Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (முதல் பாகம்) - 08 - சரோஜா ராமமூர்த்தி
1.8. பசுமலையும் பம்பாயும்
பார்வதி அம்மாளுடன் எழுந்து சென்ற மூர்த்தி, நேராகக் கொல்லைப் புறம் சென்று கை கால்களை அலம்பிக் கொண்டு உள்ளே வந்தான். அவன் பார்த்த இடங்களில் எல்லாம் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களுடன் இக்கிராமத்தையும் அந்த வீட்டையும் ஒப்பிட்டால் பசுமலை கொஞ்சம் கூட மாறவில்லை என்று தோன் றியது அவனுக்கு. அங்கங்கே மேடிட்ட நிலங்கள், அதன் வரப்பு ஓரங்களில் இருக்கும் கிணறுகள், அவற்றி லிருந்து இறைக்கப்படும் நீர் வாய்க்கால்களில் சுழன்று - ஓடி நிலங்களுக்குப் பாயும் காட்சி, வயல்களில் பாடுபடும் பாட்டாளி மக்கள். அவர்கள் வாழ்க்கை எள்ளளவாவது மாறி இருக்கிறதா என்றால் அதுதான் கிடை யாது. பம்பாயில் வானளாவும் கட்டிடங்களும், செல்வந்தர்கள் கூடிக் குதூகலிக்கும் ’நைட் கிளப்பு'களும் மூர்த்தியின் மனத்திரை முன்பு எழுந்தன. அங்கேதான் எத்தகைய மலர்ச்சி? அரம்பையர் போல் நாகரிகத்தில் மூழ்கித் திரியும் யுவதிகளும், யுவர்களும் அந்த நகரத்தை ஒரு பூலோக சுவர்க்கமாக அல்லவா மாற்றி இருக்கிறார்கள்!
பசுமலையின் மேட்டுக் கழனியில் தான் கிராமத்து ஏழை மக்கள் குடி இருந்தார்கள். பனை ஓலைகளால் வேய்ந்த குடிசைகள். காற்றினாலும் மழையினாலும் பிய்க்கப்பட்ட அதன் கூரைகளைப் பார்த்தால் பம்பாயின் பிரும்மாண்டமான மாளிகைக்குள் இருப்பவர்களும் இவர்களும் ஒன்றேதானா? மனிதனுக்கு மனிதன் வாழ்க்கைத் தரத்தில் இவ்வளவு வித்தியாசத்துடன் இருப்பதேன்? என்றெல்லாம் சிந்திக்கத் தோன்றும்.
ஆனால் மூர்த்தி ஒரு சீர்திருத்த வாதியோக உன்னத லட்சியங்களுக்கு இருப்பிட-மானவனோ அல்ல. கிராமத்தின் வாய்க்காலிலிருந்து அவன் மாமா வீடு வரையில் மாறவே இல்லையே என்று நினைத்துத்தான் அவன் வியப்பில் ஆழ்ந்து போனான்.
இந்த யோசனையுடன் அவன் கொல்லைத் தாழ்வாரத்தைத் தாண்டி வரும் போது வாசற்படியில் 'ணங்' கென்று தலையில் இடித்துக் கொண்டான்.