அவருடைய கூடப் பிறந்த தங்கை. அவள் போன அப்புறம் மாமாவை நான் பார்க்கவேயில்லை" என்று வந்திருந்த இளைஞன் பேசிக்கொண்டே நின்றான்.
பவானிக்கு என்னவோ போல் இருந்தது. அவளுக்கு இப்படியெல்லாம் பிறரிடம் பேசிப் பழக்கம் இல்லை. நெஞ்சில் உறுதியும், தைரியமும் வாய்ந்தவளாக இருந்தாலும் நடைமுறையில் அவள் வெகு சங்கோஜி. கட்டிய கணவனிடமே அவள் மனம் விட்டுப் பழகப் பல மாதங் கள் ஆயிற்று. ஆகவே தயக்கத்துடன் அவனைப் பார்த்து "இப்படி பெஞ்சியில் உட்காருங்கள். நான் போய் உங்கள் மாமாவையும் மாமியையும் அழைத்து வருகிறேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
வந்திருந்த இளைஞன் வெகு சுவாதீனமாகப் பெஞ்சியில் வந்து உட்கார்ந்து கொண்டான். பிறகு, "நோ! நோ! அனாவசியமாக உங்களுக்கு ஏன் சிரமம்? நானே போகிறேன்" என்று சொல்லிக் கொண்டு எழுந்தான். அதற்குள் பவானி கொல்லைப்-புறம் சென்று பார்வதி அம்மாளையும் கல்யாணராமனையும் அழைத்து வந்தாள்.
பார்வதி அம்மாள் ஒரு நிமிஷம் தயங்கியபடி அவனைப் பார்த்தாள். ’சட்'டென்று புரிந்து கொண்டவள் போல், ”யார்? மூர்த்தியா? எப்போடா வந்தே?" என்று கேட்டாள்.
கல்யாணராமன் மட்டும் ஒன்றுமே பேசவில்லை. பிறகு வீட்டிற்கு வந்தவனுடன் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்கிற காரணத்தினாலோ என்னவோ. ”மூன்று வருஷமாக உன்னிடமிருந்து கடிதமே வரவில்லையே! எங்கே, என்ன பண்ணிக் கொண்டிருந்தாய்? ”என்று கேட்டார்.
மூர்த்தி, சுருள் சுருளாக வாரிவிடப்பட்ட தன் கிராப் தலையைத் தடவிக் கொண்டான்.
உண்மையைச் சொல்லுவதா அல்லது அத்துடன் கற்பனையையும் கலந்து சரடு திரிப்பதா என்பது புரியாமல் சிறிது நேரம் யோசித்தான். அப்புறம் ஏதோ தீர்மானத்துக்கு வந்தவன் போல் "பம்பாயில் கபாதேவியில் ஒரு பெரிய துணிக்-கடையில் மானேஜராக இருந்தேன். அவர்கள் தான் என்னை இந்தப் பக்கம் அனுப்பி புதிசாகக் கடை திறந்தால் வியாபாரம் நடக்குமா என்று பார்த்து வர அனுப்பி-யிருக்கிறார்கள்" என்றான்.