Flexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 19 - சு. சமுத்திரம்
அடிமேல் அடியடித்தால் அம்மியே நகரும் போது, சொக்கலிங்கத்தை சொக்க வைப்பது, மைத்துனர்மார்களுக்குச் சிரமமாகவில்லை. ஏற்கெனவே சட்டாம்பட்டி இளம் பெண்ணுடன், தன்னை இணைத்துப் பார்த்து, லேசாகத் திருப்திப்பட்டுக் கொண்ட அவரிடம், “உமக்குன்னு ஒரு குழந்தை இருந்திருந்தால்... இந்த மல்லிகா மாதுரி நடக்குமா? தான் பெறணும் பிள்ளை... தன்னோட பிறக்கணும் பிறவி” என்று சொல்லும் போதெல்லாம், சொக்கலிங்கம் “போங்கப்பா” என்று சிணுங்கி மைத்துனன்மார்களின் வயிற்றில் நிஜமாகவே, ‘கிச்சுக் கிச்சு’ காட்டினார்.
பிறகு, ஒரு சமயம் திருச்செந்தூர் கோவிலுக்குப் போகும் சாக்கில், அவரைச் சட்டாம்பட்டிக்குக் கூட்டிப் போய், பேச்சியம்மாவைக் காட்டினார்கள். “என்னை சித்திகிட்ட இருந்து காப்பாத்துங்க தாத்தா” என்பது மாதிரி பார்த்த பேச்சியின் பார்வையை, சொக்கு, காதல் சமிக்ஞையாக எடுத்துக் கொண்டார்.
அப்புறம் சென்னைக்கு வந்த பிறகு, சொக்கலிங்கமே “எனக்குன்னு ஒரு பிள்ளை பிறக்க வேண்டாமா...” என்று சொல்வதும், உடனே, மைத்துனன்மார்கள் அவருக்கு ‘கிச்சு கிச்சு’ காட்டுவதும், கடைப் பையன்களுக்கே, தங்களையே யாரோ ‘கிச்சு கிச்சு’க் காட்டுவது போல் சிரிப்பைக் கொடுத்தது.
பார்வதிக்கு, அண்ணன்மார்களின் திட்டம் புரியவில்லை. அவர்களிடமே, அவள் சொன்ன போது “ராமன், மல்லிகா இருந்தால் தான் உருப்படுவான். அவனை... சுவீகாரம் எடுத்தால், மச்சான் மண்டையப் போட்ட உடனே கோவிந்தா. சட்டாம்பட்டிக்காரியைக் கட்டினால்... உனக்கு அடக்கமாய் இருப்பாள். கிராமத்துப் பொண்ணு பாரு” என்றார்கள்.
சொக்கலிங்கம் தன் சொந்தக்காரப் பெண்ணைக் கட்டிவிட்டால், அப்புறம் சொத்தை பரிபாலனம் செய்யலாம் என்று பார்வதியின் சின்ன அண்ணன் நினைத்தார்.
பெரிய அண்ணன், இதைப் புரிந்து கொண்டு, “அது எப்படிடா?” என்றார். உடனே சின்னவர் “உன் பெண்ணை... என் மைத்துனன் என்ஜினியருக்கு முடிக்கலாமுன்னு நினைக்கேன். இப்போதான் ‘எப்படி’ன்னு யோசிக்கிறேன்” என்றார். அதனால், எதிர்ப்பை அகற்றிக் கொண்டே “எப்போடா... அந்தக் கல்யாணத்தை வைக்கலாம். எப்போடா இந்தக் கல்யாணத்தை வைக்கலாம்” என்றார் பெரியவர். பொது எதிரியான மல்லிகாவைக் கழித்துக் கட்டியாகிவிட்டது. இன்னொரு பொது