் கொண்டு, அந்த கடைக்கருகே உள்ள ஒரு சின்ன அறையிலேயே தூங்கிக் கொள்பவன். மல்லிகா வந்த பிறகும், இன்று வரை அங்கே தான் இருந்தான். சொக்கலிங்கமும், அவனைப் போகச் சொன்னதில்லை. பெருமாளும் அவனை வரச் சொன்னதில்லை.
பெருமாள், மகனை செல்லமாய் அதட்டினார்:
“என்னடா... காலங் காத்தால, இங்கே ஏதும் அரிசி மூட்டை கொண்டு வந்தியா...”
“ஒரேயடியா வந்துட்டேன்.”
“ஏண்டா?”
”நம்மளால் அங்கே இருக்க முடியாது.”
“அதுக்கு என்னடா அர்த்தம்? சொல்றதைச் சீக்கிரமாச் சொல்லித் தொலையேண்டா.”
“ஒண்ணுமில்ல. வழக்கமா வாரது மாதிரி மாமா கடையில கணக்குப் பார்க்க வந்தார். கூட