சொக்கலிங்கம் அதிர்ந்து போனார். அந்த ரவுடி சொன்ன வார்த்தை என்னும் சேற்றுக்குள்ளும், மனிதாபிமானம் என்ற செந்தாமரை பூத்திருப்பதைக் கண்டார். வீணான அவப்பெயருக்கு ஆளாகிவிட்டோமே என்று வருந்தினார். அதே சமயம், பேச்சியம்மாவையும் அவரால் மறக்க முடியவில்லை. இப்படி, என்ன செய்வதென்று அவர் தவித்துக் கொண்டிருந்த போது, மல்லிகாவிடம் இருந்து சொத்துக்கு உருமை கோரி நோட்டீஸ் வந்தது. அது அவருக்கு, தனது ஈமச் சடங்கிற்கான பத்திரிகை போல் தெரிந்தது. அதில் கறுப்பு பார்டர் போட்டிருக்கும்! இதை, கறுப்புக் கவுன் போட்ட வக்கீல் அனுப்பியிருக்கிறார்.
“என் மகளா... இப்படிச் செய்துவிட்டாள்? என் மகள் என்றால் இப்படிச் செய்வாளா... செல்லக்கிளியே... இதுக்கா உன்னை வளர்த்தேன்... இதுக்கா உன்னை தத்து எடுத்தேன்? இதுக்கா... இதுக்காம்மா?” அவருக்கு அழுகையே வந்துவிட்டது.
ஓரிரு நாட்கள் ஓடின. சட்டாம்பட்டியில் இருந்து, கல்யாணம் கிடையாது என்று வந்த கடிதத்தை, பார்வதி, பிரித்துப் படிக்குமுன்னாலேயே, அந்தக் கடிதம், எங்கிருந்து வந்தது என்ற விவரம் தெரியும் முன்னாலேயே, சொக்கலிங்கம் மார்பைப் பிடித்துக் கொண்டே கத்தினார்.
“எய்யா... எம்மா... நெஞ்சை வலிக்கே... நெஞ்சு...”
சொக்கலிங்கம், மார்பைப் பிடித்துக் கொண்டே படுக்கையில் விழுந்தார். “என்னாங்க... என்னாங்க” என்று சொல்லிக் கொண்டே ஓடி வந்த பார்வதியின் வார்த்தைகள் தன் காதில் விழும் முன்பே, அவர் படுக்கையில் விழுந்தார்.
--------------
தொடரும்