“பரவாயில்ல... நாம பட்டினி கூட கிடக்கலாம். கேணியில் ஒரு பெண்ணை தள்ளப் போவதை... நாம் பார்த்துட்டு நிற்கப்படாது... வாங்கப்பா...”
மல்லிகாவும், பெருமாளும் புறப்பட்டார்கள். செல்லம்மாவுக்கு, ஒன்றும் ஓடவில்லை. குடித்தனப் பெண்களுடன் இரண்டறக் கலந்து, ஒருவித சமூகப் பிரச்சினையில் தன்னைப் பிணைத்துக் கொண்ட பெருமிதத்தில் மகளும், அந்த மகளைப் பெற்ற பெருமிதத்தில் தந்தையும் நடந்தார்கள்.
பெருமாளுக்கு, வக்கீலைக் கண்டுபிடிப்பது கஷ்டமாக இல்லை. குடித்துவிட்டு போலீசிற்குப் போய், கோர்ட்டில் நிறுத்தப்படும் போதெல்லாம், அவருக்கு வழக்கறிஞர் பரிச்சயங்கள் நிறைய ஏற்பட்டிருந்தன.
இருவரும் ‘மண்ணடி’யில் இருந்த ஒரு வக்கீல் வீட்டுக்குப் போனார்கள். வக்கீல், பெருமாளைப் பார்த்து, “இன்னுமா... குடியை விடல” என்றார். மல்லிகா, “வணக்கம் சார்” என்றதும், பதிலுக்கு “வணக்கம்” என்றார். அறிமுகங்கள் முடிந்தபிறகு, மல்லிகா, ‘அப்பா’ வீட்டில் தான் வளர்ந்த விவரத்தையும், வாழ்க்கை முறையையும் சொல்லிவிட்டு, பேச்சியம்மாவின் கல்யாணத்தை நிறுத்துவதற்காகவே, இந்த நடவடிக்கையில் ஈடுபடப் போவதாகச் சொன்னாள்.
“அது பாயிண்ட் ஆகாதும்மா” என்றார் வக்கீல்.
“பாயிண்டா பண்ணிப் பாருங்களேன் சார்.”
வக்கீல் யோசித்துவிட்டு, சொன்னார்: “ஆல்ரைட். சொக்கலிங்கத்திற்கு ஒரு நோட்டீஸ் விடுவோம். அந்த நோட்டீஸ்ல ஒரு நகலை, பேச்சியம்மாவுக்கு அனுப்பி வைக்கலாம். கல்யாணம் தானாய் நின்னுடும். பேச்சியோட சித்திக்காரி, மூச்சுப் பேச்சில்லாமப் போயிடுவாள்.”
வக்கீல், மல்லிகாவிடம் வக்காலத்துப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.