Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (முதல் பாகம்) - 19 - சரோஜா ராமமூர்த்தி
1.19. தந்தி வந்தது
அடுத்த நாள் பொழுது விடிந்தது. வழக்கம்போல் பொழுது நகர்ந்து அதற்கு அடுத்த நாளும் உதயமாகியது. பார்வதி மட்டும் கல்யாண வீட்டிலிருந்து கொண்டுவந்த பலகாரங்களை எடுத்து வந்து பாலுவுக்குக் கொடுத்தாள். கல்யாணத்தில் நடந்த விமரிசைகளைப் பற்றிப் பவானியிடம் கூறினாள். எல்லாவற்றையும் கூறிவிட்டு, ”கல்யாணம் பண்ணிக் கொண்ட பெண்ணும், பிள்ளையும் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டார்கள். அவர்களின் காதலின் உறுதியைது. ஆழத்தை, பண்பைக் கண்டு இரு தரப்பினரும் உடன்பட்டுக் கல்யாணம் நடந்ததாம்" என்று முடித்தாள் பார்வதி.
நேற்றைக்கு முந்திய நாள் சேஷாத்திரியும், மூர்த்தியும் வாதித்துச் சண்டையிட்ட சீர்திருத்தத்தைப் பற்றிப் பவானி நினைத்துப் பார்த்தாள். ’சீர்திருத்தம் என்கிற பெயரிலே எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று சொல்லி, அந்தப் பெண்களுடன் ஒருவரைப் பற்றி ஒருவருக்குத் தெரியாமல் அழைத்துக் கொண்டு, ஊரில் கண்ட இடங்களில் திரிந்து வரும் ஜோடிகள் செய்வது சீர்திருத்தமா?’ என்று பவானி உள்ளம் குமுறினாள்.
"பவானி! ஏன் என்னவோ போல இருக்கிறாய்?” என்று பார்வதி அவளை அன்புடன் விசாரித்தாள்.
பவானி மூர்த்தியைப் பற்றி மறுபடியும் பேச விரும்ப வில்லை. ஆகவே அவள் வெகு 'சாமர்த்தியமாக’ “எனக்கு மூன்று நாட்களாகவே உடம்பு சரியில்லை!" என்று கூறினாள்.
”அப்படியா? அதுதானே பார்த்தேன். உடம்பு சரியில்லை என்று என்னிடம் சொல்ல மாட்டாயோ? நீ எதற்கு அலைந்து வேலை செய்யவேண்டும்? ராத்திரி நீ ஒன்றும் சமைக்க வேண்டாம். பாலுவும், நீயும் நம் வீட்டிலேயே சாப்பிட்டு விடலாம்" என்று அன்புடன் கூறினாள் பார்வதி.
தெருவில் அவர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த கல்யாணம் பவானியை இரைந்து கூப்பிட்டார். இருவரும் எழுந்து வாசலுக்கு வந்தனர். கல்யாணத்தின் கையில் இருந்த தந்திக் காகிதத்தையும், கவர் ஒன்றையும் பார்த்துத் திடுக்கிட்டார்கள் இருவரும்.