எல்லோரும் தூங்கி விட்டார்கள். உண்ட களைப்பில் தூங்குபவர்களை விட, உழைத்த களைப்பில் தூங்குபவர்களே அதிகம். படுத்துக் கிடந்த அந்த உழைப்பாளிகள், மூட்டைப் பூச்சிகள் கடிக்க முடியாத அளவிற்கு இறுகியிருந்த அந்த உடம்புகள், உயிர் வேறு, உடல் வேறாய் போனவர்கள் போல் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நூறு ரூபாய் கோணிக்கட்டை பறி கொடுத்த பெருமாள், துண்டை முகத்தைச் சுற்றிப் போட்டுக் கொண்டே, தூக்கத்தில் கூட வெளியே தலைகாட்ட விரும்பாதவர் போல், ஒருவித தப்பிப்பு மனோபாவத்தில், தூங்கிக் கொண்டிருந்தார்.
மல்லிகாவால் தூங்க முடியவில்லை. ரமணன் கடிதத்தைக் கிழித்துப் போட்டவள், இப்போது, தன் நெஞ்ச அணுக்கள் கிழிவது போல் புரண்டு கொண்டிருந்தாள். திடீரென்று அவளுள்ளே ஒரு நினைவு. இந்த சரவணன் ஒரு இளைஞன் தான். இவனை மாதிரி எப்போதாவது, இப்படிக் காட்டுத் தனமாகப் பார்த்திருக்கிறாரா? அவரோடு ஒன்றாக நடந்திருக்கிறேன். கை படும்படியாய் நடந்திருப்பாரா?
திடீரென்று, அந்த நினைவுள்ளே இன்னொரு நினைப்பு. இப்படி ஒரு கடிதத்தை, இந்த சரவணன் எழுதியிருந்தால் எப்படியிருக்கும்? எழுதாத ஒன்றை எழுதியதாய் நினைக்கையில், மேனியெங்கும் இப்படிப் பரவசமானாள். அவர் எழுதியிருந்தால்... எழுதியிருந்தால்... எழுதவில்லையே. சொல்ல வேண்டியதை, சொன்ன பிறகு கூட அவர் எழுதவில்லையே. அவர் எப்படி, எழுதுவார் அந்த விஷயத்தை? இலை மறைவு காய் மறைவாய் சொன்ன பிறகு, அவர் என்னையோ நான் அவரையோ பார்க்கவில்லையே. நான் எங்கே இருக்கிறேன் என்பதை அவர் விரும்பியிருந்தால் கண்டுபிடிக்க முடியாதா? என்ன இது. ஏதோ பீச்சுக்குப் போனது மாதிரியும், சினிமாவுக்குச் சேர்ந்து போனது மாதிரியும், அவர் கையிலடித்து சத்தியம் செய்து கைவிட மாட்டேன்னு சொன்னது மாதிரியும்...
அப்படியும், இப்படியுமாக... நினைத்துக் கொண்டிருந்த மல்லிகா, எப்படியும் அவனைப் பார்க்க வேண்டும் என்று துடித்தாள். எப்படிப் பார்ப்பது? எப்படியாவது பார்க்க வேண்டும். அவனை மட்டுமல்ல. அவள் அப்பாவையும், அம்மாவையும் பார்க்க வேண்டும். ‘அவரை’ப் பார்க்கக் கூட வேண்டாம். ‘அவரைப்’ பார்க்க வேண்டும்.
காலையில் எழுந்ததும், அப்பா எழுவது வரைக்கும், அவள் தளத்திற்கும், வீட்டிற்குமாக நடந்து கொண்டிருந்தாள். அவரோ, நூறு ரூபாய் போனதுக்கு, நூறு மணி நேரம் தூங்கப் போகிறவர் போல் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பாவை எழுப்பலாமா? சீ, கூடாது. அம்மாவிடம் சொல்லிவிட்டு, அவங்களையே அப்பாவிடம் சொல்லும்படி சொல்லிவிட்டுப் போகலாமா?
ஒரு மாதமாகப் பொறுத்திருந்தவள், அந்த ஒரு மணி நேரமும் பொறுக்க முடியாதவளாய்