குமாஸ்தாவைக் கூப்பிட்டு பாயிண்டுகளைக் கொடுத்தார். அனுபவப்பட்ட குமாஸ்தா. “இந்த வழக்குல நிச்சயம் ஜெயிச்சிடுவோம் சார். எவ்வளவு பெரிய ‘வீக்’ கான வக்கீலாலும் இந்த கேஸ்ல ஜெயிச்சுடலாம்” என்ற போது, அதிர்ஷ்ட தேவதையின் அரவணைப்புக் கிட்டாத வக்கீலும் ‘வீக்’காகச் சிரித்துக் கொண்டார்.
அப்போது, “கூப்பிட்டிங்களாமே அப்பா” என்று பழக்கப்பட்ட குரல் ஒன்று கேட்டு, தலை நிமிர்ந்த மல்லிகா, “நீங்களா” என்றாள். சரவணனும் “நீங்களா” என்றான்.
சரவணனும் மல்லிகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட போது, பெருமாளும் வக்கீலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“காலேஜ்ல... இவங்க... சாரி... நான் படிக்கிற காலேஜ்ல இவங்களும் படித்தாங்க. ஆமாம். எதுக்காக காலேஜ் வரவில்லை? படிப்பை அரைகுறையாவா விடுவது?” என்று சரவணன் இழுத்த போது, மல்லிகா சிறிது நிலை தடுமாறினாள். உதட்டைக் கடித்துக் கொண்டு அவனை சாய்வாகப் பார்த்தாள். பிறகு, “காலேஜ் தான் கண்ணுக்குள்ளேயே நிற்குது” என்றாள். “அவ்வளவு பெரிய கட்டிடத்தை எப்படியம்மா தாங்கிக்கிறே” என்று வக்கீல் ‘விட்’ அடித்த போது, அவளை விடாமல் பார்த்த சரவணன் அவர் சொன்னதைப் புரிந்து கொண்டவன் போல், தலையை ஆட்டினான். அவளுக்கு அது அழகாகத் தோன்றியது.
பெருமாளும், மல்லிகாவும் எழுந்தார்கள். சரவணன் பஸ் நிலையம் வரை வந்து, அவர்களை வழியனுப்பினான். பெருமாள், அவனிடம் குழந்தை மாதிரி நடந்த விஷயங்களை, ஏற்ற இறக்கத்தோடு சொன்னார்.
பஸ் புறப்பட்டது. பெருமாள் அவனைப் பார்த்து, “நம்ம வீட்டுக்கு ஒரு தடவ வா தம்பி” என்றார்.
மல்லிகா, “எங்க வீடு... சின்ன வீடு” என்று சொல்லிச் சிரித்தாள்.
“எனக்கு வீடு முக்கியமில்ல... வீட்டில் இருக்கிற ஆட்கள் தான் முக்கியம்” என்று சரவணன் விடை பெற்றான்.